Quantcast
Channel: மோகனனின் வலைக்குடில்
Viewing all 465 articles
Browse latest View live

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 2 (உண்மைச் சம்பவம்)

$
0
0
குன்றத்தூரின் கடைசிப் பகுதியில் இருந்தது கணேஷ் நகர். இதன் கடைசித் தெருவில், கடைசி வீடாக இருக்கும் மாடி வீடுதான் வேதாசலத்தில் வீடு.

அந்த அர்த்த ராத்திரியிலும் உள்ளே லைட் எரிந்து கொண்டிருக்க, பேச்சுக் குரல் கேட்டது.

"ஏங்க... உங்ககிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன். நேரங்கெட்ட நேரத்தில பையனை வசூலுக்கு அனுப்பாதீங்கன்னு... இப்ப பார்த்தீங்களா மணி 12.40 ஆகுது. என் பையன இன்னும் காணோம்"என்ற கமலம்மாளுக்கு வயது 42 இருக்கும். கனத்த உடம்பு. பார்ப்பதற்கு நடிகை காந்திமதியை போல இருப்பார். ஆனால் உயரம் குறைவு.

"ஏண்டி சும்மா கெடந்து புலம்பற... அவன் என்ன சின்ன பையனா... வழி தெரியாம போறதுக்கு... கூட நம்ப மாப்பிள்ளையும் போயிருக்காருல்ல... வந்துருவான்..."என்று கமலம்மாளை அதட்டிய வேதாசலத்திற்கு வயது 48 இருக்கும். காதருகே நரைத்த முடிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருந்தன. கடா மீசை வைத்து, இறுகிய முகமாகத் தெரிந்தார்.

"உங்களுக்கென்ன வாயில வந்ததை சொல்லிட்டீங்க... பெத்தவளுக்குதானே தெரியும். இன்னிக்கு நிறைஞ்ச ஆமாவாசை வேற..."

"சரி... சரி... கிடந்து புலம்பாத, நான் ரோடு வரைக்கும் போய் பார்த்துட்டு வரேன்..."என்றபடி வீட்டை விட்டு கிளம்பினார் வேதாசலம்.

அந்த ஏரியாவே தூங்கிக் வழிந்து கொண்டிருக்க,  வாயில் ஒரு சுருட்டைப் பற்ற வைத்தபடி அந்த நள்ளிரவில் ரோட்டை நோக்கி நடந்தார்.

அவர் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் குடைந்து கொண்டிருந்தது. 'சாயந்திரமே அவனுங்களை வசூலுக்கு அனுப்பிட்டேன். அப்படியே நேரமானாக் கூட பத்து மணிக்கெல்லாம் வந்திருக்கலாமே. ஏன் இன்னும் வரல..? ஏதாவது ஏடாகூடமா நடந்திருக்குமோ?'என்ற எண்ணம் வந்து வந்து மறைந்தது.

யோசித்துக் கொண்டே ரோட்டிற்கு வந்த வேதாசலம் எதிரே வந்த சைக்கிளுக்கு வழிவிட்டு விட்டு, சைக்கிள் வந்த திசையில் தன் பார்வையை ஓட விட்டார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை.

சற்று நேரம் அந்த திசையைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த வேதாசலத்தின் புருவங்கள் திடீரென்று உயர்ந்தன. தூரத்தில் தெரிந்த ஒரு வெளிச்சப்புள்ளி மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்த வெளிச்சப்புள்ளி ஒரு டிவிஎஸ்ஸில் இருந்து வந்து கொண்டிருந்தது.

'அப்பாடா வர்றது நம்ம பசங்க மாதிரிதான் இருக்கு...'என்று தன் மனதுக்குள் நினைத்தவாறு,  வாகனத்தை எதிர் நோக்கியிருந்தார். வேகமாக வந்த டிவிஎஸ் அவரைக் கடந்து போனது.

ஏமாற்றத்துடன் வாகனம் வந்த திசையைப் பார்த்தார் வேதாசலம். ஒன்றும் கண்ணுக்குத் தென்படவில்லை. பதினைந்து நிமிடத்திற்கும் மேல் காத்திருந்துவிட்டு, பொறுமை இழந்தவராய் வீடு திரும்பினார்.

* * * * * * * *

தே நேரத்தில் டிவிஎஸ் குன்றத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தது. ராமுவின் தோள் மேல் இருந்த சங்கரின் கைகள், அந்த உருவம் அவன் மேல் இறங்க ஆரம்பித்த பயத்தில் தானாக ராமுவின் இடுப்பை சுற்றி வளைத்துக் கொண்டது.

"என்னடா திடீர்னு இடுப்பைப் பிடிக்கிற..?"என ராமு கேட்க சங்கரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

சங்கரின் உடம்பில் அளவுக்கு அதிகமாக வியர்வை பெருகியதால்,  அது அவனது சட்டையை நனைத்தது மட்டுமின்றி, ராமுவின் முதுகுப் பக்கத்தையும் நனைத்தது.

"டேய் சங்கர்... என்னடா யூரின் போறியா என்ன? முதுகு இப்படி நனையுது"என கிண்டலாகக் கேட்டான் ராமு. அதற்கும் சங்கரிடமிருந்து பதில் வரவில்லை. அதற்குப் பதிலாக அவனது கை ராமுவின் இடுப்பை மேலும் இறுக்க ஆரம்பித்தது.

"டேய்.... டேய்... முதுகை நனைக்கற, வயித்த இறுக்கற... என்னடா ஆச்சி உனக்கு..?"என சற்று கோபமாகவே கேட்டான் ராமு. அப்போதும் சங்கரிடமிருந்து பதிலில்லை.

இதனிடையே வண்டி குன்றத்தூருக்குள் நுழைந்து விடத்தற்கு அடையாளமாய் சாலையின் இரு ஓரங்களிலும் நின்று கொண்டிருந்த சோடியம் விளக்குகள் முட்டைக் கண்ணை விழித்துக் காட்டுவதைப் போல் விழித்துக் கொண்டிருந்தன.

"என்னடா நான் கேட்டுகிட்டே வர்றேன்... பதிலே பேசமாட்டேங்கற... தூங்கி தொலைச்சிட்டியா..?"என்றபடியே வண்டியை சாலையின் ஓரமாக கொண்டு போய் நிறுத்தினான்.

வண்டியை நிறுத்தி விட்டு, உட்கார்ந்திருந்த படியே மெல்ல சங்கரின் கையைத் தொட்டான். அவனது கை சில்லிட்டிருந்தது.

'கை சில்லுன்னு இருக்கே...'என்று யோசித்தபடி கையை மெதுவாக விலக்கி விட்டு, தன் தலையை திருப்பி அவனது முகத்தைப் பார்த்தான்.

சங்கரின் தலை தொங்கிப் போயிருந்தது. “டேய்... தூங்காதட... இன்னும் அரை கிலோ மீட்டர் தாண்டினா வீடு வந்துடும்” என்றவாறே அவனது கன்னத்தை தட்டினான்.

அவன் கை ஈரமாகவே, சங்கரின் முகத்தை தன் கையால் நிமிர்த்திப் பார்த்தான். சோடியம் விளக்கு வெளிச்சத்திலும் அவனது முகம் இருண்டு போயிருந்தது. அதுமட்டுமின்றி அவனது கடவாயின் ஓரம் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.
அதுவரை இயல்பாகப் பேசிய ராமு, அவனுடைய இருண்ட முகத்தைப் பார்த்த பிறகு சற்றே படபடப்பிற்குள்ளானான்.

"டேய் சங்கர்... சங்கர்..."என்று அவனது கன்னத்தை தட்டி கூப்பிட்டான். பதிலில்லை.

சங்கரின் தாடையை சற்று நிமிர்த்தினான். அவன் வாயில் ஒழுகிய எச்சிலைத் துடைக்கப் போனான். அப்போது சங்கரிடமிருந்து, அவனது பல்லை “நற.. நற..” வென்று கடிக்கும் ஓசை மட்டும் கேட்டது.

சத்தத்தைக் கேட்ட ராமு ஆடிப்போய் விட்டான். "ஐயோ என்ன ஆச்சின்னே தெரியலயே..? மாமாவுக்கும் அக்காவுக்கும் நான் என்னான்னு பதில் சொல்லுவேன்..?"என்று பிதற்றியபடி, சங்கரை தன் தோள் மீது பழையபடி கிடத்திக் கொண்டு, டிவிஎஸ்ஸை கிளப்பினான்.

டிவிஎஸ்ஸின் சத்தத்தை விட சங்கர் பல்லைக் கடிக்கும் சத்தம் சங்கருக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.

சங்கர் முன்பு இருந்த எடையை விட, இப்போது அதிக எடை கூடியது போல் ராமுவுக்கு தோன்றியது.

அரைகிலோ மீட்டர் தூரத்தை அவஸ்தையுடன் கடந்து விட்டு, நேரே வேதாசலம் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான்.

வண்டி வந்த சத்தம் கேட்டதும், வராண்டாவில் கட்டிப்போட்டிருந்த பொமரேனியன் நாய் "வள்... வள்..."என்று குறைக்க ஆரம்பித்தது.

"டேய் ஜிம்மி..."என்று ராமு குரல் கொடுக்க... பழக்கப்பட்ட குரலைக் கண்டதும் குரைப்பதை நிறுத்திக் கொண்டது.

ஜிம்மியின் குரலையடுத்து, ராமுவுன் குரல் கேட்கவே இவர்களுக்காக காத்திருந்த வேதாசலமும், கமலம்மாளும் கதவைத் திறந்தபடி வந்தனர்.

"ஏம்பா இவ்வளவு நேரம்..? மணி 12.30 மேலாயிடுச்சி..? இவ்ளோ நேரதா வசூல் பண்ணுணீங்க..?"என்றவாறே வெளி கேட்டை திறந்து விட்டார் வேதாசலம்.

"என்னப்பா சங்கர் வண்டியிலயே தூங்கிட்டானா..?"என்று வாசலில் நின்றிருந்த கமலம்மாள் கேட்டார்.

ஒன்றும் பேசாமல் இருந்த ராமு, வண்டியை விட்டு கீழிறங்கி சங்கரை கைத்தாங்கலாக, இறக்கி கூட்டிக்கொண்டு வரவும்... "எம்பையனுக்கு என்னாச்சி..?"என்று கத்தியபடியே கமலம்மாள் ஓடி வந்தார்.

"என்னாச்சின்னே தெரியல அத்தை... வர்ற வழியில ஒரு பாலம் இருக்குல்ல அங்க வந்திட்டிருக்கும் போது வண்டி திடீர்னு நின்னுடிச்சி..."என்று
சொல்லியபடியே சங்கரை அழத்துக் கொண்டு கேட்டை தாண்டி வராந்தாவிற்குள் வந்தான் ராமு.

ராமுவின் குரலைக் கேட்டு வாலாட்டிக கொண்டிருந்த ஜிம்மி, சங்கரைப் பார்த்ததும் "லொள்... லொள்.."என்று பெருங்குரலில் குரைக்க ஆரம்பித்தது.

"ஏய் ஜிம்மி... என்னாச்சி உனக்கு..? சும்மாயிருக்க மாட்ட..."வேதாசலம் ஜிம்மியை அதட்ட, அதட்டலை சட்டை செய்யாத ஜிம்மி தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது.

"அடச்சே... சும்மா கிட... உன்னை வளர்த்தவனையே அடையாளம் தெரியலயா..?"என்றபடி ஜிம்மியை அதட்டினார் கமலம்மாள்.

அதற்குள் சங்கரை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான் ராமு. அதன்பிறகே ஜிம்மியின் குரல் அடங்கியது.

படுக்கை அறையில் சங்கரைப் படுக்க வைத்துவிட்டு, சற்று ஆசுவசுப்படுத்திக் கொண்டான் ராமு. சங்கரைப் பார்த்தான் அவன் முகம் களையிழந்து, இருண்டு போயிருந்தது. வாயின் ஓரம் எச்சில் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

அதைப்பார்த்த கமலம்மாள் "ஐயோ... எம்புள்ளைக்கு என்ன ஆச்சின்னே தெரியலயே..?"என அழ ஆரம்பிக்க... "செத்த நேரம் சும்மாயிருடி... என்ன ஏதுன்னு தெரியாம அழுது புலம்பாத..."என்று அதட்டிய வேதாசலம் ராமுவின் பக்கம் திரும்பி "என்ன மாப்பிள ஆச்சி..? எந்த பாலத்துகிட்ட வண்டி நின்னுச்சின்னீங்க..?"

"சிங்கபுரம் தாண்டினதுமே ஒரு பாலம் வருதுல்ல அந்த பாலத்துக்கிட்டதான் மாமா. வண்டியை எவ்ளோ நேரமா ஸ்டார்ட் பண்ணி பார்த்தேன் வேலைக்காவுல... அப்ப சங்கர் பாலத்துக்கு இடது பக்கமா பாத்துகிட்டிருந்தான்.
திடீர்னு என்னைக் கூப்பிட்டவன், மாமா அந்த இடத்துல வெள்ளையா ஒண்ணு தெரியுது மாமா''என்பதில் ஆரம்பித்து, வீடு வந்தவரை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.

"அந்த பெரிய பாலத்துகிட்டயா..?"என்று கேட்ட வேதாசலத்தின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

"ஆமாம் மாமா..."என்றான் ராமு

"அந்த இடத்துல... அந்த இடத்துல..."இந்த ரெண்டு வார்த்தை சொல்வதற்குள் வேதாசலம் முகம் குப்பென்று வியர்த்துப் போனது.

"அந்த இடத்துல... அந்த இடத்துல என்ன மாமா..?"குழப்பத்தோடு ராமு கேட்டான் .

வேதசலம் பயம் கலந்த குரலில் “அந்த இடத்துல...”

(அடுத்த வாரம் தொடரும்) 
++++++++++++++++++

கதையின் மற்ற பாகங்கள் படிக்க...

முதல் பாகம்இரண்டாம் பாகம்மூன்றாம் பாகம்,

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 3 (உண்மைச் சம்பவம்)

$
0
0
ந்த இடத்துல...என்று சொல்லத் துவங்கிய வேதாசலத்தின் நினைவுகள் பின்னோக்கி பயணித்தன.

வேதாசலத்தின் மாமன் மகன் கண்ணன். அவனுக்கு முப்பதைத் தாண்டிய வயது. திடகாத்திரமான ஆள். வேதாசலத்தின் வலது கரம் என்று சொல்லாம்.


அன்று ஒருநாள் அவனது நண்பனின் பிள்ளைகளுக்கு காதணி விழா மங்களபுரத்தில் நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அவனது மற்றொரு நண்பனுடன் அந்த ஊருக்கு சென்றான்.

நண்பன் வீட்டு விழா என்பதால் அங்கு வந்த அவனது நண்பர்களுடன் கண்ணனுக்கு தண்ணியடிக்க வசதியாகப் போய்விட்டது. நண்பனின் தயவால் குடித்தவன், போதை சற்று தலைக்கு ஏறவும் நிறுத்திக் கொண்டான்.

ஏன்டா மாப்ள அதுக்குள்ள நிறுத்திட்ட..?என்று கூட வந்த நண்பன் அக்கறையோடு கேட்க, போதும்டா... இதுக்கு மேல தண்ணி அடிச்சா வூடு போய் சேழமாட்டேன்... சீக்கிரமா போகழன்னா... எம் பொண்டாட்டி திழ்ட்டுவா... நான் கிழம்பறேண்டா...என்று உளறிக்கொண்டே எழுந்தான். விட்டால் அவர்கள உட்கார்ந்து இருக்கும் இடத்தை அளந்து விடுவது போல் தள்ளாடிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

அப்போதே மணி இரவு பதினொன்றை தாண்டிவிட்டிருந்தது. கண்ணனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் போதையில் மயங்கி படுத்து விட்டனர். கண்ணனுடன் வந்த நண்பனும் மட்டையாகி விட்டிருந்தான்.

தள்ளாடியபடியே நடந்தவன், தட்டுத் தடுமாற்றியபடியே போய்ழ்ட்டு வரேண்டா...எனதிரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு அவனுடைய யமஹா வண்டியை நெருங்கினான்.

வண்டியை நெருங்கியதும் சாவியை சட்டை பாக்கெட்டிலிருந்து துழாவி எடுத்து யமாஹாவிற்குள் பொருத்தினான். கிக்கரை மூன்று முறை காலால் தடவித் தடவிப் பார்த்தான். ஒரு வழியாக கிக்கரைக் கண்டுபிடித்தவன் ஓங்கி ஒரு உதை விட்டான்.

வாங்கிய உதையை தாளாத யமஹா ‘இதோ கிளம்பிட்டேன் எசமான்என்பது போல உறுமியது. வண்டியில் உட்கார்ந்தவன், அந்த போதையிலும் வண்டியை தெளிவாக சாலையில் விரட்டினான். அந்த கிராமத்து சாலையில் இருட்டை கிழித்தபடி அவனது யமஹா சென்றது.

மங்களபுரத்திலிருந்து குன்றத்தூருக்கு வர பதினைந்து கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். நேரம் இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த கிராமத்து சாலையில் வாகனங்கள் ஏதுமில்லை.

அந்த சாலையிலிருந்து பிரிந்து சேலம் டூ கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டி திரும்பியது. சாலையின் ஓரத்தில் இருந்த வழிகாட்டிப் பலகை குன்றத்தூருக்கு இன்னும் 14 கிலோ மீட்டர் என காட்டியது.

அந்த தேசிய நெடுஞ்சாலையிலும் அவ்வளவாகவாகனங்கள் வரவில்லை. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து போய்க்கொண்டிருந்தன.
கண்ணன் சற்றே போதையில் இருந்ததால் யமஹாவை தடுமாறியபடியே ஓட்டிக் கொண்டிருந்தான்.

அந்த போதையிலும் அவன் மனைவி காலையில் சொன்னது நினைவிற்கு வந்தது ‘காது குத்துக்கு நானும் வரமாட்டேன், எம்புள்ளைங்களையும் அனுப்ப மாட்டேன். என் தம்பி வீட்டு விஷேசத்துக்கு நீ வரமாட்டீங்க... ஆனா உங்க பிரெண்டு வீட்டு விஷேசத்துக்கு மட்டும் நாங்க வரணுமாக்கும். உங்களுக்கு வேணும்னா நீங்க மட்டும் போங்க... ஆனா ராத்திரி ஒழுங்கா வீடு வந்து சேரல..? அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..!

திடீரென்று வீசிய காற்றில், தன் தலையை சிலுப்பியபடி நினைவிலிருந்து மீண்டவன், ‘சீக்கிரம் வீட்டிற்கு போகணுமேஎன்று நினைத்தவாறு அந்த போதையிலும் யமாஹாவை வேகமாக விரட்டினான்.

‘சிங்கபுரம் ஊராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறதுஎன்று ஊர் எல்லையில் உள்ள மஞ்சள் வரவேற்பு பலகை அவனை வரவேற்றது.
சிங்கபுரத்தை தாண்டியதும் பெரிய பாலம் கண்ணுக்கு தென்பட்டது.

பாலத்தை நெருங்கிய பின்னும் வேகத்தை குறைக்காமல் பாலத்தின் இடது வளைவில் சென்றான். அப்போது எதிரே வந்த டேங்கர் லாரியின் ஹெட்லைட் வெளிச்சம் கண்ணனின் கண்ணை சில நொடிகள் ப்யூஸ் ஆக்கியது.

போதையோடு சேர்ந்து, லாரியின் வெளிச்சமும் கண்ணனை தடுமாற வைத்தது. அந்த தடுமாற்றத்தில் யமஹாவை இடது புறம் வளைத்து ரோட்டை விட்டு கீழே இறக்கினான்.

லாரி டிரைவரும் எதிர்பாராத திடீர் நிகழ்வால் லாரியை இடது பக்கம் திருப்ப, லாரியும் ரோட்டை விட்டு இடது புறமாக யமாஹாவை நோக்கி இறங்கியது.

எல்லாம் கண நேரத்தில் நிகழ்ந்து விட, டேங்கர் லாரியின் டயரில் தவளை சிக்கிக் கொண்டது போல யமஹா சிக்கிக் கொண்டது. அடியில் சிக்கிய யமஹாவை தேய்த்த படியே இடது பக்கத்தில் இருந்த பள்ளத்தில் அந்த டேங்கர் லாரி இறங்கியது.


லாரிக்கு அடியில் மாட்டிய கண்ணனின் உயிர், கண்மூடித் திறப்பதற்குள் காற்றில் கலந்து போனது. அனது ப்ளூ  கலர் யமஹா, அவனது ரத்தச் சிதறலால் சிவப்பு மயமாய் மாறிப்போனது.

எல்லாம் முடிந்து போகவே லாரியிலிருந்த கிளீனர் கீழே குதித்துப் பார்த்தான். பார்த்தவன் அண்ணே... ஆள் பூட்டான்ணே... வண்டியை எடுங்கன்ணே கிளம்பிடலாம்என்று அவன் சொன்னதுதான் தாமதம், உடனே டேங்கர் லாரியை ரிவர்ஸ் எடுத்து, ரோட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தினான் லாரி டிரைவர்.

அதற்குள் லாரிக்குள் குரங்கைப் போல் தாவி ஏறிய கிளீனர் அண்ணே விடுன்னே போலாம்…”என பரபரத்தான். அடுத்த சில வினாடிகளில் அந்த டேங்கர் லாரி அந்த இடத்தை விட்டு சிட்டாய் பறந்து போனது.

கண்ணன் மட்டும் அந்த இடத்தில் உயிரற்றுக் கிடந்தான். ஆல்கஹால் கலந்த ரத்தம் அவன் மேலுள்ள விசுவாசத்தால் அவனை சுற்றி பாதுகாப்பது போல் குளமாகி நின்றது.

மாமா.. மாமா...என வேதாசலத்தை ராமு பிடித்து உலுக்கவும், அவர் சுயநினைவிற்கு வந்தார்.

மாப்ள... அந்த இடத்துலதான், ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் மச்சான் கண்ணன் ஆக்ஸிடெண்டாகி செத்துப் போயிட்டான். அவனுடைய ஆவிதான்....

வேதாசலம் சொல்லி முடிப்பதற்குள் இடை மறித்த ராமு அட ஏன் மாமா.. நாம ரெண்டாயிரத்தி ஒண்ணுல இருக்கோம். இன்னும் ஆவி, பேயி, பிசாசுன்னு பேசிகிட்டு... இவன் வேற எதையோ நினைச்சி பார்த்து பயந்திருக்கான். அந்த பயத்துலதான் இவனுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கும் மாமா..”என்று ராமு பேசிக்கொண்டிருக்கும் போதே...

அய்யோஉங்க பேச்சை அப்புறமா வச்சிக்கங்கஎன் புள்ளைய என்னால பாக்க முடியல... என்னங்க நம்ம ராமநாதனை வரச்சொல்லுங்க…”என்று அழுதபடியே கத்தினார் கமலம்மாள்.

அதுதான் சரியென்று நினைத்த வேதாசலம், ராமுவிடம் மாப்ள... நம்ம சிகாமணி டாக்டரோட ஆஸ்பத்திரி தெரியும்ல…”

தெரியும் மாமா...

அவர்கிட்ட கம்பௌண்டரா வேலை பார்த்திகிட்டிருக்க ராமனாதன், நம்ம பையன்தான். அவன் இப்போ சின்னதா ஒரு ஆஸ்பத்திரி வச்சிருக்கான். அவனை போய் கூட்டி வா...

சரி மாமா...என்றராமு அடுத்த நிமிடம் டிவிஎஸ்ஸோடு கிளம்பிப் போனான்.

பெட்டில் படுத்துக் கிடந்த சங்கரைப் பார்த்தார் வேதாசலம். அவனது இடது கடவாயின் ஓரம் எச்சில் வழிந்து கொண்டே இருந்தது. அவனது கன்னத்தை தட்டி தட்டி கூப்பிட்டார்.

சங்கர்... எப்பா சங்கர்... அப்பாவை பாருடா... என்னடா ஆச்சி  உனக்கு...என்றார்

அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.

அடியேய்... போய் தண்ணி கொண்டுட்டு வா...என வேதாசலம் சொல்ல, கமலம்மாள் சமயலறைக்குள் ஓடிச் சென்று ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து வந்தார்.

அதற்குள் தனது மடியில் சங்கரை எடுத்து கிடத்திக் கொண்ட வேதாசலம், கமலம்மாளிடம் இருந்து டம்ளரை வாங்கினார்.

வாங்கிய தண்ணீரை சங்கரின் வாயில் புகட்ட, தண்ணீரை அவனது வாய் ஏற்றுக் கொள்ளாமல் அப்படியே வெளியில் துப்பியது. சில்லிட்டுக் கிடந்த உடல் இப்போது நெருப்பாய் கொதிக்க ஆரம்பித்தது.

அவனது முகத்தில் தண்ணீரை தெளித்துப் பார்த்தார். தண்ணீர் அவன் முகத்தில் பட்டதுதான் தாமதம்... அதை ஏற்றுக் கொள்ளாதவன் போல ம்ஹீம்... ம்ஹீம்... ம்ஹீம்...என அரற்றினான்.

அதைப் பார்த்த கமலம்மாள் மறுபடியும் அழ ஆரம்பித்தார் ஐயோ எம்புள்ளைக்கு என்னசின்னே தெரியலயே... மாரியாத்தா... காளியாத்தா...என பெருங்குரலெடுத்து அழவும், அந்த அழுகுரல் கேட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்த வேதாசலத்தின் இரண்டாவது மகன் சந்திரனும், கடைசி மகளான செல்வியும் திடுக்கிட்டு எழுந்தனர்.

எழுந்தவர்கள் கமலம்மாளிடம் வந்து... கண்ணைக் கசக்கியபடியே ஏம்மா அழுவுற...என்று ஒரு சேரக் கேட்டார்கள்.

கேட்டபடியே தலையை திருப்பிய சந்திரன் வேதாசலத்தின் மடியில் இருந்த சங்கரைப் பார்த்தும் பயந்து போனான்.

அப்பா... அண்ணனுக்கு என்னப்பா ஆச்சி... ஏன்பா அண்ணன் இப்படி இருக்கான்…”என சந்திரன் கேட்பதற்கும், கம்பௌண்டர் ராமனாதன் கேட்டைத் திறந்து உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அவன் பின்னாடியே ராமுவும் வந்தான்

ராமனாதா என் பையனுக்கு...என வேதாசலம் உடைந்து போன நிலையில் குரல் கொடுக்க...

அட என்னண்ணேகுடும்பத்துக்கே பெரியாளு நீங்க... நீங்களேஇப்படி மனசு தளரலாமா..? ராமு எல்லாத்தையும் வண்டியில வரும்போது சொல்லிட்டாப்ள... அதான் நான் வந்துட்டேன்ல. இனிமே நான் பாத்துக்கறேன். நீங்க தைரியமா இருங்க...என்று பதில் சொன்னபடியே சங்கரை நெருங்கினான் ராமநாதன்.

சங்கரின் கண்ணை டார்ச் லைட் அடித்து பரிசோதித்தான். நாடி பிடித்துப் பார்த்தான். மேலும் சில வழக்கமான பரிசோதனைகளை செய்தவன் ஒண்ணுமில்ல இது ஏதோ புதுக்காய்ச்சல் போல இருக்கு...இப்போதைக்கு ஊசி போடறேன். மருந்து எழுதி தரேன். ஒரு மாத்திரைய மட்டும் சாப்பாட்டுக்கு முந்தி கொடுங்க. நாளைக்கு நைட்டு வந்து பாக்கறேன்... பயப்படாதீங்க காய்ச்சல்தான்என்ற ராமநாதன், தான் கொண்டு வந்திருந்த மருந்துகளில் காய்ச்சல் குறைவதற்கு ஒரு ஊசியும், தூங்குவதற்கு ஒரு ஊசியையும் போட்டுவிட்டு மருந்தை எழுதிக் கொடுத்தான்.

சரி மாமாநான் போய் இவரை விட்டுட்டு வாரேன் என்று ராமு…”கிளம்ப ஆயத்தமானான்.

சரிப்பா…”என்ற வேதாசலம் நூறுரூபாய் நோட்டை ராமனாதனிடம் கொடுக்க, அதை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ராமுவுடன் கிளம்பிப் போனான் ராமனாதன்.


அவன் கிளம்பிப் போன அடுத்த சில நிமிடங்களில் தெருவில் படுத்துக் கிடந்த ஒரு நாய் ஊ......ஊ.....ஊ...என பெரிதாக ஊளையிட ஆரம்பித்தது.

அந்த சத்தத்தைக் கேட்ட மறு வினாடி..!

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 4 (உண்மைச் சம்பவம்)

$
0
0
நாயின் ஊளை சத்தத்தைக் கேட்ட மறு வினாடி சங்கரும் மெலிதாக ஊளையிட ஆரம்பித்தான்.

அதைக் பார்த்த வேதாசலம் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்படியே சிலை போல் ஸ்தம்பித்து நின்றார்கள்.

ராமனாதன் போட்ட ஊசியும், மருந்தும் வேலை செய்யவே சற்று நேரத்திற்கெல்லாம் அப்படியே தூங்கிப்போனான் சங்கர்.

அதிர்ச்சியில் இருந்தவர்களின் ஒவ்வொருவர் முகத்திலும் கவலை அப்பிக் கொண்டது. அவர்களை வேதாசலத்தின் குரல் நிமிர வைத்தது போங்க... எல்லோரும் போய் படுங்க... மணி இப்பவே மூணாகுது... எல்லாம் காலைல பேசிக்கலாம்... சங்கருக்கு ஒண்ணும் ஆகாதுஎன்றார்.


நான் பையன் பக்கத்திலயே இருக்கேன். நீங்க போய் படுங்க…”என்று கமலம்மாள் சொல்லவும், வேதாசலமும் அவரது இரண்டாவது மகன் சந்திரனும் உள்ளே சென்று படுத்துக் கொண்டனர்.

கடைக்குட்டி செல்வி மட்டும் கமலம்மாள் அருகே படுத்துக் கொண்டாள். சங்கரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கமலம்மாளும் அப்படியே தூங்கிப் போனார்.

காலைக் கதிரவன் தன் சிவப்பு நிறத்தை தொலைத்து விட்டு வெள்ளை நிறத்திற்கு மாறியிருந்தான். காகங்கள் கரைந்து கொண்டிருக்க, சேவல் ஒன்று காகங்களின் சத்தங்களுக்கு இணையாக கூவிக் காட்டியது.

சேவலின் குரல் கேட்டு எழுந்த கமலம்மாள் சங்கரின் முகத்தைப் பார்த்தார். அவனது முகம், நேற்று இரவு பார்த்ததை விட மிகவும் மோசமான அளவில் சூம்பிப் போயிருந்த்து. கண்கள் உள்ளே போயிருந்தன. இன்னமும் அவன் தூங்கிக் கொண்டே இருந்தான்.
அவனை நெருங்கி, அவன் நெற்றியில் கைவைத்துப் பார்த்த கமலம்மாளை, காலிங் பெல் சிணுங்கி அழைத்தது

யாரது..?”என்று குரல் கொடுத்தபடியே கதவைத் திறக்க வெளியே கமலம்மாளின் அம்மாவான பாவாயி நின்றிருந்தார். 60 வயது தேகத்தில் அனைத்தும் நரைத்துப் போயிருந்தன. முகத்த்தில் மகளை பார்த்து விட்ட மகிழ்ச்சி தெரிந்தது.

அவரைப் பார்த்ததும் வாம்மா..”என்றார் கமலம்மாள். அவர் குரலில் தன் அம்மா வந்திருக்கிறாரே என்ற மகிழ்ச்சி துளியுமில்லை.

எப்படிம்மா இருக்க... என் பேரபிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா..?என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த பாவாயியின் கண்களில் சங்கர் தென்பட்டான்.

அவனிருந்த நிலையைக் கண்டதும் பதறியபடி யெய்யா சங்கரு... சங்கரு...அந்த தள்ளாத வயதிலும் ஓடிச் சென்று தன் பேரனை மடியில் கிடத்திக் கொண்டார்.

அடியேஎன்னடி ஆச்சு எம்பேரனுக்கு.. என்னடி ஆச்சு... ஏண்டி எம்பேரன் இப்படி கிடக்கிறான்...என்று அழுதபடியே கேட்டார் பாவாயி.

ஆரம்பம் முதல் இறுதி வரை கமலம்மாள் சொல்லி முடிக்கவும், வேதாசலம் உள் அறையிலிருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

வெளியே வந்தவர் பவாயியைப் பார்த்ததும் வாங்க அத்தை…”என்றார். அவர் குரலிலும் மகிழ்ச்சி இல்லை.

பாவாயி தன் சேலை தலைப்பால் கண்ணீரை துடைத்தபடியே வரேன் சாமி... புள்ளையை இப்படி ஆகறதுக்கு வுட்டுட்டீங்களே…”என்றார்.

நான் என்ன அத்தை செய்யட்டும். வசூலுக்கு நீ போகதடா... ராமு மட்டும் போயிட்டு வரட்டும்னேன். அத கேக்காமா போனான். இப்படி நிலவரம் தெரியாம திரும்பி வந்தான். இதுவரைக்கும் இவனுக்கு என்ன ஆச்சின்னே தெரியல… நேத்து ராத்திரி ராமனாதன் வந்து பார்த்துவிட்டு போனான். ஏதோ புதுகாய்ச்சலுங்கறான்என்றார் வேதாசலம்

பார்த்தா காய்ச்சல் மாதிரி தெரியலயே சாமி..? பையன் வாயில எச்சி ஒழுதுகிட்டே இருக்கு. முகமும் ரொம்ப இருட்டடைஞ்சு போய் கிடக்கே..?’’

ஒண்ணும் ஆகாது அத்தே... இன்னிக்கு சாயந்திரம் ராமனாதன் வரேன்னிருக்கான். அவன்கிட்ட விசாரிப்போம்…”என்றவாறே வெளியில் கிளம்பிப் போனார் வேதாசலம்.

சரிம்மா... நீ உன் பேரனை பாத்துக்கிட்டிரு... நான் போய் வேலையை பாக்கறேன்…”என்றபடி சமையலறை பக்கம் போனார்.

பாவாயியின் குரல் கேட்டு எழுந்த செல்வி பாவாயியைக் கண்டதும் பாட்டி…”என்றாள்.

வா சாமி...என்ற பாவாயி தனக்கு பிடித்த தெய்வங்களின் பெயரையெல்லாம் அழைத்தவர்,என் பேரனை நீங்கதான் காப்பாத்தணும் சாமிகளா…”என்றபடி கையோடு கொண்டு வந்திருந்த திருநீரை சங்கரின் நெற்றியில் பட்டையாக இழுத்து விட்டார்.அப்படியே செலவிக்கும் வைத்து விட்டார். 

சங்கருக்கு இப்படி ஆகிவிட்டது என்று தெரிந்ததும் அவனது சகநண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் வந்து விசாரித்து விட்டுப் போயினர்.

*******

ல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான் நவநீதன். குன்றத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., படித்துக் கொண்டிருக்கிறான்.


சங்கரின் நண்பனாக சிறுவயது முதல் இருந்தவன்தான் இந்த நவநீதன். இருவருக்கும் ஒரே வயதுதான்.

அடுத்தடுத்த தெருவில் இருவரும் வசித்துக் கொண்டிருந்தாலும் இரு குடும்பத்திற்குமிடையே ஏற்பட்ட குழாயடிச் சண்டையால், இவர்களின் நட்பு தெரு அளவில் முறிந்து போய் விட்டது. இருப்பினும் கிரிக்கெட் விளையாடும் இடங்களில் இவர்களது நட்பு தெடர்ந்தது.

நவநீதன் வீட்டிற்கு வந்த போது மாலை 5 மணி. வீட்டிற்கு வந்தவன் சில புத்தகங்களை எடுத்து சைக்கிளில் வைத்துக் கொண்டு நூலகத்திற்கு கிளம்பிச் சென்றான்.

இரண்டு மணி நேரம் கழித்து நூலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் அவனது நண்பன் சீனியைப் பார்த்தான்.
பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி விட்டு டேய் மாப்ள...என்னடா ஆச்சி உனக்கு..? ஏண்டா என்ன பார்க்க வரல..?

ஸாரி மச்சி... ரொம்ப வேலை அதான் உன்ன பாக்க வர முடியலமச்சி

“சரி பரவால்ல விடு... ஆமா, ஞாயித்துக் கிழமை ஆனாலே கிரிக்கெட் விளையாடறதுக்கு கிரவுண்டுக்கு வந்துடுவ? ஏண்டா இப்பல்லாம் வரமாட்டேங்கற..? நீ நல்ல பௌலர் ஆச்சேடா..? நீ இல்லாம டீமே ஒரு மாதிரியா இருக்கு தெரியுமா..?

அடப்போ மச்சி... அந்த சங்கர் பய எப்போ என் பௌலிங்கை அடிச்சி கிழிச்சானோ, அதிலிருந்து கிரிக்கெட் மேலேயே வெறுப்பு வந்திடிச்சு... அத விடு மச்சி நம்ம பசங்க எல்லாம் எப்படிடா இருக்காணுங்க..?

எல்லாம் நல்லா இருக்காணுங்கடா. இப்பெல்லாம் தினமும் காலைல ஆறுமணிக்கே கிரவுண்டுக்கு வந்துடறானுங்க...நீ மட்டும்தான் மிஸ்ஸாகுற...

“கோச்சுக்காதடா... வேலை அதிகமாயிடிச்சி... ஆமா அந்த சங்கர் தடியன் எப்படி இருக்கான்..?”

தெரியலடா.. ரெண்டு நாளா கிரவுண்டுக்கே வரல... ஆளயே பார்க்க முடியல…”

சரிடா மச்சி.. எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்பறேன். முடிஞ்சா இந்த ஞாயித்துக் கிழமை விளையாடறதுக்கு வர பாக்கறேன்...’’என விடைபெற்றுக் கொண்டான் சீனி.

சரி மாப்ளஅப்ப நானும் வீட்டுக்கு கிளம்பறேன்…”என்றபடியே நவநீதன் தனது சைக்கிளை கிளப்பினான். வழியில் அங்கே, இங்கே என சுற்றி விட்டு, வீடு வந்து சேர்ந்த போது மணி இரவு எட்டு முப்பது ஆகி இருந்தது.

வந்ததும் கைகால்களை கழுவிக் கொண்டு உட்கார்ந்தான். சன் டிவியில் பெப்ஸி உமா போலியான புன்னகை ஒன்றை உதிர்த்தவாறே யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

டிவி பார்த்தபடியே அவனது அம்மா போட்ட சாதத்தை நவநீதன் சாப்பிட்டு முடிக்கவும், மணி ஒன்பது என்று அவன் வீட்டு கடிகாரம் மணியடிப்பதற்கும் சரியாக இருந்தது.

காற்று வாங்குவதற்காக வெளியில் வந்த நவநீதனை, பக்கத்து தெருவிலிருந்து வந்த அழு குரல்கள் அவன் கவனத்தை ஈர்த்தது.
யாரு இந்த நேரத்துல அழுதுகிட்டு இருக்கிறது என்று யோசித்தபடியே அங்கே போனான்.

பாவாயி ஐயோ... என் பேரனை பேய் பிடிச்சிருச்சி போலருக்கே...அடி மகமாயி உனக்கு கண்ணில்லையா...என்று அழுதபடியே தெய்வங்களை வசைபாடிக் கொண்டிருந்தார்.

அங்கே அவனுடன் கிரிக்கெட் விளையாடும் பையன்கள் அனைவரும் சங்கரின் வீட்டு முன்பு நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்த நவநீதன் என்னடா எல்லாரும் சங்கர் வீட்டு முன்னாடி நிக்கறீங்க..?’’ என்று கேட்டான்

அங்கே நின்றுருந்தவர்களில் ஒருவனான கார்த்திக், சங்கருக்கு நடந்தவற்றை சுருக்கமாக சொல்லவும், நவநீதன் அதை நம்பவில்லை.

போடாங்... எதாச்சும் அசிங்கமா சொல்லிடப் போறேன். பேய் பிடிச்சுடுச்சு, பிசாசு அடிச்சிடுச்சின்னு... ஏமாந்தவன்கிட்ட போய் இந்த கதையெல்லாம் போய் சொல்லு…”என்றான்.

அப்போது சங்கரின் வீட்டு முன்பு,வேகமாக வந்த ஆட்டோ ஒன்று அவசரமாய் பிரேக் போட்டு நின்றது.

அடுத்த நிமிடமே வீட்டின் உள்ளேயிருந்து சங்கரை வேதாசலமும், அவனுடைய மாமா ராமுவும் கைதாங்கலாக ஆட்டோவிற்கு அழைத்து வந்தார்கள்.

சங்கரைப் பார்த்த நவநீதன் முகத்தில் ஆயிரம் அதிர்ச்சி ரேகைகள் ஓடின. கிரிக்கெட்டில் இவன் பேட் செய்ய வந்தால் ஒரு மாமிச மலை பேட் செய்வது போல் வருவான். இரும்பு போல இருக்கும் கார்க் பந்தை அனாசயமாக சிக்ஸருக்கு விரட்டி அடிப்பான். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் போன்று இருந்தவன், இப்போது பார்பதற்கு ஓமக்குச்சி நரசிம்மன் போல ஒட்டிப் போய் தெரிந்தான்.

அதிர்ச்சியிலிருந்து மீளாமல், அருகிலிருந்த கார்த்திக்கிடம் இவனுக்கு என்னாச்சிடா... பாடிபில்டர் மாதிரி இருந்த இவன் உடம்பு,ரெண்டே நாள்ல இப்படி ஒணான் மாதிரி ஒடுங்கிப் போச்சு?


எல்லாம் பேய் பண்ணற வேலைணா…”என அவன் திகில் கலந்த குரலில் பதில் அளித்தான்

நான் இதை நம்பமாட்டேன். சங்கைர இப்போ எங்கடா கூட்டிகிட்டு போறாங்க?

தேவியாக்குறிச்சியில ஒரு பாய் இருக்குறாராம். அவர் இந்த மாதிரி பேய்களை ஓட்டுறதுல கில்லாடியாம். அவர்கிட்ட போனா சரியாயிடும்னு அங்கே போகப் போறாங்கண்ணா…”என்றான்கார்த்திக்.

அப்ப ராமனாதன்கிட்ட காண்பிச்சது என்னாச்சு..?”

அடஅவன் டாக்டரா இருந்தாதானே .. அவனே கம்பௌண்டரா இருந்தவன்... அவன் கொடுத்த ஊசி மருந்து எதும் வேலைக்காகலையாம்..?” என்றான் கார்த்திகிற்க்கு அருகிலிருந்த பெச்சாமி.

அவனுக்கு பேய் பிடிச்சிருக்கா இல்லையான்னு நான் நேர்ல பார்க்கணும். அதனால நானும் இவங்க கூட போறேன். என் அம்மாகிட்டஎவனும் சொல்லிடாதிங்கடா...என்றபடி நவநீதனும் ஆட்டோவிற்குள் ஏறப் போனான்.

ஆட்டோவிற்குள் சங்கரின் அம்மா, சங்கர், சங்கரின் சித்தி, ஆகியோர் அமர்ந்திருக்க, நானும் துணைக்கு வரேன்…”என்றபடி அவர்களுடன் புற ஓரத்தில் நவநீதன் உட்கார்ந்து கொண்டான்.

ஆட்டோ சீட் பகுதி முழுதும் இவர்களனைவரும் உட்காருவதற்கே சரியாக இருந்த்து. இதனால் வேதாசலத்திற்கு உட்கார இடமில்லாமல் போனதால், கால் வைக்கும் இடத்தில் வேதாசலம் அமர்ந்து கொண்டார்.

கீழே உட்கார்ந்தவர் சங்கரின் கைகளைப் பிடித்த படி, அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க ஆட்டோ விர்ரென்று கிளம்பியது.

டிவிஎஸ்ஸில் ராமுவும், அவனுடைய நண்பன் வெள்ளியங்கிரியும் ஆட்டோவை பின் தொடர்ந்து வந்தார்கள்.

சேலம் டூ கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் திரும்பிய ஆட்டோ, கள்ளக்குறிச்சி இருக்கும் திசையில் திரும்பியது. தேவியா குறிச்சிக்கு குன்றத்தூரிலிருந்து சரியாய் 17 கிலோ மீட்டர் தூரம். 40 நிமிடத்தில் அந்த ஊரை தொட்டு விடலாம்.

தேவியாக்குறிச்சியை நோக்கி ஆட்டோ அந்த இரவு நேரத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்க, டிவிஎஸ்ஸும் ஆட்டோவை பின் தொடர்ந்தது.

சங்கரின் நிலையைக் கண்டு வேதாசலம் அழ ஆரம்பித்தார். அதைக் கண்டு கமலம்மாளும் அழ, சங்கரின் சித்தியான சிங்காரியோ என்ன மாமா நீங்களே இப்படி அழலாமா.. பாருங்க அக்காவும் அழுவுது.. எல்லாம் சரியா போயிடும் அழாதீங்க...’’என்று தேற்றினாள்.

சிங்காரியின் ஆறுதலால் சற்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டார் வேதாசலம். ஆனால் அவரது கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.

இரண்டு கிலோ மீட்டர் தூரம் கூட ஆட்டோ போயிருக்காது வேதாசலம் திடீரென்று விகாரமாக சிரிக்க ஆரம்பித்தார். அவர் கண்ணீல் குரூரம் கொப்பளித்தது. அவரும் தன் பல்லை நறநறவென்று கடிக்க ஆரம்பித்தார்.

அப்போது..?

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 5 (உண்மைச் சம்பவம்)

$
0
0
ப்போது.... வேகமாய் போய்க்கொண்டிருந்த ஆட்டோ திடீரென்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு ஊமையானது.

விகாரமாய் சிரிக்கத் தொடங்கிய வேதாசலம், திடீரென்று கர்ண கடுரமாய் கத்த ஆரம்பித்தார்.

“டேய்... எம்புள்ளைய காப்பாத்த கருப்பசாமி இருக்கான்... எல்லாத்தையும் அவன் பாத்துக்குவான்...” என்றபடியே பல்லை நற நறவென்று கடித்தார்.

ஆட்டோ திடீரென்று நின்றதால் கூட அரண்டு போகாத ஆட்டோ டிரைவர், வேதாசலத்தின் திடீர் குரலால் சற்று அரண்டு போனான். ஆட்டோவின் இயக்கம் நின்றுபோனதால் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான்.

‘போன சவாரிக்கு முன்புதானே டீசல் டேங்க் புல் பண்ணினேன்? புது ஆட்டோ இது... ஏன் நின்னு போச்சு?’ என மனதிற்குள் தீவிரமாய் யோசித்தபடியே ஆட்டோவின் கை கிக்கரை, தடக் தடக்கென்று தூக்கி அடித்தான். ஆட்டோவிற்கு உயிர் வருவதாய்த் தெரியவில்லை.

இதனிடையே குரூரமாக சிரித்துக் கொண்டிருந்த வேதாசலம் திடீரென அழ ஆரம்பித்தார். “ஏய்... எம்பையன விட்டுடு... எதுக்கு எங்க பின்னாடியே வர... வெள்ளையா வந்து தொலையறியே...” என ஆட்டோவின் பின்புறமாய் பார்த்து கதறியவர், “எப்பா ஆட்டோ டிரைவர் அது ஆட்டோ பின்னாடியே வருதுப்பா... சீக்கிரம் எடு, இல்லன்னா அது ஆட்டோவை பிடிச்சிடும்... சீக்கிரம்… சீக்கிரமா ஆட்டோவை எடு...” என்று கத்தினார்.



 இவரது திடீர் எச்சரிக்கையால் ஆட்டோவில் இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். ஆட்டோ டிரைவரின் முதுகு தண்டு சில்லிட்டுப் போனது போல் இருந்தது.

‘என்னடா இது? பேய் சவாரிகிட்ட போய் மாட்டிகிட்டமே... புது ஆட்டோ திடீர்னு நின்னதுக்கு இதுதான் காரணமா இருக்குமா..?’ என்ற உதறல் அவனுக்குள் எழும்ப, வண்டியின் கிக்கரை வேகமாக இழுத்து அடித்தான். “வ்ர்ர்ரூம்...” என்ற படியே ஸ்டார்ட் ஆனது.

ஸ்டார்ட் ஆனதுதான் தாமதம், ஆட்டோவை புயல் வேகத்தில் கிளப்பினான். அந்த தேசிய நெடுஞ்சாலையில் பலமுறை சவாரி செய்திருந்தாலும், இந்த வேகத்தில் அவன் இதுவரை போயிருக்கமாட்டான் என்று அவனுக்கே தோன்றியது.

நவநீதனிற்கு ஒரே குழப்ப மயம். ஆட்டோவின் பின்புறம் திரும்பித் திரும்பி பார்த்தான். வேதாசலம் சொன்னது போல ஒரு உருவமும் தென்படவில்லை. எங்கும் இருளாகத்தான் இருந்தது. ‘இந்த சாமி, கீமி..., பேய், பிசாசு எதுவுமே இல்லன்னு சொல்ற ஆள் நான். நம்ம கண் முன்னாடியே இவர் வெள்ளையா உருவம் வருதுங்கறாரே’ என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

அந்த சிந்தனையை கலைப்பது போல் மீண்டும் வேதாசலம் தன் பற்களை கடிக்க ஆரம்பித்தார். “ஏய்... வண்டி பின்னாடியே வரியா... நான் கூட இருக்கிறேங்கிற பயம் கொஞ்சம் கூட இல்லையா உனக்கு... வா... வா... கருப்பசாமியா... நீயான்னு பாக்கறேன்...” என்று இருட்டைப் பார்த்து கத்தினார்.

இதைக் கேட்ட கமலம்மாள் டிரைவரைப் பார்த்து கத்தினார் “இந்தாப்பா ஆட்டோ டிரைவர், என்ன நடந்தாலும் சரி. ஆட்டோவை மட்டும் எங்கயும் நிறுத்தாத. பாய் வீட்டுக்கு முன்னாடிதான் வண்டிய போய் நிறுத்தணும்”

இவர்களிருவரும் பேசுவதைக் கேட்ட ஆட்டோ டிரைவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது... அவன் தன் மனதிற்குள் அவன் இஷ்ட தேவதைகளை வேண்டிக் கொண்டான் போல, அவன் முணுமுணுத்தது, நவநீதன் காதில் துல்லியமாய் கேட்டது. ‘இன்னும் நாலே கிலோ மீட்டர்தான். தேவியாக்குறிச்சிக்கு போயிடலாம்’ என்று எண்ணியபடியே, அந்த பயத்திலும் ஆட்டோவை வேகமாக விரட்டினான்.

வேதாசலம் மீண்டும் ஒரு முறை திடீரென்று அழ ஆரம்பித்தவர். “டேய் சங்கரு... நம்ம குலதெய்வம் கருப்பசாமி உன்னை காப்பாத்துவாண்டா... வெள்ளை உருவம் உன் பின்னாடியே வருதுன்னு கவலப்படாத... கருப்பசாமி இருக்காண்டா” என்றார். சங்கர் எந்த சலனமுமில்லாமில் தூங்கிக் கொண்டிருந்தான்.

நவநீதன் முகத்தில் குழப்பரேகைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆட்டோவின் பின்புறம் தைரியமாகத் திரும்பிப் பார்த்தான். உருவம் ஏதும் தென்படவில்லை. அதற்கு மாறாக ஆட்டோவின் பின்புறம், சுமார் 10 மீட்டர் இடைவெளியில் ராமுவும் அவனது நண்பன் வெள்ளியங்கிரியும் டிவிஎஸ்ஸில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

வெள்ளியங்கிரி திடகாத்திரமான ஆள். 90 கிலோ எடை உள்ள உருட்டுக்கட்டை உடம்பு. அவனை வைத்துக் கொண்டு டிவிஎஸ்ஸை ஓட்டி வருவதற்கு ராமு சிரமப்பட வேண்டியிருந்ததை நவநீதன் கவனிக்கத் தவறவில்லை.

திடீரென்று வேதாசலத்திடமிருந்து எழுந்த கைத்தட்டல் சத்தம், நவநீதன் பார்வையை ஆட்டோவிற்குள் மீண்டும் திரும்ப வைத்தது. “வா... வா... ஆட்டோ பின்னாலயே வரியா..? வா உன்னை நான் பாத்துக்கறேன்” என்று கத்திய வேதாசலத்தின் நெற்றியில், கமலம்மாள் தான் கையோடு கொண்டு வந்திருந்த திருநீறை அள்ளி பூசினார். அதன் பிறகுதான் வேதாசலம் தன் இயல்பு நிலைக்கு வந்தார். மீதமிருந்த திருநீறை அள்ளி சங்கரின் நெற்றியில் பட்டையாக இழுத்துவிட்டார்.

தன் கண் முன்னே நடந்தவற்றையெல்லாம் பார்த்த பிறகும் இதையெல்லாம் நம்புவதா? வேண்டாமா? என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் நவநீதன். ஆட்டோ தேவியாக்குறிச்சியில் பாய் வீட்டிற்கு முன்பு வந்து நிற்கும் வரை அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ஆனாலும் அவனால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

ஆட்டோ வந்து நின்ற இரண்டு நிமிடங்களில் ராமுவும், வெள்ளியங்கிரியும் வந்து சேர்ந்தார்கள். அதற்குள் ஆட்டோவிலிருந்தவர்கள் அனைவரும் இறங்கியிருந்தார்கள்.

பெரிய கான்கிரீட் வீடு கண்ணுக் தெரிந்தது. அதன் மேற்புறத்தில் ‘பஷீர் மன்ஜில்’ என்று எழுதியிருந்தது. அந்த வீட்டின் வலதுபுறத்தை ஒட்டி, ஒரே ஒரு ஆள் மட்டும் உள்ளே போய் வரும்படியான அளவிற்கு சந்து ஒன்று இருந்தது. அந்த சந்தை அடுத்து ஒரு பெட்டிக் கடை இருக்கவே, அந்த கடைக்காரரைப் பார்த்து வேதாசலம் கேட்டார் “ஏம்பா... பாய் இருக்கிறாரா..?”

“ம்ம்... வீட்டிலதான் இருக்கிறாரு... இந்தா... இந்த சந்து வழியா உள்ளே போய், சோத்தாங்கை பக்கமா திரும்புங்க, பாய் வீட்டு பின்புறம் வரும். அங்க போய் பாருங்க இருப்பாரு...” என்று வழியையும் காட்டிவிட்டார்

அந்த சந்திற்குள் முதல் ஆளாய் வேதாசலம் நுழைந்தார். அவர் பின்னாடியே ஆட்டோ டிரைவர் சென்றான். “ச்சே... இந்த இருட்டுல எப்படி போறது, ஒரு லைட்டை கூட போடமுடியாதா..?” என்று முணுமுணுத்தபடியே சென்றான்.

அவன் பின்னாடி கமலம்மாளும், அவனது சித்தி அலமேலுவும் சங்கரை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு அடுத்து, ராமுவும், வெள்ளியங்கரியும் வரிசையாக வந்தனர்.

முப்பதடி தூரம் சென்றதும், பெட்டி கடைக்காரர் சொன்னது போல் வலது புறம் திரும்பி, பாய் வீட்டின் பின்புறத்தை அடைந்தனர். அங்கே ஒரு வயதான பாய் அம்மா தலையில் முக்காடு போட்டு உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் “ஏம்மா... பாய் இருக்கிறாரா...” என்று வேதாசலம் கேட்டார்.

“இருக்கிறார்... உட்காருங்க கூப்பிடறேன்…” என்றபடியே அந்த அம்மா, வீட்டின் பின்புற வாசல் வழியே உள்ளே போனார்.

நவநீதன் அந்த இடத்தை ஆராய்ந்தான். அந்த வீட்டின் பின்புறம் வெட்டவெளியாக இருந்தது. இங்கிருந்து பார்த்தால் தேசிய நெடுஞ்சாலையும், அதன் இருபுறமும் காவலுக்கு நின்றிருப்பது போல் இருக்கும் புளியமரங்களும் கண்ணுக்கு தெரிந்தன.

வீட்டின் பின்புற வாசலில், 20 அடிக்கு 20 அடி திறந்தவெளி இடம் இருந்த்து. அதன் மத்தியில் ஒரு கட்டில் போடப்பட்டிருந்தது.

சற்று நேரத்தில் முண்டா பனியன், லுங்கி சகிதம் ஒருவர் வந்து கட்டிலில் அமர்ந்தார். தலையில் குல்லாவும், தாடையில் வைத்திருந்த நீளதாடியுமே சொல்லியது அவர்தான் வேதாசலம் தேடிவந்த பாய் என்று.

அதை அவரே ஒத்துக் கொள்வது போல் பேச ஆரம்பித்தார். “நான்தான் நீங்க தேடி வந்த பாய்.. என்ன விஷயம் சொல்லுங்க..?” என்றார்.

நடந்த விஷயத்தை விலாவரியாக சொல்லி முடித்தார். அனைத்தையும் பொறுமையாக கேட்டு முடித்த பாய், சரி பையனை என் முன்னாடி உட்கார வையுங்க என்றார்.

அதன்படி சங்கரை பாய் முன்னாடி அமர வைத்தனர். சங்கர் அமர்ந்ததும் வீட்டுப்பக்கம் திரும்பிய பாய் “ஒரு சொம்பு தண்ணியும், பத்திகுச்சியும் எடுத்துட்டு வாம்மா…” என்று குரல் கொடுத்தார்.

“இதோ...எடுத்துட்டு வரேங்க…” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

பாய் சங்கரைப் பார்த்தார். அவன் முகம் சுருங்கிப் போய், இருளடைந்து போயிருந்தது. வாயில் இருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருந்தது. முதுகெலும்பு இல்லாதவன் போல முன்புறம் வளைந்து கிடந்தான். கண்கள் உள்ளே சொருகியிருந்தன.

பாய் அவனை விடுத்து மற்றவர்களை பார்த்தார். கழுகு சிறகை விரித்திருப்பது போல் அவரை சுற்றி அனைவரும் நின்றிருந்தனர்.

சில நிமிடங்களில் அவர் கேட்ட பொருள்களை முக்காடு போட்டிருந்த அம்மா, எடுத்து வந்து பாயிடம் கொடுத்து விட்டுப் போனார்.

சங்கர் எவ்வித அசைவுமின்றி உட்கார்ந்திருந்தான். அவனுடைய நினைவுகள் இங்கில்லாதவன் போல் காணப்பட்டான்.

“பையோனாட பேரு என்ன?” என்று வேதாசலத்திடம் கேட்டார்

“சங்கருங்க... என் வீட்டுக்கு மூத்த பையன்ங்க... நீங்கதான் எப்படியாச்சும் காப்பாத்தணும்..” என்று பணிந்த குரலில் சொன்னார் வேதாசலம்.

“சரி... என்னால முடிஞ்ச வரைக்கும் செய்யறேன்... எல்லாம் அல்லா விட்ட வழி” என்று வானத்தை பார்த்தபடி சொன்னார்.

சங்கரின் முன்பு ஒரு சொம்பு தண்ணீரை வைத்தார். பத்திகுச்சி பாக்கெட்டை பிரித்தவர் அதில் ஒரு கத்தையை உருவி எடுத்தார். “அல்லா...” என்று சொன்னது மட்டும் காதில் கேட்டது மற்றவை எல்லாம் அவர் உதிர்த்த வார்த்தைகள் அனைத்து உருதில் இருந்தபடியால் யாருக்கும் அவலர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.

பத்திக்குச்சியை கொளுத்தினார். எரிந்து முடித்த்தும் பத்திகுச்சிகள் அனைத்தும் தங்கள் சிவப்புகண்ணை காட்டின. புகையை தாராளமாக கசிய விட்டன.

சங்கரின் முகத்திற்கு நேரே அந்த புகையை காட்டியபடி, பாய் தனது மந்திரங்களை உதிர்க்க ஆரம்பித்தார். ஐந்து நிமிடங்கள் கழிந்தும் சங்கரிடமிருந்து எந்த அசைவுமில்லை.

அவர் கொளுத்திய பத்திக்குச்சி அனைத்தும் சாம்பலாகி உதிர்ந்தது. அந்த சாம்பலனைத்தையும் சொம்பிற்குள் தட்டியவர், இன்னொரு கத்தை பத்திக்குச்சியை எடுத்து பத்த வைத்தார்.


புகையை சங்கரின் முகத்தில் பரவ விட்டபடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

அதுவரை வேறு உலகத்தில் இருப்பது போல் அசைவற்று இருந்த சங்கர் மெல்ல தன் உடலை அசைக்க ஆரம்பித்தான்.

அவனிடமிருந்து “பச்… ப்ச்… ப்ச்…” என்று ஏதே சலிப்பு வந்தவன் சத்தமிடுவது போல் சத்தமிட்டான்.

பாய் சற்று தெம்பானவர் போல் தனது மந்திரங்களை வேகமாக முணுமுணுக்க ஆரம்பித்தார்.

புகையை நன்கு அவனது முகத்தில் காட்டியபடி சங்கரை எழுப்ப முயன்றார்... தம்பி... தம்பி.. சங்கர் ... எழுந்திரு... சங்கர்...



சங்கர்... "ஹூம்... ஹீம்..."என வித்தியாசமாக குரல் கொடுக்க ஆரம்பித்தான்.

அவன் வித்தியாசமாய் குரல் கொடுத்த்தும், அதுவரை புகையை கசிய விட்டுக் கொண்டிருந்த பத்திக் குச்சி கத்தை, திடீரென்று முழுதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

தீயைக் கண்ட பாய் சட்டென்று சொம்பிற்குள் நனைத்தவர்... “டேய்.. இந்த பஷீர்கிட்டயே விளையாடறியா...?” என்று ஒங்கிய குரலில் கத்தவே... அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 6 (உண்மைச் சம்பவம்)

$
0
0
ஷீர் கிட்டயே விளையாடறியா..?என்றவர் தனது மனதிற்குள் மேலும் சில மந்திரங்களை உதிர்த்தபடி மற்றொரு பத்திகுச்சி கத்தையை எடுத்தார்.

சங்கரின் பின்புறம் உட்கார்ந்திருந்த வேதாசலமும் அவரது மனைவி கமலம்மாளும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்கள். நவநீதன் இடது பக்கம் சற்று தள்ளி அமர்ந்திருந்தான். சங்கரின் வலதுபுறம் அவனுடைய சித்தி அலமேலு நின்று கொண்டிருந்தார்.


சங்கரின் மாமாவான ராமுவும், வெள்ளியங்கிரியும் சற்று தூரமாக நின்றபடி, நடப்பதை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பக்கத்தில் ஆட்டோ டிரைவர் கிலியுடன் நின்று கொண்டிருந்தார்.

சங்கர் இருந்த இடத்தை சுற்றி அந்த பத்திகுச்சி கத்தையால் வட்டம் போட்டார். யேய்.. உன்னை என் வட்டத்துக்குள்ள கொண்டு வந்துட்டேன். உன்னை இப்ப என்ன பண்ணறேன் பார்…”என்றார் பஷீர்.

பஷீர் பாய் மிகவும் கோபத்தில் இருந்த்து அப்பட்டமாய் தெரிந்தது. உருது மொழியில் மந்திரங்களை ஜபித்துக் கொண்டே அந்த பத்திகுச்சி கத்தையை பத்த வைத்து சங்கரின் முகத்தில் காட்டினார்.

நேரம் செல்லச் செல்ல.. அசைவற்று கிடந்த சங்கர், மெல்ல மெல்ல நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தான். சற்று நேரத்திற்கெல்லாம் நேரே நிமிர்ந்து உட்கார்ந்து விட்டான். அவன் கண்கள் பஷீர் பாயை நேருக்கு நேர் பார்க்க ஆரம்பித்தன.

யேய்.. யேய்.. யாரு நீ..? சொல்லு? என்றார் பஷீர்

ம்... ம்...என்ற சங்கரின் குரலிலும் கோபம் தெரிந்தது

ம்.. சொல்லு.. நீ யார்..?”என்றபடியே இடது கையால் சங்கரின் தலையில் தட்டினார் பஷீர்

அடிக்காதீங்க சொல்றேன்..!”என்ற சங்கரை, நவநீதன் உற்றுப் பார்த்தான்.
சங்கரின் முகம் இப்போது  தெளிவாக இருப்பது போல் காணப்பட்டது. அறுபது வாட்ஸ் பல்பு வெளிச்சம் அவன் முகத்தில் தெரிந்தது.

அதெப்படி இங்கே வர வரைக்கும்,கடந்த இரண்டு நாளா சங்கருடைய முகம் இருட்டடைஞ்சி போய் இருந்திச்சி... இப்ப மட்டும் பிரகாசமாயிடுச்சே..!என்று சிந்தித்துக் கொண்டிருந்த நவநீதனை, பஷீர் பாயின் குரல் கலைத்தது.

யேய்... நீ யாரு..? சொல்லுங்கறேன்ல...  சத்தமாகக் கேட்டபடியே சங்கரின் தலையில் ஓங்கி அடித்தார்

அடிக்காதீங்க சொல்லிடறேன்...என்றவன், சற்று அமைதி காத்து நான் யாருன்னு சொல்லணுமா..?என்று கேட்ட சங்கர்,பஷீரை ஒரு மாதிரியாகப் பார்த்து சிரித்தான்.

டேய்... பஷீர் பாய் முன்னாடி உக்காந்திருக்க... பதில் சொல்லலன்னா விடமாட்டேன் உன்னை...என்று விட்டு, மனதிற்குள் ஏதோ முணுமுணுத்தவர், பத்தியின் புகையை சங்கரின் முகத்தில் நன்கு படும்படி காட்டினார்.

புகையை விரும்பாத சங்கர்... தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியவாறே... வேண்டாம்.. வேண்டாம்.. நான் யாருன்னு சொல்லிடறேன்என்றான்.

இப்ப தெரியுதா.. பஷீர் பாய் யாருன்னு..? ம்ம்.. சொல்லு நீ யாரு..?என்று சொன்ன பஷீர் பாயைப் பார்த்து மலங்க மலங்க விழித்தது ஆவி. (இனி ஆவி என்றே  அழைப்போம்)


பஷீர் பாய் மறுபடியும் ஒரு மந்திரத்தை முணுமுணுத்து, சங்கரின் தலையில் தட்டவும், அது பேச ஆரம்பித்தது.

என் பேரு கண்ணன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி காது குத்துக்காக மங்களபுரம் போயிட்டு வந்தேன். அப்போ வர்ற வழியில லாரி எம்மேல ஏறிடிச்சு... நான் இப்படி ஆயிட்டேன்என்றது

சரி இந்தப் பையன எப்ப பிடிச்ச..?

தினமும் இரவு 11 மணிக்கு எந்திரிப்பேன். அப்படியே என் வீட்டுக்கு போய் என் பொண்டாட்டி, புள்ளைங்கள பார்த்துட்டு வருவேன். அன்னிக்கு இந்த பையனும் இன்னொரு ஆளும், நான் எழுந்திரிக்கறப்ப டிவிஎஸ்ல வந்து கிட்டிருந்தாங்க. உடனே டிவிஎஸ்ஸை ஆப் பண்ணிட்டேன். பத்தடி தூரம் வண்டியை தள்ளிகிட்டு போய் ஸ்டார்ட் பண்ணினாங்க. உடனே நான் இந்த பையன புடிச்சிகிட்டேன்..என்றது

இன்னோரு ஆளு இருந்தாருன்ன சொல்ற... அவரை புடிக்கமா இவனை ஏன் பிடிச்ச..?என்றார் பஷீர் பாய்.

இதைக் காதில் கேட்ட ராமுவுக்கு  தூக்கி வாரிப் போட்டது. ‘யோவ் பாயி... அதுகிட்ட போட்டுக் கொடுத்து என்னை காலி பண்ண பாக்கறியா..?என்று பஷீரின் சட்டையைப் பிடித்து கேட்க நினைத்தான். ஆனால் ஆவி மேல் உள்ள பயத்தாலும், அதை பேசவைக்கின்ற பஷீர் மேல் உள்ள பயத்தாலும் கிலிபிடித்தவன் போல் அங்கேயே நின்றான்.

இந்த பையன் எனக்கு தெரிஞ்சவன்தான். என்னோட அக்கா அலமேலுவோட ஒண்ணு விட்ட மாமா பையன்என்று அது சொல்லவும், சங்கரின் வலது புறம் நின்று கொண்டிருந்த சங்கரின் சித்தி திடீரென்று அழ ஆரம்பித்தார்.

‘அவர் ஏன் திடீரென்று அழுகிறார்..?என்று நவநீதன் குழப்பமாய் பார்க்க, அவன் குழப்பைத்தை அதிகப்படுத்துவது போல் ஆவியும், அலமேலுவைப் பார்த்தபடியே அழ ஆரம்பித்தது.

ஆவி அழுவதைக் கண்ட பஷீர் முதற்கொண்டு அங்கிருந்தோர் அனைவரும் குழப்பத்திற்காளானார்கள்.

ஏய்... அந்தம்மாவைப் பார்த்து நீ ஏன் அழற...என்றார் பஷீர்.

ம்ம்ம்.. ம்ம்ம்.... அவங்கதான் என்னோட அலமேலு அக்கா...என்று சங்கரின் சித்தியைப் பார்த்த ஆவி, ஏக்கமாய் அழுதபடியே சொன்னது.

அடப்பாவி... நாசமாப் போனவனே... உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டிநே... உசுரோட இருந்தப்பதான் குடிச்சிட்டு தொல்ல கொடுத்த.. செத்துமாடா தொல்ல தர பாவி... வேதாசலம் மாமாவோட காசை எவ்ளோ தின்ன... அந்த நன்றி விசுவாசம் கொஞ்சம் கூட இல்லையா... கண்ணா... கண்ணான்னு எம் மாமா உன் மேல பாசமா இருந்தார். இப்ப அவரு கண்ணையே குத்த வந்திருக்கியே..!என்று அலமேலு தலையிலடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

அக்கா... அக்கா...என்றபடியே ஆவியும் அதிகமாய் அழ ஆரம்பித்தது.
சற்று நேரம் அமைதி காத்திருந்த பஷீர் பாய் அலமேலுவைப் பார்த்து அழறத நிறுத்தும்மா..என்றார்.

அலமேலு அழுவதை நிறுத்த முடியாமல் சேலைத்தலைப்பால் தன் வாயைப் பொத்திக் கொண்டார்.

அலமேலுவிடம் இருந்து சத்தம் வராமல் போகவே, சங்கரின் பக்கம் திரும்பிய பஷீர் டேய்போதும் அழறதை நிறுத்து...என்றார்
சங்கரும் அழுவதை நிறுத்திக் கொண்டான்.

இதைகண்ட நவநீதன் கண்களுக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை.. ‘இது எப்படி சாத்தியமாகும்?என்று அவன் மனதில் அடுக்கடுக்காய் எழுந்த கேள்விகளை பஷீரின் கணீர்க் குரல் கலைத்தது.

சரிடா.. நீ வண்டியை பார்த்து ஓட்டி வந்திருக்கலாம்ல.. வண்டி ஓட்டும் போது என்ன தப்பு செஞ்ச..?என்றார்பஷீர்.

காது குத்து முடிஞ்சதும், என் தோஸ்த்துங்களோட கொஞ்சம் தண்ணியடிச்சுட்டேன். ஆனா நிதானமாத்தான் வண்டியை ஓட்டிகிட்டு வந்தேன். சிங்கபுரம் பாலத்தை தாண்டி வர்றப்ப, எதுக்கால வந்த லாரியின் லைட் வெளிச்சம் என்னை தடுமாற வைக்க, போதையும் கிறுகிறுக்க, லாரி என் மேல ஏறிடிச்சிஎன்றது அந்த ஆவி.

தெரிஞ்ச  பையன்னு பிடிச்சிட்ட.. பரவால்ல... இத்தனை நாளா இந்த பையனோட இருந்தது போதும்... அவனவிட்டு ஓடிப் போயிடணும். போறியா..?என்று அதிகாரமாக கேட்டார் பஷீர்.

போகமாட்டேன்..!என்று ஆவி சொன்னதுதான் தாமதம், அவனுடைய அக்காவான (சங்கரின் சித்தி) அலமேலு அடிக்க ஓடி வந்தார்.

டேய்.. கொள்ளைல போனவனே... ஒழுங்கா ஓடிப் போயிடு.. போய்த் தொலைடா.. ஏண்டா எங்களை இப்படி சித்திரவதை பண்ற…”என்று அடிக்க வந்தவரை,மிகவும் பாவமான முகத்தை வைத்துக் கொண்டு அக்கா...என்றதுஆவி.

பாய் அலமேலுவை தன் சைகையால் தடுத்து நிறுத்தினார்.

வேதாசலமும், கமலம்மாளும் நடந்ததைப் பார்த்துக் கொண்டு சிலையாக அம்ர்ந்திருந்தனர்.

பஷீர் சங்கரைப் பார்த்து டேய்.. அதவிடு... பிரியாணி வேணுமா? சாப்பாடு வேணுமா..? கோழி முட்டை வேணுமா..? தோசை வேணுமா..? எது வேணுமோ அதை கேட்டு வாங்கி சாப்பிடுட்டு, பையன விட்டு ஓடிப் போயிடணும்... போறியா..?அப்படி போகலேன்னா எருக்கவ் குச்சியாலே அடிச்சே உன்ன கொன்னுடுவேன். என்ன சொல்ற..?என்றார்.

ம்ம்.. ம்ம்.. சரி…போறேன்என்றது ஆவி

என்ன வேணும் கேளு..? - இது பஷீர்

கோழிமுட்டையும்... பிரியாணியும்..!என ஆவலாய்க் கேட்டது ஆவி.

அடி செருப்பால.. மணி இப்ப 10. 45 ஆயிடிச்சு.. எந்தக் கடையும் இருக்காது... வேற ஏதாவது கேளு... சோடா... கலர் ஏதாவது வேணும்னா கேளு..?என்றார் பஷீர்.

கேட்டது கிடைக்கலயே என்ற ஆதங்கத்தோடு பாயை ஒரு மாதிரியாக ஆவி பார்த்தது.

என்னடா பாக்கற... இந்த பாயை என்ன பண்ணலாம்னா.. உன்னைதாண்டா ஒரு வழி பண்ணப் போறேன்… என்ன வேணும் கேளு…என்று சங்கரின் தலையில் பட்டென்று ஒரு அடி அடித்தார்.


அடிக்காதீங்க... பெப்ஸியும் முறுக்கும் வேணும்…”என்றதுஆவி.
பாய் வேதாசலம் பக்கம் திரும்பி ரோட்டுப்பக்கம் ஒரு பெட்டிக் கடை இருக்குல்ல.. அங்க போய் பெப்ஸியும் முறுக்கும் வாங்கிட்டு வாங்க...என்றார்.

வேதாசலம் ராமுவைப் பார்த்தார். அவன் முகத்திலிருந்த கிலியைப் பார்த்ததும், ‘இவன் போகமாட்டான்என மனதிற்குள் நினைத்துக் கொண்டவர், அவனருகில் யானை போல் நின்ற வெள்ளியங்கிரியைப் பார்த்தார்.

டேய் வெள்ளியங்கிரி... ஓடிப் போய் பெப்ஸியும்.. முறுக்கும் வாங்கிட்டு வா..என்றார்.

வேதாசலம் பார்வை தன் மீது பட்டபோதே படபடப்பிற்குள்ளான வெள்ளியங்கிரி, அவர் இப்படிச் சொன்னதும் ஐயோ மாமா... நான் போக மாடேன்.. எனக்கு பயமா இருக்கு... நான் போகல...என்றான். அவன் பதிலில் பீதி கலந்திருந்தது.

வேதாசலம் முகம் சுருங்கிப் போய்விட்டது. தன் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாயை எடுத்தவர், ‘பெரிய ஆளா இருக்கானுங்க.. இவனுங்களே இப்படி பயப்படறானுங்களே... இவனுங்களைப் போய் துணைக்கு கூட்டி வந்தோமே‘ என தன்னைத் தானே நொந்து கொண்டார்.

அப்போது நவநீதனின் குரல் வேதாசலத்தைநிமிரவைத்தது.
காசை கொடுங்க!நான் போய் வாங்கிட்டு வரேன்என்று சொன்னபடியே நவநீதன் அவர் முன்பு வந்து நின்றான்.

நூறு ரூபாயை அவனிடம் கொடுத்து போய் வாங்கிட்டு வாப்பா...என்றார்.
பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ஒற்றை சந்தில் கடையை நோக்கிப் போன நவநீதனை ராமுவும், வெள்ளியங்கிரியும் கிலியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதே நேரம், சந்திற்குள் போன நவநீதனை ஆவி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 (உண்மைச் சம்பவம்)

$
0
0
வநீதன் பாய் வீட்டின் அருகே இருந்த சந்து வழியாக கடையை நோக்கி நடந்தான்.

அவன் மனதில் அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள் துளைத்துக் கொண்டே இருந்தது. ‘பேயே இல்லங்கறவனாச்சே நான்... என்னை அது என்ன பண்ண முடியும். இதை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல... ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கண்ணாலயே பார்த்தேனே..? இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம கூட வந்த தடியனுங்க ஏன் கடைக்கு வர்றதுக்கு கூட பயப்படறானுங்க..? பேய் பிடிச்சிடும்னா பயப்படறானுங்க... ஆளுதான் வளர்ந்திருக்கானுங்களே தவிர அறிவு வளரலயே...என குழப்பமாய் யோசித்துக் கொண்டே வந்தான்.


அதற்குள் கடை வந்து விடவே, நூறு ரூபாயை நீட்டி ஒரு பெப்ஸி, நாலு முறுக்கு கொடுங்க...என்றான்.


சில்லறை இல்ல தம்பி... வேணும்னா ஒரு பாக்கெட் முறுக்கும் பெப்ஸியும் வாங்கிக்கோங்க… சில்லறை தரேன்என்றார் கடைக்காரர்.


சரி... அப்படித்தான் கொடுங்க...என்றவன், கடைக்காரரைப் பார்த்து ஏங்க... இந்த பஷீர் பாய் எப்படிப்பட்ட ஆளுங்க... பேய் ஓட்டுவாரா..? இல்ல எல்லாம் சும்மா ஏமாத்து வேலையா..?


எனக்கு தெரியாது தம்பி, என்னோட அண்ணனோட கடை இது. அவர்தான் தினமும் இந்த கடையில இருப்பார். நான் இன்னிக்குத்தான் இந்த கடைப்பகமே வரேன்…”என்றார்.


கேட்ட தகவல் கிடக்காமல் போனதில் மனதிற்குள் சற்று வருத்தப்பட்டாலும், கடைக்காரர் கொடுத்த பெப்ஸியையும், முறுக்கு பாக்கெட்டையும், மீதி சில்லறையும் வாங்கிக் கொண்டு, அந்த இருண்ட சந்தினுள் நவநீதன் திரும்பி வந்தான்.


நவநீதன் வரும் வரை அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஆவி, நவநீதன் கையில் தான் கேட்ட பொருள்கள் இருப்பதை பார்த்து, முகத்தைப் பிரகாசப் படுத்திக் கொண்டது.


அதே சமயத்தில் டேய்... கடைக்கு போனவன்... முழுசா திரும்பிட்டான்டாஎன்று அருகிலிருந்த நண்பனின் காதில் கிசுகிசுத்தான் வெள்ளியங்கிரி,.
பெப்ஸியையும், முறுக்கு பாக்கெட்டையும் பாயிடம் கொடுத்து விட்டு, முன்பு எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தானோ, அந்த இடத்தினில் போய் நின்று கொண்டான் நவநீதன்.


நவநீதன் கொடுத்த பொருட்களை வாங்கிய பஷீர் பாய், ஆவியிடம் கொடுக்காமல் தன் கையில் வைத்துக் கொண்டார்.


தன்னிடம் உடனே கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ஆவி, பாயின் இந்த செய்கையால் ஏமாற்றமடைந்த ஆவி, பஷீரை ஏக்கத்துடன் பார்த்தது.


என்ன பாக்கற... இதெல்லாம் உனக்கு தரலன்னா..?

‘உம்என்பது போல் தலையை ஆட்டியது ஆவி.


தரேன்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு... இதெல்லாம் வாங்கி சாப்பிட்டதும், இந்த பையனை விட்டு விட்டு போயிடறேன்னு சத்தியம் பண்ணி கொடுக்கணும். இந்த பையன் உடம்பை விட்டு போயிடணும்... இதெல்லாம் செய்யறேன்னு சொல்லு தரேன்...என்றார்.


ம்ம்... நீங்க சொன்ன படி சத்தியம் செய்யறேன்...என்றது ஆவி.


உன்னை நம்பறேன்... ஏமாத்து வேலை ஏதாச்சும் பண்ணினா, உன்னை எங்கயும் போகமுடியதபடி பண்ணிடுவேன்... ஜாக்கிரதை...என்ற படியே பஷீர் முறுக்கு பாக்கெட்டையும், பெப்ஸியையும் ஆவியிடம் கொடுத்தார்.


ம்ம்... இந்தா தின்னுட்டு.... சத்தியம் பண்ணிட்டு ஓடிப்போ...என்றார் பஷீர்.

முறுக்கு பாக்கெட்டை ஆவலாக வாங்கிய ஆவி, அடுத்த சில நிமிடத்திற்குள் அனைத்தையும் காலி செய்தது. முறுக்கு சாப்பிடும் போது எழுந்த  “நறுக்... முறுக்...சப்தம், அங்கிருந்தவர்களின் காதுகளில் மிகத் துல்லியமாக விழுந்தது. அடுத்ததாக பெப்ஸியை எடுத்த ஆவி, ஒரே மூச்சில் குடித்து விட்டு வெறும் பாட்டிலை கீழே வைத்தது.

இத்தனையும் 5 நிமிடத்தில் ஆவி சாப்பிட்டதைப் பார்த்த நவநீதனுக்கு, ஐந்து நாள் பட்டினி கிடந்தவன் சாப்பிட்டதைப் போல் தெரிந்தது.

‘ம்... சாப்பிட்டு விட்டேன். இப்போ நான் என்ன செய்யணும் சொல்லுஎன்று கேட்பது போல் பஷீரின் முகத்தை ஆவி பார்த்தது.

என்ன பாக்கற.. நான் சொல்ற மாதிரி, சொல்லி சத்தியம் பண்ணிட்டு ஓடிப் போயிடணும்... செய்வியா..?என்றார்.

நான் என்னான்னு சொல்லணும்... சொல்லுங்க..?என்றது.

பஷீர் பாய் மீது சத்தியமா, நாகூர் ஆண்டவர் மீது சத்தியமா, இன்ஷா அல்லா மீது சத்தியமா இந்த பையன விட்டு ஒடிப் போயிடறேன். இனி இந்தப் பையன மட்டுமில்ல, யாரையுமே பிடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்என்றார் பஷீர்.

நம்மை போகச் சொல்றாங்களே என்பது போல் ஒரு பரிதாபமான  பார்வையை ஆவி பார்த்தது.

டேய்... நீ கேட்டத வாங்கிக் கொடுத்தாச்சு... தின்னதும் பையனை விட்டுடுறேன்னு சொல்லியிருக்க.. இப்ப நீ சத்தியம் பண்ணறியா... இல்ல என் வேலையை காட்டட்டுமா?என்றபடி, அவரது கட்டிலுக்கு கீழே வைத்திருந்த எருக்கங் குச்சியை கையிலெடுத்தார் பஷீர்.

எருக்கங் குச்சியைப் பார்த்த ஆவி... இல்ல வேணாம். நான் சத்தியம் பண்ணிடறேன்என்றபடி, பஷீர் பாய் சொன்னது போல் சொல்லி, தரையில் மூன்று தரம் கையால் அடித்து சத்தியம் செய்தது.

அடுத்த சில வினாடிகளில் சங்கரின் முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் அப்படியே விலக ஆரம்பித்தது. திடீரென்று சங்கர் பேச ஆரம்பித்தான் தோ போவுது... அங்கே போவுது...என்றான்.

பஷீர் பாய் சங்கரிடம் கேட்டார் யாருப்பா போறது.. சொல்லு
வெள்ளையா ஒரு உருவங்க.. அது என்ன பாத்துகிட்டே போகுது. ரோட்டோரமா இருகிற புளியமரத்தை நோக்கி போகுது…”என்றான் சங்கர்.

சங்கர் தெளிவாகப் பேசியதைக் கேட்ட உடனே வேதாசலத்தின் முகத்திலும், கமலம்மாளின் முகத்திலும் சந்தோஷப் புன்னகை பூத்தது.

அதற்குள் பஷீர் பாய் சொம்பிலிருந்த நீரை எடுத்தார். தன் வாய்க்குள் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தபடி, அந்த தண்ணீரை சங்கரின் மீது தெளித்தார்.

தண்ணீர் உடல் மேல் பட்டதும்..ம்ம்.. ப்ச்...என்றபடியே ஒரு விதமாக உடலை சிலிர்த்துக் கொண்டான் சங்கர்.

அதுவரை அமைதியாக இருந்த வேதாசலம் மெல்ல சங்கரை அழைத்தார். சங்கரு... யப்பா சங்கரு...

சங்கரிடமிருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

இதைக் கண்ட பஷீர் பாய், மறுபடியும் தண்ணீரை எடுத்து மந்திரமொன்றை முணுமுணுத்தபடியே சங்கரின் முகத்தில் தெளித்தார்.

ம்ம்...ப்ச்சே...என்றான் சங்கர்.

தம்பி… தம்பி... ஏன் பேச மாட்டேங்கற…”என்று சங்கரைப் பார்த்து பஷீர் பாய் கேட்டார்

அந்த வெள்ளை உருவம்,புளிய மரத்து மேல உக்காந்துகிட்டு என்னையே பார்த்து சிரிக்குது…”என்றான் சங்கர்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நவநீதன், சங்கர் காட்டிய திசையில் தன் பார்வையை தீர்க்கமாக ஓடவிட்டான். அவன் சொன்னது போல் ஒரு உருவத்தையும் காணோம். தூரத்தில் புளியமரம் தேமே என்று நிற்பதும், அதன் ஊடே கருமை நிறம் இருப்பதும்தான் அவனுக்குத் தெரிந்த்து. ‘எதைப் பார்த்து விட்டு, இவன் உருவங்கறான்..என்று யோசித்தான்.

அவனது யோசனையை பஷீரின் குரல் கலைத்தது.

அதவிடு தம்பி... நான் பாத்துக்கறேன்...  என்று அருகிலிருந்த வேதாசலத்தைக் காண்பித்து யாரு இவரு..?”என்று பாய் கேட்டார்

அதுவரை பஷீரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சங்கர் , முதல் முறையாக வேதாசலத்தை திரும்பிப் பார்த்து எங்கப்பாஎன்றான்.

அருகிலிருந்த கமலம்மாளை காண்பிக்கவும் எங்கம்மாஎன்றான்.

வேதாசலம் முகத்தில்சந்தோஷம் இன்னும் அதிகமாக வந்து ஒட்டிக்கொண்டது. 


பஷீர் பாயை நோக்கி நீங்கதான் பாய்எம் பையன காப்பாத்திய தெய்வம்…”என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்

அதற்கு பஷீர் பாயிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.


அப்போது நவநீதன், டேய் சங்கர்…”என்றான்

நவநீதன் பக்கம் திரும்பிய சங்கர் என்னடா நவநீஎன்று பதிலளிக்கவும், நவநீதன் மனதில் ஆயிரம் டன் ஆச்சர்யம் கிளம்பியது. ‘அட பரவால்லயே தெளிவா பேசறான்என நவநீதன் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

சங்கரின் சித்தி இடைமறித்து கேட்டாள் சங்கரு.. எப்படிப்பா இருக்க..?

அவள் பக்கம் திரும்பிய சங்கர் நல்லா இருக்கேன் சித்தி…என்றான்.

நவநீதன் சங்கரை உற்றுப் பார்த்தான். சங்கருடைய முகம் இப்போது மிகவும் தெளிவாக இருந்தது. பஷீர் பாய் அதற்குள் பெட்டியில் வைத்திருந்த, தாயத்து ஒன்றை கையிலெடுத்து, கண்ணை மூடியபடி சில மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் சங்கரை நோக்கி தம்பி உன் சோத்தாங்கைய நீட்டு என்றார்.

அதுவரை அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்த சங்கரின் முகம் அஷ்ட கோணலாகியது.



"அடி செருப்பால.. சைத்தான் கி பச்சா... யாருகிட்ட விளையாடுற.. இந்த பையன விட்டுட்டு போறேன்னு சொல்லி சத்தியம் செஞ்சிட்டு, மறுபடியும் இவன் மேலேயே வந்து உக்காந்துகிட்டியா..?"என்று கோபாவேசமாக கத்தினார் பஷீர் பாய்.

அதைக்கேட்ட அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 8 (உண்மைச் சம்பவம்)

$
0
0
ஷீர் பாயின் குரலைக் கேட்டதும், சங்கரை சுற்றி நின்றிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அவரவர் முகத்தில் ஆயிரம் டன் அதிர்ச்சி அப்பிக் கொண்டது.

சங்கரின் மேல் அந்த ஆவி மறுபடியும் வந்து அமர்ந்து கொண்டதும், அவனுடைய முகம் பழையபடி இறுக்கமாக மாறிவிட்டது. அவனுடைய முகம் மறுபடியும் இருண்டு போனது.

ஆவியைப் பார்த்து பஷீர் ஆவேசமாய் கத்த ஆரம்பித்தார்சரிடா... நீயா... இல்ல இந்த பஷீரான்னு பார்த்துடறேன், யாருகிட்ட விளையாடுறஎன்றபடியே, தன்னிடமுள்ள தாயத்தை எடுத்து, வாயினருகே வைத்தபடி, ஏதேதோ மந்திரங்களை முணுமுணுத்தார்.

அந்த ஆவி பாயின் முகத்தைப் பயத்தோடு பார்த்தது.

மந்திரத்தை சொல்லி முடித்த பஷீர், சட்டென்று எழுந்து சங்கரின் உச்சிமுடியை எட்டிப் பிடித்தார். பிடித்ததுமே அவர் வாயில் சில மந்திரங்களை உதிர்க்க ஆரம்பித்தார்.

சங்கரின் மேல் இருந்த ஆவி ஐயோ... என்னை விடுங்க, வலிக்குது பாய்...என அலறியது.

வேதாசலத்தை சைகை மூலம் அருகில் அழைத்த பாய், சங்கரின் முடியை கண்ணால் காட்டி இந்த முடியில ஒரு முடி கூட பிரிஞ்சிடக் கூடாது. அப்படியே கெட்டினா பிடிச்சுக்குங்கஎன்றார்.

சங்கரின் அருகே வந்த வேதாசலம், பஷீர் பாய் சொன்னபடியே பயத்தோடு சங்கரின் உச்சி முடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

விட்டுடுங்க பாய்.. நான் போயிடறேன்...வேணாம் பாய் என்னை விட்டுடுங்க.. நான் எங்கயாச்சும் ஓடிப் போயிடறேன்என ஆவி கத்திக்கொண்டே இருந்தது.

அதன் குரலை சிறிதும் சட்டை செய்யத பஷீர், அருகிலிருந்த தாயத்து டப்பாவிலிருந்து, கத்தரிக்கோலை கையிலெடுத்தார். வேதாசம் பிடித்திருந்த உச்சி முடியை கவனமாக கத்தரித்தார்.

சங்கரின் உச்சி முடி கத்தரிக்கப்பட்டதும் சங்கரின் மீதிருந்த ஆவியின் குரல் அடங்கிப் போய்விட்டது. சங்கர் மயக்கமானவன் போல் கீழே விழப்போனான்.

ஒரு கையில் சங்கரின்உச்சிமுடியைப் பிடித்துக் கொண்டு, மறுகையால் அவனை தாங்கிப் பிடித்தார்.

அவரது கையிலிருந்த உச்சி முடியை மிகவும் பத்திரமாக வாங்கிய பஷீர், சில மந்திரவ்களை முணுமுணுத்தபடி அதை தாயத்துப் பெட்டியில் வைத்து பத்திரமாக மூடினார்.

ஏற்கனவே மந்திரித்து வைத்திருந்த தாயத்தை எடுத்து, சங்கரின் வலது கையில் கட்டி விட்டார்.

வேதாசலத்தைப் பார்த்து இனி பிரச்சினை இல்லை. பயப்படாம உல்கபையன நீங்க கூட்டிகிட்டு போகலாம். நான் மந்திரிச்சு கொடுக்கறதை வாங்கிக்கிட்டு, நான் சொல்றதை மறக்காம செஞ்சுடுங்கஎன்றார் பஷீர் பாய்.

அதற்குள் கமலம்மாளும், சங்கரின் சித்தியும் வந்து, அவனை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டனர். சங்கர் ஆழ்ந்த உறக்கத்திற்குப் போய்விட்டது போல் தோன்றியது.

வேதாசலத்தை தனியே அழைத்துச் சென்ற பஷீர் பாய், அவரிடம் எதையோ ரகசியமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.

கமலம்மாள் பஷீரைப் பார்த்து பாய்.. எம்பையன ஆட்டோவுக்கு கூட்டிகிட்டு போகலாமாஎன்றார்.

ம்ம்... தாரளமா கூட்டிகிட்டு போங்க... பயப்பட வேண்டாம்என்றுவிட்டு, மீண்டும் வேதாசலத்திடம் ரகசியமாய் கிசுகிசுக்க ஆரம்பித்தார்.

அதுவரைஓரமாக நின்று கொண்டிருந்த ராமுவையும், வெள்ளியங்கிரியையும் கூப்பிட்ட கமலம்மாள் சங்கரை ஆட்டோவுக்கு கூட்டிகிட்டு போங்கப்பாஎன்றார்.

ஒரு வித பயத்தோடு வந்த ராமுவும், வெள்ளியங்கிரியும் சங்கரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டனர்.

ராமுவை விட்டு சற்று தூரம் தள்ளி நின்று கொண்டிருந்த நவநீதனைப் பார்த்து நவநீ, எங்க்ககூட நீயும் வாயேன்என்றான்வெள்ளியங்கிரி.

‘இனிமேல் கிளம்ப வேண்டியதுதான்என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, நவநீதனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

ஐந்து நிமிடம் கழித்து வேதாசலம் தனது கையில் மூன்று எலுமிச்சம்பழம், யந்திரத் தகடு என சில மந்திர சமாச்சாரங்களை எடுத்து வந்தார்.

வேதசலத்திற்காக காத்திருந்தவர்கள், அவர் வந்ததும் வரும்போது எப்படி ஆட்டோவில் உட்கார்ந்திருந்தார்களோ, அதே இடங்களில் இப்போதும் உட்கார்ந்து கொண்டனர்.

ராமுவும் வெள்ளியங்கிரியும் டி.வி.எஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.
ஆட்டோ கிளம்பியது. கமலம்மாள் தனது மடியில் சங்கரை கிடத்திக் கொண்டார். சங்கரின் சித்தி மறுபுறம் அமர்ந்திருக்க, அவருக்கு பக்கத்தில் நவநீ உட்கார்ந்திருந்தான்.

வேதாசலம் பின்புறம் உட்கார முயல, ஆட்டோ டிரைவர்உதறலோடு கூப்பிட்டான்.

அண்ணே... முன்னாடி என்னோட வந்து உட்காருங்க... எனக்கு தனியா முன்னாடி உட்கார்ந்திருக்க பயமாயிருக்குஎன்றான்.

அடச்சே.. நல்ல ஆம்பளடா நீ...என்று அவனை திட்டியவாறு, ஆட்டோ டிரைவரோடு முன்புறம் உட்கார்ந்து கொண்டார்.

அட போண்ணே... நான் இந்த மாதிரி என் வாழ்க்கையில பார்த்ததே இல்ல. உங்க பையன் ஆவி பிடிச்ச மாதிரி இருந்தான். திடீர்னு நல்லாயிட்ட மாதிரி தெரிஞ்சான். மறுபடியும் ஆவி வந்து ஒட்டிகிச்சு... இதெல்லாம் நான் பார்த்ததே இல்லண்ணே... அங்க என்னால நிக்கவும் முடியல... அங்கிருந்து நகரவும் முடியல... எனக்கு பேயின்னாலே பயம்ணே... ஆட்டோவுக்கு கூட காசு வேணாம்.. பத்திரமா என்னை குன்றத்தூர்ல போய் விட்டுடீங்கன்னா போதும்ணே... என்றான்.

அடேய் பாவி... எல்லாம் சரியாயிடுச்சிடா... நீதான்டா பயப்படமா, ஒழுங்கா ரோட்டை பாத்து வண்டிய ஓட்டணும். எங்களை பத்திரமா நீதாண்டா கொண்டு போய் விடணும். என்றார் வேதாசலம்

அதுக்குத்தாண்ணே உங்களை என் பக்கத்திலயே உட்காரச் சொன்னேன்…என்றபடி ஆட்டோவை குன்றத்தூரை நோக்கி விரட்டினான்.

வேதாசலமும், ஆட்டோ டிரைவரையும் பேசிக்கொண்டு வந்த்தை, கேட்டு முடித்த நவநீதன் தனது கடிகாரத்தைப் பார்த்தான். அந்த ரேடியம் வாட்ச் மணி இப்போது 11.30 என்று தெளிவாய்க் காட்டியது.   

அந்த தேசிய நெடுஞ்சாலையில் சுத்தமாய் ஜனநடமாட்டமில்லை. பெரிய பெரிய டேங்கர் லாரிகளும், அரசு விரைவுப் பேருந்துகளும், தனியார் டீலக்ஸ்  பேருந்துகளும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஆட்டோவை கடந்து சென்றன.

குன்றத்தூரிலுள்ள வேதாசலம் வீட்டிற்கு ஆட்டோ போய்ச்சேரும் வரை யாரும் பேசிக் கொள்ளவில்லை.

வேதாசலம் வீட்டின் முன்பு ஆட்டோ வந்து நின்றது. பின்னாடியே ராமுவும், வெள்ளியங்கிரியும் டி.வி.எஸ்ஸில் வந்து சேர்ந்தனர்.


ஆட்டோவின் சத்தம் கேட்டதும், ஜிம்மி நாய் குலைக்க ஆரம்பித்தது. டேய் ஜிம்மி...என்று வேதசாலம் அதட்டவும், ஜிம்மி அமைதியானது.

சங்கரை கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்து வந்தனர். அதுவரை அவர்களுடன் இருந்த நவநீதன், நேரே வேதாசலத்திடம் சென்றுநான் போயிட்டு வர்றேங்கஎன்றான்.

நீ எங்க கூட வந்ததுக்கு ரொம்ப நன்றிப்பா நவநீ... உங்களுக்கும் எங்களுக்கும் சண்டை நடந்திருந்தாலும் அத மனசில வச்சிக்காம கூட, இந்த அர்த்த ராத்திரியில எங்க கூட வந்தியே.. உனக்கு ரொம்ப நல்ல மனசுப்பா... போய்ட்டு வாப்பா’’என்றார்

அட ஏங்க, பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க, அவன் என்னோட பிரண்டு... சரி நான் வர்றேங்க..? என்று விட்டு, பக்கத்து தெருவில் இருக்கும் வீட்டை நோக்கிப் போனான்.

ஒரு நிமிட நடையில் வீட்டை அடைந்தான். வீட்டிற்கு வெளியே நவநீதனின் அம்மாவும், அப்பாவும் தூங்கிக் கொண்டிருக்க, சத்தம் காட்டாமல் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

உள்ளே வந்த்தும் டியூப் லைட்டை எரிய விட்டான். மணி 12 என்பதற்கு அடையாளமாக சுவர் கடிகாரம் மெல்லிசை ஒன்றை இசைக்க விட்டு, சில மணித்துளிகளில் அமைதியானது.

சில நிமிடங்களில் லுங்கிக்கு மாறியவன், பாயை விரித்து படுத்துக் கொண்டான். அவன் மனதில் இன்று மாலை முதல் இரவு வரை நடைபெற்ற சம்பவங்கள் வந்து போயின.

அடுக்கடுக்காய் கேள்விகளும், குழப்பங்களும் அலைகழித்தன.
இதையெல்லாம் நம்புவதா? வேண்டாமா? என்று குழம்பிக் கொண்டே இருந்தவன், எப்படியோ தூங்கிப் போனான்.

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 9 (உண்மைச் சம்பவம்)

$
0
0
தேநேரம்நான்குதெருதள்ளிஇருக்கும்குமணன்தெருவில்உள்ளவர்களில்சிலர்வெளியில்படுத்துதூங்கிக்கொண்டிருந்தனர்.

அவர்களில்கார்த்தியும்ஒருவன். அவனுக்குவயது 17 இருக்கும். சங்கருக்குஒருவகையில்தூரத்துஉறவினன்ஆவான். அவன்வீட்டுவாசலில்கட்டில்போட்டு,  அதில் அயர்ந்துதூங்கிக்கொண்டிருந்தான்.

அயர்ந்துதூங்கிக்கொண்டிருந்தவனைவெள்ளையாய்ஒருஉருவம்தட்டிஎழுப்பியது. அரைதூக்கத்தில்இருப்பவனைஎழுப்பியதுபோல், தூக்ககலக்கத்தினூடேகண்விழித்துப்பார்த்தான் கார்த்திக்.

அந்தஉருவம்அப்படியேஅவன்மேல்ஏறிக்கொண்டு, அவனதுவயிற்றுப்பகுதியில்ஏறிஅமர்ந்துகொண்டது. அவனைப்பார்த்துகோரமாய்சிரித்தபடிஅவனதுகழுத்தைநெறிக்கஆரம்பித்தது.



அவ்வளவுதான்கார்த்திக்கின்தூக்கம்கணப்பொழுதில்கரைந்துபோனது. திகில்அவனதுநெஞ்சில்அறைய, அந்தஉருவத்தைகீழேதள்ளமுயன்றான். முடியவில்லை. அக்கம்பக்கத்தில்உள்ளோரைஉதவிக்குகூப்பிடலாமென்றுவாயைத்திறக்கமுயன்றும்அவனால்முடியவில்லை.

அந்தஉருவத்தைகீழேதள்ளவும்முடியவில்லை. உதவிக்குகூப்பிடநினைத்தாலும்தன்னால்பேசமுடியவில்லையேஎன்று நொடிப் பொழுதில் யோசித்தவன், விரைந்துஏதேனும்செய்யவில்லைஎன்றால், இன்னும்சற்றுநேரத்தில்தனதுசப்தநாடியும்அடங்கிவிடும்என்பதைநினைத்துஉள்ளுக்குள்ளேயேஅலறத்தொடங்கினான்.

திடீரென்றுஎங்கிருந்துஅவனுக்குதைரியம்வந்ததோதெரியவில்லை. அந்தஉருவத்தின்கழுத்தைஎட்டிப்பிடித்துக்கொண்டான். கட்டிலுக்குகீழேகிடந்தசெருப்பைஎடுத்துஅந்தஉருவத்தைபலங்கொண்டமட்டும்அடிக்கத்தொடங்கினான்.

வெள்ளைஉருவத்தின்பிடிதளரத்தளரஇவனதுகுரல்மெல்லமெல்லவெளியேகேட்கத்துவங்கியது.

‘’என்னைவிட்டுட்டுபோயிடு…யாருகிட்டவந்துவிளையாடற…..ஆஆஆஆஆஆஆஆ’’என்றுஉச்சகட்டகுரலில்கத்தினான். இவனதுகுரல்தூங்கமுயற்சித்துக்கொண்டிருக்கும்நவநீதன்காதுகளில்விழுந்தது.

'யாருடாஇது...இந்தநேரத்துலஇப்படிகாட்டுக்கத்துகத்தறது…'எனமனதிற்குள்நினைத்துக்கொண்டேஇருந்தவன்அப்படியேதூங்கிப்போனான்.

கார்த்திக்கின்சத்ததைக்கேட்டுஅந்ததெருவில்படுத்திருந்தவர்எல்லாம்திடுக்கிட்டுஎழுந்துபார்த்தனர்.

கார்த்திக்காற்றில்செருப்பைவீசிக்கொண்டிருப்பதுஅவர்களதுகண்களுக்குபுலப்பட்டது


கார்த்திக்கின் சத்தம்கேட்டுஎழுந்துவந்தஅவனதுஅம்மா "என்னடாகார்த்திக்ஆச்சு…என்னடாகண்ணுபண்ணற…ஏன்இப்படிசத்தம்போட்ட…"என்றுபதற்றத்தோடுகேட்கஆரம்பித்தார். நடந்தவிஷயத்தைஅவன்சொல்லவும் "நீவெளியிலபடுக்காதடா…வாஉள்ளவந்துபடு"என்றபடியேஅவனைஉள்ளேஅழைத்துச்சென்றார்.

அடுத்தநிமிடத்தில்அந்ததெருவில்வெளியேபடுத்திருந்தவர்கள்அத்தனைபேரும்‘’நான்அப்பவேசொல்லல…இங்கபேய்நடமாடுதுன்னு…’’என்றுஅவரவர்களும்முணுமுணுத்தப்படியேவீட்டுக்குள்போய்படுத்துக்கொண்டனர்.

வெண்ணிலவும்இந்தசம்பவத்தைக்கண்டுபயந்துபோனதைப்போல்மேகங்களுக்குள்சென்றுபதுங்கிக்கொண்டு, கதிரவனின்வருகைக்காககாத்திருக்கத்தொடங்கியது.

காலைக்கதிரவன்தன்கதிர்களைபூமியெங்கும்விசாலமாகபரப்பிசோம்பலைமுறித்துக்கொண்டான். நவநீதன்எழுவதற்குள்அவனதுஅம்மாவும்அப்பாவும்கோவிலுக்குசென்றிருந்தனர்.

எழுந்துகடிகாரத்தைப்பார்த்தான். அதுஏழரையைக்காட்டியது. அம்மாவைக்கூப்பிட்டுபார்த்தான். பதில்வராமல்போகவே, ‘ஓஇன்னிக்குசனிக்கிழமை…அப்பரெண்டுபேரும்சனீஸ்வரன்கோயிலுக்குபோயிருப்பாங்க’எனமனதில்நினைத்துக்கொண்டவன், இன்றுதனக்குஸ்பெஷல்கிளாஸ்இருப்பதையும்நினைத்துக்கொண்டான்.

அடுத்தஒருமணிநேரத்திற்குள்அவனதுவேலைகளைமுடித்து, குளித்துரெடியாகிவிட்டான். அம்மாசமைத்துவைத்திருந்தஇட்லியைசாப்பிட்டுமுடிதுவிட்டு, காலேஜிற்குதேவையானபுத்தங்களைஎடுத்துக்கொண்டுவெளியேவந்த போது வாட்ச்சைப் பார்த்தான். அது மணி 8.50 எனகாட்டியது.

9.00 மணிக்குபஸ்பிடித்தால்போதும்சரியானநேரத்தில்காலேஜிற்குபோய்விடலாம்என மனதிற்குள் கணக்குபோட்டபடியே, பஸ்ஸ்டாப்பிற்குவந்தான் நவநீதன். பஸ்வரவேஏறிக்கொண்டான்.

அடுத்த 20 நிமிடத்தில்கல்லூரிமுன்வந்துநின்றஅந்தபஸ், நவநீதனைஇறக்கிவிட்டுச்சென்றது

நவநீதன்  நேரே வகுப்புக்குசென்றான். அவனதுநண்பர்நண்பிகள்நலவிசாரிப்புமுடிந்தது. வகுப்புக்குஆசிரியர்வரவேமாலை 3 மணிவரைகல்லூரியில்மூழ்கிப்போனான்.

கல்லூரிமுடிந்துவீட்டிற்குபோகபஸ்ஏறினான். ஒருசீட்காலியாகஇருக்கவே, அங்குஉட்கார்ந்துகொண்டான். அவனதுமூளைநாளையபொழுதைப்பற்றிசிந்தித்துக்கொண்டிருந்தது. ‘நாளைஞாயிற்றுக்கிழமை, கண்டீப்பாககிரிக்கெட்விளையாடவேண்டும். பக்கத்துஊர்டீமுக்கும்நமக்கும்மேட்ச்இருக்கிறது. நம்மஇடத்தில்வந்துவந்துவிளையாடறடீமைபஞ்சராக்கிடணும். ச்சேசங்கர்இருந்தான்னாடீமுக்குரொம்பபலமாஇருக்கும். அவன்இன்னிக்குள்ளசரியாகிடுவானா? சரியாகிட்டானாஒருஆல்ரவுண்டர்பலம்நம்மடீமுக்குகிடைக்கும்.என்றுசிந்தித்துக்கொண்டிருந்தவனை, ஒருகைஇழுத்துப்பிடித்தது.

யாரென்றுதிரும்பிபார்த்தநவநீதனின்கண்களுக்குகார்த்திக்தெரிந்தான். “என்னடாகார்த்திக்…இந்தபஸ்ஸுலவர…’’என்றான்நவநீதன்.

"தலைவாசல்லஇருக்கிறமாகாளிஅம்மன்கோவிலுக்குபோயிட்டுவரேன்"என்றான்கார்த்திக்.

"என்னடாகுன்றத்தூர்லஇல்லாதகோவிலாடா..? தலைவாசல்லஇருக்கிறகோவிலுக்குபோயிட்டுவர. ஏதேனும்வேண்டுதலா..?"

"வேண்டுதல்எல்லாம்ஒண்ணும்இல்லன்னே…நேத்துநைட்டுஎங்கதெருவுலஒருபிரச்சினைஆயிடுச்சிண்ணே.? அதானாலமாகாளிகோவிலுக்குபோயிட்டுவான்னுஎங்கஅம்மாசொன்னாங்க. அதான்போயிட்டுவரேன்."

"ஆமாண்டா…நேத்துநைட்டுஉங்கதெருவுலஇருந்துயாரோகத்தினமாதிரிகேட்டுச்சி…ஆனாநான்தூக்கத்துலஇருந்தனா..? எனக்குஒண்ணும்தெரியலடா…என்னடாஆச்சி…யார்கத்தினா..?"

"அப்படி  கத்தினதே நான்தான்…தெரியுமாஉங்களுக்கு?"

திடுக்கிட்டுநிமிர்ந்தநவநீதன்… "உனக்குஎன்னடாஆச்சி.. ஏண்டாகத்தின..?"



நேற்றுநடந்தவிஷயங்களைஒன்றுவிடாமல்சொல்லிமுடித்த கார்த்திக் "எனக்குரொம்பபயமாயிடுச்சி…அதான்என்அம்மாமாகாளிகோயிலுக்குபோயிட்டுவரசொன்னாங்க…"என்றான்கார்த்திக்

"டேய்கார்த்திக்பேயெல்லாம்ஏதுமில்லடா.. எல்லாம்சும்மாடா…"என்றான் நவநீதன்.

"அண்ணே…அப்போநேத்துநான்நேர்லபாத்ததுஎல்லாம்பொய்யின்னுசொல்றீங்களா…"

"ஆமாம்…நீகனவுஏதேனும்கண்டிருப்ப…சரி…நேர்லபார்த்தேன்னுசொல்றியே…நீஅந்தஉருவத்தைகீழேதள்ளிவிட்டேன்னுசொல்றியே…தள்ளிவிட்டதுக்கப்புறம்அந்தஉருவத்தைபார்த்தியா..?"

"இல்லண்ணே…அதுக்கப்புறம்நான்பார்க்கல…"

"உண்மையிலஅந்தமாதிரிபேயேஇல்ல.. அதான்உண்மை… ஆமாம்…யாராச்சும்உன்னிடம்பேய்கதைஏதாச்சும்சொன்னாங்களா..?"

"இல்லண்ணே"

"நேத்துநைட்டுஏதாச்சும்படம்பார்த்தியா..?"

"ஆமாம்ணே…"

"என்னபடம்டாபார்த்த…"

"ஈவில்டெட்படம்பார்த்தேன்…ஸ்டார்மூவிஸ்ல…"

"நீபேயைபார்தேங்கறதுக்கானகாரணம்என்னன்னுதெரிஞ்சுபோச்சு… அதுஒருபேய்படம்…பனம்முழுக்கதிகிலாத்தன்இருந்திருக்கும்…நேத்துஎத்தனைசீன்லபயந்திருப்ப..?"

"படம்முழுக்கபயம்தாண்ணே…எந்திருச்சிவரவேஇல்ல.. அவ்ளோபயமாஇருந்திச்சி…"

"அதாவதுஉன்ஆழ்மனசுல…நேத்துபார்த்தபடம்பதிஞ்சிபோயிருச்சி…நீநல்லதூக்கத்துலஇருக்கும்போது, உன்ஆழ்மனசுவிழிச்சிருக்கு…அதுகனவாவந்திருக்கு…அவ்ளோதான்…இதுக்கெல்லாம்பயப்படக்கூடாது. புரியுதாடா..." என்றான் நவநீதன். 

புரிந்தும்புரியாமல்போல்விழித்தான்கார்த்திக்…

அப்போதுகண்டக்டரின்குரல்அவர்களைதிடீரென்றுஈர்த்தது.

"குன்றத்தூர்எல்லாம்இறங்குங்க…குன்றத்தூர்…எனகண்டக்டர்அழைக்கவே, இருவரும்பஸ்ஸிலிருந்துஇறங்கினர்.

இறங்கியவர்கள்தங்களதுவீட்டைநோக்கிசெல்லஆரம்பித்தனர்…அப்போதுகிரிக்கெட்விளையாடும்நண்பர்களில்ஒருவனானபெரியசாமிபஸ்ஸ்டாப்பைநோக்கிஓடிவந்தான்.





அவனைதடுத்துநிறுத்தியநவநீதன்"ஏண்டாஇப்படிவேகமாஓடிவர..?என்றுகேட்டான்.

அப்படி அவன் வேகமாய்ஓடிவந்ததற்கானகாரணத்தைசொல்லவும்…நவநீதன்அதிர்ச்சியில்உறைந்துபோய்நிற்க…கார்த்திக்மயங்கிவிழுந்தான்.

(தொடரும்)

++++++++++++++++++++++++++++++

கதையின் மற்ற பாகங்கள் படிக்க...

முதல் பாகம்இரண்டாம் பாகம்மூன்றாம் பாகம்,

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 10 (உண்மைச் சம்பவம்)

$
0
0
பெரியசாமி சொல்ல ஆரம்பித்தான்

''அண்ணே…நம்மசங்கர்…நம்மசங்கர்செத்துப்போயிட்டாண்ணே…அவனைபேய்அடிச்சுகொன்னுடுச்சி…நம்மபசங்கஎல்லாம்பயந்துபோய்இருக்கானுங்கண்ணே... சங்கர்செத்துப்போனதகவலைசொல்லிட்டுவரசொன்னாங்கஅதான்வேகமாகபோயிட்டிருக்கேன்...''என்று திக்கித் திணறி சொல்லி விட்டு, மூச்சிரைக்க நின்றான் பெரியசாமி.

இதைக்கேட்டு அதிர்ச்சியில்உறைந்த நவநீதனுக்கு, அதிலிருந்துமீள்வதற்குசிலமணித்துளிகள்பிடித்தது.

பெரியசாமி சொன்னதைக் கேட்டு மயக்கம்போட்டுவிழுந்தகார்த்திக்கைநவநீதன்தட்டிஎழுப்பினான். அவன்எழுந்திருக்காமல்போகவே... அருகிலிருந்தடீக்கடைக்குஅவனை இருவரும் தூக்கிக்கொண்டுபோனார்கள்.

சோடாஒன்றை வாங்கிஅவனது முகத்தில்சோடா நீரை தெளித்துஎழுப்பவும், கார்த்திக் மெல்ல எழுந்தான். எழுந்ததும் அவன் கண்கள் பீதியில் வெளிறிப்போக, ''அண்ணா... நான்அப்பவேசொன்னேன்ல... என்னைபேய்வந்துஅமுக்குச்சின்னு... பாருங்க... சங்கர்செத்துப்போயிட்டார். அவரைபேய்அடிச்சிகொன்னுடிச்சி... அடுத்துநானா..?''என்றுஅழஆரம்பித்தான்.

''டேய்லூசுமாதிரிஉளறாத... அப்படிஎல்லாம்ஒண்ணும்இருக்காது. நீபயந்துசாவாத... வாடாபோவோம்''என்றான்நவநீதன்.

''நான்வரலண்ணே... நான்மாகாளிகோயிலுக்குபோயிட்டுவந்திருக்கேன். எனக்குகோயில்பூசாரிமந்திரிச்சிகொடுத்ததாயத்துஇருக்கு... எனக்குஒண்ணும்ஆகாது... நான்எங்கவீட்டுக்குபோறேன்...''என்றுபுலம்பியபடி கார்த்திக்அவனதுவீட்டிற்குகிளம்பிச்சென்றான்என்பதைவிடஓடிப்போனான்என்பதேஉண்மை.

பெரியசாமியும்கிளம்பிப்போகவே, நவநீதன்நேரேசங்கரின்வீட்டிற்குசென்றான். அங்கேசங்கர்செத்துக் கிடந்தான். அவனைசேரில்உட்காரவைத்து, அவனது உடலுக்கு மாலைகள்சார்த்தப்பட்டிருந்தன. கொடூரமாய் செத்துப்போயிருந்த சங்கரின் உடலை மாலைகள் மறைத்துக் கொண்டிருந்தன. சங்கரின் உடலை பார்த்த போது உருக்குலைந்த எலும்புக் கூடு ஒன்று தோலாடை போர்த்தியது போன்று இருந்தது. நவநீதன் சங்கரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நவநீதனைப்பார்த்தவேதாசலம், வெடித்துவிம்மிஅழத்தொடங்கினார்...

''அப்பாசங்கரு... உன்பிரெண்டுநவதீநன்வந்திருக்கான்.பாருப்பா...அவன்கிட்டபேசுப்பா... நாளைக்குஞாயித்துக்கிழமை... கிரிக்கெட்விளையாடபோவணுமில்ல... எழுந்திரிப்பா...''எனசொல்லியபடிதலையலடித்துக்கொண்டுஅழுதார்.





நவநீதன்அருகேவந்த வேதாசலம் ''நவநீ... நீயாச்சும்சொல்லுப்பா... அவனைபேசச்சொல்லுப்பா... சொல்லுப்பா... தவமிருந்துபெத்தபுள்ளைப்பா...''

கமலம்மாள்பெருங்குரலெடுத்துகத்தத்தொடங்கினார். ''அடிமாரியாத்தா... உனக்கு கண்ணேஇல்லையாடி... என்புள்ளையைகாப்பத்தஉன்னாலமுடியலையா... அடிதலைவாசல்மாகாளி... உன்கோயிலுக்குமாசாமாசம்வந்துபூசைசெஞ்சேனே... இப்படிபேயடிச்சுஎம்புள்ளையகொன்னுபோடவச்சிட்டீங்களே...'' என்றபடிமார்பிலடித்துக்கொண்டேஅழுதவர், அப்படியேமயங்கிச்சரிந்தார்.

''ஐயோசங்கரு... உங்கம்மாமயங்கிட்டாடா... இப்பயாச்சும்எழுந்துபாருடா... பாருடா... பாருடா...'' என்றுசங்கரின்சித்திகதறினார்.

மரணம்ஒருகுடும்பத்தைஎப்படிகதறிச்சிதறவைக்கும்என்பதைஅன்றுதான்நவநீதன்உணர்ந்துகொண்டான். அவர்களின் அழுகுரல் அந்த வீதியெங்கும் ஒலித்தது. இடையிடையே சங்குச் சத்தமும் தன் பங்கிற்கு ஒப்பாரி வைத்தது. 

சங்கரின்உறவினர்கள்வரவே, அவர்களுக்குகைகொடுத்து, அழஆரம்பித்தார்வேதாசலம்.

ஒருமூலையில்சங்கரின்தம்பிமோகன்அழுதுகொண்டிருந்தான். அவனைசைகைகாட்டிஇங்குவாஎனகூப்பிட்டான் நவநீதன்.

அழுதபடியேவந்தமோகனிடம், ''என்னடாஆச்சி... நேத்துநைட்டுபாய்வீட்டுக்குபோயிட்டுவந்தப்ப, அவனுக்குசரியாயிடும்பயப்படாதீங்கன்னாங்க... நேத்துபார்த்ததைவிடஇன்றுஎலும்புக்கூடாய்போயிட்டானே... என்னடாஆச்சி... எப்படிடாநடந்துச்சி...''என்றான் நவநீதன்.

''காலைலஇருந்துஅண்ணன்எதுமேசாப்பிடல... தண்ணியாச்சும்குடிப்பான்னுபார்த்தா, தண்ணியகண்டாவேபயந்துநடுங்கினான்... மதியம் 12.00 மணிஇருக்கும்... ஊளைச்சத்தம்அவனிடமிருந்துபயங்கரமாவரஆரம்பிச்சுது... எல்லோரும்பயந்துபோய்அண்ணனைஎழுப்பிப்பார்த்தோம்... ஊளைச்சத்தம்மெல்லமெல்லஆரம்பித்து... அஞ்சுநிமிஷத்துலஅதிகமாஊளையிடஆரம்பிச்சிட்டான். அவன்கண்லஇருந்துகண்ணீர்வந்துச்சு... எச்சில்ஒருபக்கம்ஒழுதுகிட்டேஇருந்திச்சி... உடம்பைஎல்லாம்அவனாவேதன்நகங்களாலகீறிக்கிட்டான்... அவன்கையெல்லாம்ஒரேரத்தம்... ஊளைசத்தம்மெல்லமெல்லஅடங்கிச்சு... அப்படியே... அண்ணனும்.... துடிதுடிச்சி.... அடங்.....''அதற்குமேல்மோகனால்சொல்ல  முடியவில்லை. அவனது அழுகையும் உச்சத்திற்குப் போனது.

எல்லாவற்றையும்கேட்டநவநீதன், சங்கரின்அருகேசென்றுபார்த்தான்... அவன்முகம்வற்றிப்போய், கண்கள்எல்லாம்உள்ளேசென்றுஇருந்தது. அவன்மூக்கில்ரத்தம்வடிந்திருந்ததற்கானஅறிகுறியும்தென்பட்டது.

அவனைதொட்டுக்கும்பிட்டுவிட்டு, ஒருநண்பனை, நல்லகிரிக்கெட்வீரனைஇழந்துவிட்டோமோஎன்றகவலையோடுஅங்கிருந்துகிளம்ப எத்தனித்தான்.

சங்கரின்மரணத்திற்குபேய்காரணமல்லஎன்பதைஅவன்முன்பேஉணர்ந்திருந்தான். ஆனால்இந்தமரணத்திற்குவேறுகாரணம்இருக்கிறதுஎன்றுமனதிற்குள்நினைத்துக்கொண்டவன், இதுகுறித்துபேசுவதற்குஇதுசரியானநேரமல்லஎன்பதால்அங்கிருந்துகிளம்பிவிட்டான்.

ன்றுமாலைகிரிக்கெட்விளையாடும்அவனதுடீம்ஆட்கள்அனைவரும்ஒன்றுகூடினர். பெரியசாமி, கார்த்திக்உள்ளிட்டஅத்தனைபேரும்அங்கேஆஜராகியிருந்தார்கள். ஒவ்வொருவரும்பயந்துபோயிருந்தனர். கார்த்திக்மிகவும்பயந்துபோயிருந்தான்.

''நவநீஅண்ணா... சங்கரோடமாமாபேயாவந்துஅவரைகொன்னுட்டதாசொல்றாங்க... அப்போஅவரும்நம்மஊர்லஇருக்குறயாரையாவதுபிடிச்சுக்குவாரா..? இனிமேநம்மஊர்லயாரும்நடமாடமுடியாதா?. சனிப்பொணம்தனியாபோகாது...கூடஒருஆளோடதான்போகும்னுசொல்றாங்க... சங்கர்நம்மகூடதான்விளையாடுவார்... அப்போஅவரும்பேயாவந்துநம்மளைபிடிச்சிக்குவாரா.. சொல்லுண்ணா?''என்றான்சதீஷ்

இவனையடுத்துகார்த்திக்வாயைத்திறந்தான். ''நேத்துநைட்டுதான்என்னைஒருபேய்அமுக்கிகொல்லப்பார்த்துச்சி... சங்கர்வேறபேயடிச்சிசெத்துட்டாரு... நாம அவ்ளோதான்...'' என்றுபயந்துநடுங்கினான்.

பிளஸ்டூவகுப்பில்சயின்ஸ்குரூப்எடுத்துப்படித்தவன் நவநீதன். அதுமட்டுமின்றிபெரியாரின்பகுத்தறிவுஇயக்கத்தில் ஈடுபாடு கொண்டவன். ஆதலால்எதையும்ஆராய்ந்துபார்க்கும்குணம் அவனிடம் இருந்தது. கிரிக்கெட்விளையாடும்பசங்களின்பயம்தேவையில்லாததுஎனஅவனுக்குஅப்பட்டமாய்தெரிந்தது

அவர்களின்பயத்தைபோக்கவேண்டியதுதன்கடமைஎன்றுஉணர்ந்துகொண்டு, பேசஆரம்பித்தான்.

''எல்லோரும்கேட்டுக்கோங்கடா... சங்கர்பேயடிச்சிஒண்ணும்சாகல... அவன்செத்துப்போனதற்குவேறஏதோகாரணம்இருக்கு... அந்தகாரணம்என்னான்னுசீக்கிரமாகண்டுபிடிச்சிசொல்றேன். பேய்பிசாசுன்னுபயப்படாதீங்க... அப்படிஎல்லாம்ஏதும்இல்ல. உங்களைவிடஅவன்தான்எனக்குரொம்பநெருக்கமானபிரெண்டு. அப்படிபிடிக்கறதாஇருந்தாஅவன்என்னைமுதல்லபிடிக்கட்டும். நான்அவனைபாத்துக்கறேன்.''என்று விட்டு அவர்களைப் பார்த்தான் நவநீதன்.

எல்லோரும் நவநீதன் சொல்வதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் பேச ஆரம்பித்தான்.

''பேய்பிசாசுஎன்றமூடநம்பிக்கைஎல்லாம்படிப்பறிவில்லாகிராமமக்களைஏமாத்தும்வேலைடா. இதேபடிச்சமக்கள்இருக்குறசிட்டிலபேயிருக்குன்னுபிசாசுஇருக்குன்னுயாராச்சும்சொல்லிஇருக்காங்களா..? உதாரணத்துக்குசென்னையைஎடுத்துக்கோங்க... அங்கதினமும்ஆக்சிடெண்ட்ல, ஹாஸ்பிடல்லஎத்தனைபேர்சாவறாங்கதெரியுமா? அவங்கஎல்லாம்பேயாவாதிரியிறாங்க... 

இதுக்கு வேற ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு நினைக்கறேன். எல்லோரும் பயப்படாமஇருங்க.. ஒருவாரத்துலஎன்னகாரணம்னுகண்டுபிடிச்சிசொல்றேன்''என்றான்.

ஆயிரம்சமாதானம்சொன்னாலும்அந்தபசங்களுக்குதைரியம்வந்ததாய்தெரியவில்லை. இருப்பினும், நவநீதனுக்காக ''சரிண்ணே... நாங்கபயப்படல''என்றனர்.

சங்கர்இறந்துபோவதற்குமுன்அவனுடையசெய்கைகள், அவன்நடந்துகொண்டவிதம்போன்றவைதான்நவநீதனுக்குசந்தேகத்தைஎழுப்பகாரணமாய்இருந்தது. அத்துடன் அவர்களது சந்திப்பும் முடிந்தது.

ருவாரம்போனபிறகு, கல்லூரி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் சங்கரின்தம்பிமோகனைசந்தித்துபேசினான்நவநீதன்.

''என்னடாமோகன்எப்படிஇருக்கீங்க...''

''வீடேசோகத்துலஇருக்குண்ணே... அப்பாமனசுஉடைஞ்சிபோயிட்டார். அம்மாஒருவாரமாசாப்பிடாமஇருக்காங்க... மாமான்னுநினைச்சோம்... அந்தாளுசெத்துஎங்கஅண்ணனுக்குஎமனாஆயிட்டான்...''

''கவலைப்படாதடா... பிறந்துட்டோம்னா.. என்னைக்காவதுஒருநாள்செத்துப்போகத்தான்போறோம். ஆனாஇந்தவயசிலேயேசங்கர்இறந்திருக்ககூடாது. இருந்தாலும்இயற்கையைநம்மாலமீறமுடியாதுடா... திடமாஇருங்க... சங்கர்எங்கயும்போகல... நம்ம கூடவேஇருக்கான்னுநினைச்சுக்கோங்க...'' என்று ஆறுதல் கூறிவிட்டு ''சரி
ஒருவிஷயம்கேக்கறேன். பதில்சொல்றியா?'' 

''கேளுங்கண்ணே...''

''சங்கர்பணம்வசூல்பண்றதுக்குஎப்பெல்லாம்போவான்?''

''எப்பவும்சாயந்திரமாத்தான்போவான்...''

''எப்பவீட்டுக்குவருவான்..?''

''சாயந்திரமா போனா, பணத்தைஎல்லாம்வசூல்பண்ணிட்டுநைட்டு 9 மணிக்குமேல வீட்டுக்கு வந்துடுவான்.''

''அப்படி போற இடத்துல நாய், பூனை, எலி இப்படிஏதாச்சும்கடிச்சிதாடா..?''

''இல்லண்ணே...''

''நல்லாயோசிச்சுசொல்லு... இப்பஇல்ல... மூணுநாலுமாசத்துக்குமுன்னாடியாகூடஇருக்கலாம்.''




ஆழ்ந்துயோசித்த மோகன், ''ஆமாண்ணே... சுந்தராபுரத்தில் பண வசூலுக்குப்போனப்பரோட்டுலஓடிக்கொண்டிருந்தநாய்,அண்ணனைகடிச்சிருச்சி. ரெண்டுநாள்கழிச்சுகொத்தாம்பாடியிலபோய், நாய்கடிக்குசுட்டுகிட்டுவந்துட்டான்.''

நவநீதனுக்குமெல்லமெல்லவிஷயம்புரியஆரம்பித்தது. ''சரி மோகன்... உடம்பபாத்துக்கோ... வீட்டுலஇருக்கிறஒரேஆம்பளபையன்நீதான். பாத்துகவனமாநடந்துக்கோ...'' என்றுவிட்டுநேரேவீட்டுக்குவந்தான் நவநீதன்.

தனதுசைக்கிளைஎடுத்துக்கொண்டுகுன்றத்தூரிலேயேபெரியடாக்டர்எனபேரெடுத்திருக்கும்சாந்தாராம்வீட்டிற்குசென்றான்.

நவநீதன்குடும்பத்திற்கேசாந்தாராம்தான்மருத்துவம்பார்ப்பார். மருத்துவம்சார்ந்தசந்தேகம்எதுவாகினும்நேரேஅவரிடம்போய்விடுவான். அவரும்சளைக்காமல்அவனுக்குவிளக்கம்கொடுப்பார்

''டாக்டர்உங்ககிட்டபேசணும்.''

''ஏதேனும்பிரச்சினையா..? இல்லவழக்கம்போலசந்தேகமா..?''

''சந்தேகம்தான்சார்...'' என்று விட்டுசங்கருக்குநடந்ததைஆரம்பம்முதல்முடிவுவரைசொல்லிமுடித்தான்.

''எனக்குசந்தேகமெல்லாம்... சங்கர்ரேபிஸ்நோயாலசெத்திருப்பான்னுநினைக்கறேன். பிளஸ்டூ - ரேபிஸ்பத்திபடிச்சிருக்கேன். நான்நினைச்சதுசரியாடாக்டர்?''

''நிச்சயமாஉனதுயூகம்சரிதான். ரேபிஸ்ங்கறதுவெறிநாய்கடிச்சதாலவரக்கூடியஉயிர்கொல்லிநோய். நாய்கடிச்சதுமேதடுப்புஊசிபோட்டுக்கணும். இல்லன்னாஅடுத்தமூணுமாசத்துலஆளையேகாலிபண்ணிடும்.''

''இந்த நோயோட அறிகுறிகள் எப்படி இருக்கும் டாக்டர்..?''

ரேபிஸ்நோய்தாக்கினவங்கஎப்பவும்இருட்டுலயேதான்இருக்கவிரும்புவாங்க. தண்ணியகண்டாபயப்படுவாங்க. அதைஹைட்ரோபோபியான்னுமருத்துவம்சொல்லுது. வாயிலிருந்துஎச்சில்ஒழுதுகிட்டேஇருக்கும். நாய்மாதிரிகுரைப்பாங்க.. ஊளையிடுவாங்க... ரேபிஸ்நோய்நேரேமூளையைதாக்கிஆளையேஎலும்புக்கூடாக்கி சாகடிச்சுடும்.

நீசொன்னதெல்லாம்ரேபிஸைத்தான்உறுதிப்படுத்துது. நாட்டுவைத்தியம்ங்கறஎன்றபேர்லஒருவேதிஉப்பைநாய்கடிச்சஇடத்துலவிட்டுஒருஅமிலத்தைஊத்துவாங்க... அதுபொங்கிவந்துஅந்தகடிபட்டஇடத்தைசுத்தப்படுத்தறமாதிரிசெய்யும். அது அந்த இடத்தில் உள்ள கிருமியைத்தான் அழிக்குமே தவிர, ரத்தத்தில் கலந்த கிருமியை அழிக்காது. அதுசரியானவழிமுறையும்இல்லை. ரேபிஸ்வைரஸ்ரத்தத்துலகலந்துடும். அதைதடுத்தாதான்உயிர்பிழைக்கமுடியும். அதால்தான்நாட்டுவைத்தியம்எப்பவும்சரிவராதுன்னுநாங்கசொல்லுவோம்''என்றார். 

''அந்தபாய்வீட்லஅவன் 2 நிமிஷம்நல்லாபேசினானேசார்அதுஎப்படிசாத்தியம்?''

மருத்துவத்துல 'ஹிஸ்டீரியாட்ரீட்மெண்டு'ன்னுசொல்லுவாங்க. அதாவதுபுத்திபேதலித்துஇருப்பவனுக்குஅதிர்ச்சிவைத்தியம்கொடுத்துஅவனைசகஜநிலைக்குகொண்டு வரலாம். அந்தஅதிர்ச்சிவைத்தியத்தைநீங்களோ, நானோகூடசெய்யலாம். அதைஅந்தபாய்தன்னுடையவருமானத்துக்காகபேய்னுசொல்லியிருக்கார். அதான்விஷயம்.''

''ஆட்டோவில வரும் போது வேதாசலம் ஏன் டாக்டர் பல்லை நறநறவென்று கடித்தபடி தன்னை சாமி என்று சொன்னாரே..? அது எப்படி சாத்தியம்?''

தன்னை அவர் கடவுளாக நினைத்துக் கொண்டு, அவரை சார்ந்தவர்களை திருப்திப்படுத்த அவர் அப்படி செய்திருப்பார். சாமி ஊர்வலம் ஊர்வலம் வருகையில் சில பெண்கள் வேண்டுமென்றே சாமியாடுவதில்லையா அதுபோலத்தான் இதுவும்''என்றார்.

சாந்தாராமின் தெளிவான பதில்கள், நவநீதனின் மனக்குழப்பங்களை போக்கியது.

''என்சந்தேகம்தீர்ந்ததுரொம்ப நன்றி டாக்டர்என்றுஇந்தமக்களிடம்இருந்துஅறியாமைநீங்குதோஅன்றுதான்பேய்பிசாசுபோன்றமூடநம்பிக்கைகளிடமிருந்துவிடுதலைகிடைக்கும்.''என்று அவன் சொல்லி முடிப்பதற்கும், டாக்டரைப் பார்க்க நோயாளி ஒருவர் உள்ளே வருவதற்கும் சரியாக இருக்கவே, அவரிடம் இருந்து விடைபெற்று வெளியே வந்தான்.

சங்கரின் அறியாமையாலே, அவனது ஆயுளை இழந்து விட்டது நவநீதனுக்கு வருத்தத்தை தந்தது. இன்னும் இதுபோல் எத்தனை சங்கர்கள் இருப்பார்களோ? என எண்ணியவாறு தனது சைக்கிளை ஓட்டத் துவங்கினான்.

சங்கர்வெறிநாய்கடியால்தான்இறந்துபோனான் என்பதை நம்மபசங்ககிட்டவிரிவாஎடுத்துசொல்லணும். அப்பதான்அவனுங்கபுத்திதெளியும்'என்று நினைத்தவாறுவீட்டிற்குகிளம்பினான்நவநீதன்.

(முற்றும்)
++++++++++++++++++

கதையின் முந்தைய பாகங்கள் படிக்க...

முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம்,

நிகழ்வுகள் 2015

$
0
0



ஜனவரி

@ 1950-ல் உருவாக்கப்பட்ட திட்டக்கமிஷன், ‘நிதி ஆயோக்’ (NITI- National Institution for Transforming India) என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. நிதி ஆயோக் அமைப்பின் முதல் தலைவர்: பிரதமர் நரேந்திர மோடி. முதல் துணைத்தலைவர்: அரவிந்த் பனகாரியா.
@ ஆந்திரபிரதேச மாநிலத்தின் சுகாதாரத்துறையின் விளம்பரத் தூதுவராக அமிதாப் பச்சன் நியமனம்.
@ பிரசவ கால விடுப்பு, 135 நாட்கள் இருந்ததை 180 நாட்களாக மாற்றி பீகார் அரசு உத்தரவு
@ தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்திஜி இந்தியா திரும்பி, 100 ஆண்டுகள் நிறைவடைந்ததால் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
@ நிதிஆயோக்அமைப்பின்தலைமைச்செயல்அதிகாரியாக சிந்துஸ்ரீ குல்லார் நியமனம்.
@ கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம்,  நாட்டிலேயே முதன்முதலாக முழுமையாக இணையதள இணைப்புடன் இணைக்கப்பட்ட மாவட்டமானது.
@ பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமண்காலமானார்.
@ இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றி.
@ இலங்கை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஸ்ரீபவன் நியமனம். சுப்பையா சர்வானந்திற்குபிறகு இப்பதவியை வகிக்கும் இரண்டாவது தமிழர் இவர்.
@ மகாராஷ்டிராவிலுள்ள நாசிக் சிறையில் சிறைக்கைதிகளுக்காக சிறைக் கைதிகளே நடத்தும் வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ‘சுதர்வாணி’ என்ற பெயரில் ஒலிபரப்பாகிறது.
@ புதிய வெளியுறவுச் செயலராக ஐஎப்எஸ் அதிகாரி ஜெய்சங்கர் நியமனம்.
@ உடல் உறுப்பு தானத்தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்
@ பெண்குழந்தைகளைக் காப்பாற்றவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்கவும் ‘மகளைக் காப்போம், மகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் பிரசார தூதராக நடிகை மாதுரி தீட்சித் நியமனம்.
@ ஜனவரி 25-ல் தேசிய வாக்களர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான வாசகம் ‘சுலபமான பதிவு, சுலபமான திருத்தம்’.
@ தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி. ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு
@ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் குமார் சங்ககரா 12 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.
@ இந்திய நீச்சல் வீராங்கனை பக்டி சர்மா அண்டார்ட்டிக் பெருங்கடலில் 1 டிகிரி குளிர் நிலையில் 1.4 மைல் தூரத்தை, 52 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்தார்.
@ அமெரிக்காவின் மியாமி தீவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் கொலம்பியாவைச் சேர்ந்த பவுலினா வேகா முதலிடம்.
@ இந்தியாவின் 66-வது குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பல்கேற்றார். இந்தியக் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை.
@ தமிழ்நாட்டில், மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி. மீனா குமாரி நியமனம்.
@ இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக எச்.எஸ்.பிரம்மா பொறுப்பேற்பு
@ இஸ்ரோவின் புதிய தலைவராக ஏ.எஸ். கிரண் குமார் நியமனம்
@ 2014-ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை மூன்றாவது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.
@ வங்கதேச நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சுரேந்திர குமார் சின்கா நியமனம். இந்நாட்டில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் இப்பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறை.
@ குரோஷியா நாட்டின் முதல் பெண் அதிபராக கொலிந்தா கிராபா கிராதொவிச் தேர்வு
@ இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஹரிஹந்த் பரிசோதனை முறையில் இயக்கப்பட்டது.
@ நாட்டில் முதல்முறையாக கேரளாவிலுள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் டிஜிட்டல் புத்தகங்கள் – கேரள அரசு அறிவிப்பு
@ மதன்மோகன் மாளவியா மற்றும் வாஜ்பாய் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா பட்டம் அறிவிப்பு
@ சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் பரிசு கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டது.
@ நாட்டிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் காட்சியகம் அமைக்க மாமல்லபுரம் தேர்வு.
@ உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – 2015: தூதராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் நியமனம்.
@ இந்திய உளவுத்துறை தலைவராக தினேஷ் சர்மா நியமனம்.

பிப்ரவரி

@ ஆஸ்கர் விருது பெற்ற சிறந்த திரைப்படம் – பேர்ட்மேன் (அமெரிக்கா)
@ பொருளாதார அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், பிரிட்டனின் ‘ஜான் மேனார்டு கேன்ஸ்’ விருது பெற தேர்வு செய்யப்பட்டார்.
@ மராத்திய நாவலாசிரியரான பாலச்சந்திர நெமதேவுக்கு 2014-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிப்பு.
@ 67-வது மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
@ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரித்வி – 2 ஏவுகணை சோதனை வெற்றி
@ உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்த வீரர் கிறிஸ் கெயில். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இச்சாதனையை இவர் நிகழ்த்தினார்.
@ 33 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற உலகின் முதல் வீராங்கனை என்ற பெருமையை செரீனா வில்லியம்ஸ் பெற்றார்.
@ இந்தியவிடுதலைப்போராட்டவீரரும், பத்திரிகையாளருமான ஐ. மாயாண்டிபாரதி காலமானர்.

மார்ச்
@ தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா, சாய்லஷ்மி பலிஜெபள்ளி, பி. கௌசல்யா ஆகியோர் மகளிர் தினத்தன்று சக்தி புரஸ்கர் விருது பெற்றனர்.
@ 2015-க்கான ஸ்டாக்ஹோம் நீர் விருது பெற, இந்திய தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தேர்வு.
@ செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வழங்கும் தொல்காப்பியர் விருதுக்கு தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தேர்வு.
@ மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற எழுத்தாளர் சா. தேவதாஸ் தேர்வு. ஆங்கிலத்தில் பபானி பட்டாச்சார்யா எழுதிய ‘ஷேடோ @ ஓவர் லடாக்’ என்ற நூலை ‘லடாக்கிலிருந்து கவிழும் நிழல்’ என்ற தலைப்பில், தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
@ 2014-ஆம் ஆண்டுக்கான சர்வதேச காந்தி விருது பெற, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தேர்வு.
@ பழம்பெரும் இந்தி நடிகர் சசி கபூர், தாதா சாகேப் பால்கே விருது பெற தேர்வு
@ தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருது குற்றம் கடிதல் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. தேசிய அளவிலான சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருது காக்கா முட்டை படத்திற்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது பாபி சிம்ஹாவிற்கும் வழங்கப்பட்டது.
@ விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமர் நரேந்திர மோடி நியமனம்
@ தமிழக தேர்தல் ஆணையராக பெ.சீத்தாரமன் நியமனம்.
@ 1999-ம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அமெரிக்கா- கியூபா இடையிலான நேரடி தொலைபேசி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது
@ பிரிட்டனில் உள்ள ராயல் சொசைட்டி தலைவராக நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வு.
@ அமெரிக்காவிற்கான புதிய இந்திய தூதராக அருண் குமார் சிங் நியமனம்.
@ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றார். 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை சென்ற முதலாவது இந்தியப் பிரதமர் இவர்.
@ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஜக்மோகன் டால்மியா தேர்வு
@ தில்லியைச் சேர்ந்த அதிதி ஆர்யா, 2015-ஆம் ஆண்டுக்கான இந்திய அழகியாகத் தேர்வு
@ போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக அளவில் பணக்காரர்களின் வரிசையில் பில்கேட்ஸ் முதல் இடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் முதல் இடம் முகேஷ் அம்பானி.
@ ஆந்திராவின் புதிய தலைநகராமாக அமராவதி தேர்வு.
@ 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.
@ சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ காலமானார்.
@ உலகக்கோப்பை கிரிக்கெட் 2015-ல் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. நியுசிலாந்து அணியை வீழ்த்தி 5-ஆவது முறையாக இக்கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
@ வில்வித்தையில் 3 வயது சிறுமி ஷிவானி தேசிய சாதனை.

ஏப்ரல்
@ ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதியை அடுத்துள்ள வனப்பகுதிய்ல் செம்மரம் கடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் காவல்துறையினரால் ஏப்ரல் 7-ஆம் தேதி அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
@ இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி நியமனம். இவருக்கு முன்னதாக தேர்தல் ஆணையராக இருந்த ஹரிசங்கர் பிரம்மா ஓய்வு பெற்றதை அடுத்து, நசீம் சைய்தி தேர்வு.
@ நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி தேர்வு. இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியர் இவர். 
@ நாட்டில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத முதல் மாவட்டமாக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா அறிவிப்பு
@ நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்.
@ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோவும் பனாமாவில் நடந்த அமெரிக்காக்களின் உச்சிமாநாட்டில் சந்தித்துக் கொண்டனர். கியூபா புரட்சிக்குப் பின்னர் இரு நாட்டுத்தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறை.
@ உள்நாட்டுக் கலவரத்தால் ஏமனில் சிக்கியிருந்த 4640 இந்தியர்களையும் 960 வெளிநாட்டவர்களையும் இந்தியா அங்கிருந்து வெளியேற்றியது.
@ நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,500 பேர் உயிரிழந்தனர், பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லை.
@ பிரபல எழுத்தாளர்ஜெயகாந்தன்காலமானார்
@ அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா மற்றும் இரண்டு பள்ளி சிறுமிகள் மீது தாக்குதல் நடத்திய 10 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
@ இஸ்லாமியப்பக்திப்பாடகரான நாகூர்ஹனீபாகாலமானார்.
@ ஆசியாவிலேயே முதல்முறையாக மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டம் கர்நாடகாவில் அறிமுகம்.
@ குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் முதல் ஸ்மார்ட் சிட்டி  அமைக்கப்பட உள்ளது.
@ உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி – 3 ஏவுகணை சோதனை வெற்றி
@ விண்வெளியில் உள்ள சிறிய கிரகம் ஒன்றிற்கு, இந்திய செஸ் விளையாட்டு வீரரான விஸ்வநாதன் ஆனந்தின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அந்த கிரகத்திற்கு ‘விஷ்யானந்த்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
@ பெண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதலிடம் பிடித்து சாதனை
@ உலகில் அதிக ஊதியம் பெறும் தலைமைச் செயல் அதிகாரிகளின் வரிசையில் முதலிடம் பிடித்தவர், மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ பொறுப்பில் இருக்கும் சத்ய நாதெல்லா. இவரது ஆண்டு வருமானம் 522 கோடி ரூபாய்.
@ பிரபல ஓவியரானகோபுலு காலமானார்.

மே
@ உலகில் முதல்முறையாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமனம்.
@ பிரிட்டிஷ்பொதுத்தேர்தலில்,  டேவிட்கேமரூன்தலைமையிலானகன்சர்வேட்டிவ்கட்சிகூட்டணிபெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.
@ சொத்துக்குவிப்புவழக்கில்தமிழகமுன்னாள்முதல்வர்ஜெ. ஜெயலலிதா, சசிகலாஉட்படநால்வரைவிடுதலைசெய்துகர்நாடகஉயர்நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
@ சொத்துக்குவிப்புவழக்கில்இருந்துவிடுவிக்கப்பட்டஜெ. ஜெயலலிதா, தமிழகமுதலமைச்சராக மீண்டும்பொறுப்பேற்றார்.
@ ஈழத்தமிழ் எழுத்தாளர்ஷோபாசக்திநடித்ததீபன்என்றபிரெஞ்சுத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரைப்படத்துக்கானதங்கப்பனைவிருதைவென்றது.
@ ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இரண்டாம் இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றது.
@ விவசாயிகளுக்கு ‘கிஷான் சேனல்’ என்ற தனி தொலைக்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஜூன்

@ நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் இருப்பதை அடுத்து, இந்த நூடுல்ஸ் விற்பனைக்கு உத்தர பிரதேச அரசு தடை விதித்தது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தன.
@  பார்வையற்ற பெண் பெனோ செபைன், இந்தியாவின் முதல் ஐஎப்எஸ் அதிகாரியாக நியமனம்.
@ மொரீஸியஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியானார் அமீனா குரிப் பாகிம்
@  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூரியா, அந்நாட்டின் துணை அமைச்சராக பதவியேற்பு
@  21-ஆம் நூற்றாண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் தெண்டுல்கர் தேர்வு
@ இந்தியாவின் இரண்டாவது முஸ்லிம் பெண் ஐபிஎஸ் அதிகாரியானார் லக்னோவைச் சேர்ந்த அன்ஜும் அரா.
@  உலகின் முதல் எலெக்ட்ரானிக் விமானத்தை உருவாக்கி சாதனை படைத்தது சீனா.
@  சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை ஜுன் 29-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

ஜூலை

@  தமிழ்நாட்டில் கட்டாய ஹெல்மெட் சட்டம் ஜூலை 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
@ பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஜூலை 17 அன்று காலமானார்.
@ முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.

@  பாதுகாப்பான மற்றும் தூய்மையான உணவை உறுதி செய்வதற்கான  திட்டமான ‘சுரக்சி காத்யா அபியான்’ அறிமுகம்.
@  நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்தும் நோக்கில் ‘All India Council of Sports’ என்ற புதிய அமைப்பு உருவாக்கம்.
@  இண்டர்நேஷனல் மானிட்டரி பண்ட் அமைப்பிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாத முதல் ஐரோப்பிய நாடு கிரீஸ்.
@  பிரேசில், ரஷ்யா. இந்தியா, சீனா, தென்னாபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ், தனக்கென புதிய வங்கியை சீனாவின் ஷாங்காயில் தலைமை இடமாகக் கொண்டு செயல்படத்துவங்கியது. இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவின் கே.வி. காமத் நியமனம்.
@  டிராய் அமைப்பின் தலைவராக ராம் சேவக் சர்மா நியமனம்.
@  ராமன் மகசேசே விருது இந்தியர்களான சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தா உள்பட ஐந்து பேருக்கு அறிவிப்பு
@  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஜூலை 27- அன்று காலமானார்.
@  விம்பிள்டனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் சானியா மிர்சா
@  ஐபிஎல் முறைகேடுகளை விசாரித்த ஆர்.எம். லோத்தா தலைமையினான விசாரணைக் குழு அறிக்கையின்படி, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பு.

ஆகஸ்ட்

@  தமிழக அரசின் முதல் அப்துல்கலாம் விருது, பெண் விஞ்ஞானி வளர்மதிக்கு வழங்கப்பட்டது.
@  நாட்டிலேயே தூய்மையான 10 நகரங்களில் மைசூருக்கு முதலிடமும் திருச்சிக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
@  2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதார் அட்டை வழங்கும் அமைப்பு, நிதி ஆயோக்குடன் இணைப்பு
@  குஜராத் மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை
@  பொதுத்துறை வங்கிகளை சீரமைக்கும் 7 அம்ச திட்டத்திற்கு ‘மிஷன் இந்திர தனுஷ்’ என பெயரிடப்பட்டது.
@ மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தால் ஆன்லைன் மூலம் புதிய சிலிண்டர் இணைப்பு பெறும் வசதியைத் தரும் சாஹச் திட்டம் தொடக்கம்.
@ சூரிய சக்தி மூலம் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் எனும் சிறப்பை கொச்சி விமான நிலையம் பெற்றது.
@ இலங்கைக்கு வராகா எனும் ரோந்துக் கப்பலை வழங்கியது இந்தியா.
@ இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நான்காவது முறையாக நியமனம்.
@ பிரபல கன்னட எழுத்தாளர் மல்லேசப்பாமடிவாளப்பாகாலமானார்.
@ கிரேக்க நாட்டின் முதல் பெண் பிரதமராக வாஸ்ஸில்கி தாணு பதவியேற்பு
@ சவுதி அரேபியாவில் முதல்முறையாக நகராட்சித் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் பெண்களுக்கு அனுமதி.
@ தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அர்ஜுனா விருதும். சானியா மிர்சாவிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது.
@ 2014-ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற, வீரப்ப மொய்லி தேர்வு.
@ கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமனம்.
@ ஒலிம்பிக் அமைப்பில் 206-வது நாடாக தெற்கு சூடான் இணைந்தது.
@ இங்கிலாந்து 3-1 என்றகணக்கில்ஆஸ்திரேலியஅணியைவென்றுஆஷஸ்தொடரைவென்றது.
@ இலங்கைநாடாளுமன்றத்தேர்தல், 2015: ஆளும்ஐக்கியதேசியக்கட்சி 106 இடங்களையும், ஐக்கியமக்கள்சுதந்திரக்கூட்டணி 95 இடங்களையும்,தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 16 இடங்களையும்வென்றன.

செப்டம்பர்

@ சிரியா உள்நாட்டுப்போர்: 120,000 அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடியமர்த்த ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
@ நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அந்நாடு மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
@ சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு அருகே மினா எனுமிடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழப்பு; 863 பேர் காயம்.
@ ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பு.
@ பிரபல எழுத்தாளரான கௌதமநீலாம்பரன் காலமானார்.
@ சர்வதேச கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவரான ஜக்மோகன்டால்மியா  காலமானார்.
@  அத்வைதவேதாந்தஆசிரியரான தயானந்தசரசுவதிசுவாமிகள் காலமானார்.

அக்டோபர்

@ ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு 2016-17 ஆம் ஆண்டுக்கான நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளாக எகிப்து, செனகல், உருகுவே, ஜப்பான், உக்ரைன் ஆகிய நாடுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
@ ஆந்திரப்பிரதேச புதிய தலைநகராக அமராவதி கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார்.
@ பிரபல தென்னிந்திய நடிகையான மனோரமா காலமானார்.
@ எழுத்தாளரும் பிரபல விமர்சகருமான வெங்கட்சாமிநாதன் காலமானார்.

நவம்பர்

@ வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவானது, 2014- ஆம்ஆண்டில்அதீத அளவைஎட்டியுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
@ மியான்மர்பொதுத்தேர்தலில்ஆளும்கட்சிதனதுதோல்வியடைந்தது.ஆங்சான்சூகியின்சனநாயகத்துக்கானதேசியமுன்னணி 348 இடங்களைக்கைப்பற்றி, அறுதிபெரும்பான்மை பெற்றது.
@ பிரான்சின்தலைநகர்பாரீசில்நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டினால் குறைந்தது 26 பேர்உயிரிழந்தனர். ஐஎஸ் தீவரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது.
@ தமிழ் திரைப்பட இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்காலமானார்
@ பக்திப் பாடகரானபித்துக்குளிமுருகதாஸ்காலமானார்.

டிசம்பர்

@ டிசம்பர் 1-ஆம் தேதி சென்னையில் 49 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலர் உயிரிழப்பு.
@ இந்தியாவின்முன்னாள்பிரதமர்ராஜீவ்காந்திகொலைவழக்கில்குற்றவாளிகள்எனக்கண்டறியப்பட்டவர்களைவிடுவிக்கதமிழகஅரசுக்குஉரிமைஇல்லைஎனஇந்தியஉச்சநீதிமன்றம்தீர்ப்பு.
@ ரஷ்யா, அமெரிக்க, மற்றும்பிரிட்டன் விண்வெளிவீரர்கள்மூவரைஏற்றிக்கொண்டுசோயுஸ்டிஎம்ஏ-19எம்பைக்கானூரில்இருந்துசர்வதேச விண்வெளிநிலையம்நோக்கிவெற்றிகரமாகஏவப்பட்டது.
@ பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில், அதிகரித்து வரும் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸிற்கு கீழ் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
@ கென்யாவில் உலக வர்த்தக மைய மாநாடு நடைபெற்றது.
@ தமிழக அரசின் சட்டத்துக்கு எதிரான வழக்கில், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு
@ தில்லியில் மாசு அதிகரிப்பைத் தடுக்க புதிதாக டீசல் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.
@ அன்னை தெராசாவிற்கு அடுத்த ஆண்டு புனிதர் பட்டம் வழங்க ரோமன் கத்தோலிக்க திருச்சபை முடிவு.
@ பிரபல எழுத்தாளரான விக்கிரமன்காலமானார்.
@ ஜப்பான் உதவியுடன் மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் விடுவதற்கான ஒப்பந்தம், 98 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கையெழுத்தானது.
@ எழுத்தாளர் ஆ. மாதவன் எழுதிய ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற நூல், 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது.
@ சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்- இதன்படி 16 வயதுக்கு மேற்பட்டோர் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும்.

நோபல் பரிசு - 2015

இலக்கியம்

பெலாரஸ் நாட்டு பெண் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸ்விச்சிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. இரண்டாம் உலகப்போர், ஆப்கானிஸ்தான் போர் உள்ளிட்ட போர்கள் குறித்தும், செர்னோபில் அணு உலை விபத்து பற்றியும் ஸ்வெட்லானா எழுதியுள்ளார். 67 வயதான ஸ்வெட்லானா, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறும் 14வது பெண்.

இயற்பியல்

இயற்பியல் துறையில் ஜப்பான் விஞ்ஞானி டகாகி கஜிடா மற்றும் கனடா நாட்டு விஞ்ஞானி ஆர்தர் பி.மெக்டொனால்ட் ஆகியோருக்கு  நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக  நோபல் பரிசு கிடைத்துள்ளது. 

வேதியியல்

மரபணுக்களில் கோளாறு ஏற்படும்போது அதனை நம் உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு  தாமஸ் லிண்டால், பால் மோட்ரிச், அஜீஸ் சான்சார் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுகிறது. தாமஸ் லிண்டாஸ் சுவீடனையும், பால் மோட்ரிச் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். அஜீஸ் சான்சார் துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவர். 

மருத்துவம்

வில்லியம் சி.கேம்பெல், சடோஷி ஓமுரா மற்றும் யுயு டு ஆகிய மூன்று பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு  கிடைத்துள்ளது. யானைக்கால் நோய் மற்றும் மலேரியா நோய் சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடித்தமைக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. 

அமைதி

அமைதிக்கான நோபல் பரிசு  துனிஷியா நாட்டின் தேசிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைக் குழுவுக்கு கிடைத்துள்ளது. துனிஷியாவில் நடந்த புரட்சிக்குப் பிறகு ஜனநாயகத்தை ஏற்படுத்த பாடுபட்டதற்காக இந்த விருது தரப்பட்டுள்ளது. 

பொருளாதாரம்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவில் பணியாற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆங்கஸ் டீட்டனுக்கு வழங்கப்படுகிறது. நுகர்வு, வறுமை, சமூக நலம் ஆகியவைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. 

உலகின் தற்போதைய பெண் தலைவர்கள்! - மகளிர் தின சிறப்புப் பதிவு!

$
0
0


 
உலகில் மொத்தம் 205-க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இத்தனை நாடுகளில் எத்தனை பெண்கள் அதிபராகவோ, பிரதமராகவோ இருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தால் 16 பேர் காணக்கிடைத்தார்கள். உலகில் சரிபாதி பெண்கள்தான். 205 நாடுகளில் 16 நாடுகளில் மட்டுமே பெண்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதாவது, உலகிலுள்ள நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் எண்ணைக்கையை கணக்கிட்டால் ஆறரை சதவீதம் மட்டுமே பெண்கள் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார்கள். மீதம் 93 சதவீதம் பேர் ஆண்களாகவே இருக்கிறார்கள்… இனி அந்த பதினாறு பெண் தலைவர்களைப் பார்க்கலாம்…

ஏஞ்சலா மெர்கல் (Anjelo merkel) அதிபர், ஜெர்மனி
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் அதிபராக பதவி வகித்து வருபவர் ஏஞ்சலா மெர்கல். இவர், இந்நாட்டின் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். கிறிஸ்டியன்ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த இவர், முன்னதாக, 2005, 2009 ஆம்ஆண்டுகளில்நடைபெற்றதேர்தலில்வெற்றிபெற்றுபிரதமராகப்பதவிவகித்திருக்கிறார். 2013-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர் இவர். அமெரிக்காவில்இருந்துவெளியாகும்டைம்இதழின் 2015 ஆம்ஆண்டின்சிறந்தமனிதராக தேர்வு செய்யப்படவர்.

எல்லன்ஜான்ஸன்சர்லீப், (Ellen Johnson Sirleaf) அதிபர், லைபீரியா
மேற்குஆப்பிரிக்கநாடானலைபீரியாவின்முதல்பெண்அதிபராக 2005-இல்தேர்ந்தெடுக்கப்பட்டவர்எல்லன்ஜான்ஸன்சர்லீப், ஹார்வர்டுபல்கலைக்கழகத்தில்பொருளாதாரத்துறையில்பட்டம்பெற்றவர். 2011-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டவர். 2012-ஆம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதிப் பரிசினை வென்றவர். இந்நாட்டின் 42-வது அதிபராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.

டாலியாகிரிபவுஸ்கைடே, (Dalia Grybauskaitė) அதிபர், லித்துவேனியா
வட ஐரோப்பா பகுதியில் உள்ள நாடு லித்துவேனியா. இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று வரை அதிபராக இருக்கும் இவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்நாட்டினரால் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் இவர் கராத்தேவில் ‘கறுப்பு பட்டை’ பெற்றவர்

தில்மாரூசெப், (Dilma Rousseff)அதிபர், பிரேசில்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் 36-வது அதிபராக பதவி வகித்து வருகிறார் தில்மா ரூசெப். இந்நாட்டின் முதல் பெண் அதிபரும் இவர்தான். 2011-ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வரும் இவர், லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மாகணத்தின் தலைவராக பதவி வகித்திருக்கிறார். பிரேசிலின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டாம் முறையாக அதிபர் பதவி வகித்து வருகிறார்.

அடிபெடே ஜஜாகா, (Atifete Jahjaga)அதிபர், கொசோவோ
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசோவோ நாட்டின் நான்காவது அதிபரும், அந்நாட்டின் முதல் பெண் அதிபருமான அடிபெடே ஜஜாகா,  முன்னதாக அந்நாட்டு காவல் துறையில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். அமெரிக்காவின் எப்பிஐ அகாதெமியில் படித்து பயிற்சி பெற்றவர் இவர்.

பார்க்ஷியுன்ஹை, (Park Geun-hye) அதிபர், தென் கொரியா
கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவின் பெண் அதிபராக பதவி வகித்து வரும்பார்க்ஷியுன்ஹை, கிராண்ட் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டின் அதிபரான முதல் நபரும் இவரே. எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் இவர். கிழக்காசிய நாடுகளில் வலிமைமிக்க பெண்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.

மிச்செல்பேச்லெட், (Michelle Bachelet) அதிபர், சிலி
இலத்தீன்அமெரிக்கநாடானசிலி நாட்டின் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக 2006-லிருந்து 2010 வரை பதவியிலிருந்தவர். பின்னர், .நா. பெண்கள்அமைப்பின்தலைவராகஇருந்தஅவர், 2013-ஆம்ஆண்டுமார்ச்மாதம்அந்தப்பதவியைராஜிநாமாசெய்துவிட்டு மீண்டும், அரசியலுக்கு வந்தார். 2014 முதல் மீண்டும் இந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார்.

கொலிண்டா கிராபர் கிட்ரோவிக் (Kolinda Grabar-Kitarović), அதிபர், குரோஷியா

ஐரோப்பியயூனியனில் உள்ள நாடுகளில் ஒன்று குரோஷியா. இந்நாட்டின் முதல் பெண் அதிபராக சென்ற ஆண்டு பிப்ரவரியில் பதவி ஏற்றுக் கொண்டவர். குரோஷியக் குடியரசின் நான்காவது அதிபர், மிக இளம் வயதிலேயே அதிபர் ஆனவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. கன்சர்வேட்டிவ் குரோஷியன் டெமாக்ரட்டிக் யூனியன் கட்சியைச் சேர்ந்தவர் இவர்.

அமீனா குயூரிப், (Ameenah Gurib) அதிபர், மொரீஷியஸ்
இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். பணக்கார நாடான இங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் பாகிம் சென்ற ஆண்டு பதவி ஏற்றார். சுற்றுச்சூழலியல் விஞ்ஞானியான இவர், மொரிஷியஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

பிந்த்யா தேவி பண்டாரி, (Bidhya Devi Bhandari) அதிபர், நேபாளம்
உலகின் மிக உயரமான சிகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் நேபாளம். இந்நாட்டின்நேபாளகம்யூனிஸ்ட்கட்சி (யுஎம்எல்) சார்பில்வித்யாதேவிபண்டாரி, கடந்த ஆண்டு அக்டோபரில்அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இதன்மூலம்நேபாளத்தின்முதல்பெண்அதிபர்என்றபெருமையும் அவருக்குக் கிடைத்தது.
அதிபர்வித்யாதேவிபண்டாரிநேபாளத்தின்மன்னர்ஞானேந்திராவின்சர்வாதிகாரத்தைஎதிர்த்துமக்களைத்திரட்டிதொடர்ந்துபோராட்டங்கள்நடத்திவந்தார். அவரதுபெருமுயற்சியால்மன்னரின்சர்வாதிகாரஆட்சி 2008ல்முடிவுக்குவந்தது. அதைத்தொடர்ந்துநேபாளத்தில்ஜனநாயகம்மலர்ந்தது. நூற்றாண்டுகளாகத்தொடர்ந்துவந்தமன்னராட்சிஒழிக்கப்பட்டு, குடியரசானபிறகுவித்யாதேவிநேபாளத்தின்இரண்டாவதுஅதிபராக ஆகியுள்ளார்.

ஹில்டா ஹெயினே, (Hilda Heine) அதிபர், மார்ஷல் தீவுகள்
 பசிபிக்பெருங்கடலில்அமைந்துள்ளமைக்ரோனேசியாதீவுக்கூட்டத்தின்ஒருபகுதிமார்ஷல்தீவுகள். 72,000 பேர்வசிக்கும்இத்தீவின்தலைநகரம்மஜுரோ. 29 பவளத்தீவுகளைஉள்ளடக்கியது இந்தமார்ஷல் தீவுகள். இந்த நாட்டின் முதல் பெண் அதிபராக, இரு வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றிருக்கிறார் ஹில்டா ஹெயினே. அமெரிக்காவில் உள்ள சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். ஆரம்ப காலங்களில் இவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்.


ஷேக் ஹசீனா, பிரதமர், வங்கதேசம்
நமக்கு அண்டை நாடாக இருக்கும் வங்கதேசத்தின் தற்போதைய பிரதமராக இருப்பவர் ஷேக் ஹசீனா. இந்நாட்டின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரகுமானின் முதல் மகள் இவர். 1981-லிருந்து வங்கதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவரும் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராக, 1996-ல் பதவியேற்றார். மீண்டும் 2009-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றவர், இன்று வரை பொறுப்பில் இருக்கிறார். இந்நாட்டின் முதல் பெண் பிரதமராக இருந்தவர் காலிதா ஜியா.

போர்டியோ சிம்ப்ஸன் மில்லர் (Portia Simpson-Miller), பிரதமர், ஜமைக்கா

கரீபியின் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவின் முதல் பெண் பிரதமராக இருப்பவர் போர்டியோ சிம்ப்ஸன் மில்லெர். ஜமைக்காவின் மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த இவர், முதன்முதலாக 2006-ல் பிரதமராக பதவியேற்றார். ஓராண்டுக்குள் தேர்தல் வந்துவிடவே இவரது பதவிக்காலம் முடிந்து போனது. மீண்டும் 2012-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றவர், தற்போது வரை பொறுப்பில் இருக்கிறார்.

பீட்டா ஸசிட்லோ, (Beata Szydło) பிரதமர், போலந்து

மத்தியஐரோப்பியநாடானபோலந்தில்சட்டம் மற்றும் நீதிக்கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகித்து வருகிறார் பீட்டா ஸசிட்லோ. இந்நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் இவர். இவருக்கு முன்னதாக, ஹான்னா சுச்சோக்கா, ஈவா கொப்பாக்ஸ் ஆகியோர் பெண் பிரதமர்களாக இருந்துள்ளனர். பீட்டா ஸசிட்லோவுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமராக இருந்தவர் ஈவா கொப்பாக்ஸ்.

சாரா கூகொங்கெல்வா, (Saara Kuugongelwa) பிரதமர், நமீபியா 

தென்மேற்கு ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடு நமீபியா. தென்னாப்ரிக்க நாட்டிடமிருந்து அதிகார பூர்வமாக 21 மார்ச் 1990-ல் இந்த நாடு குடியரசானது. அந்நாட்டில், முதல் பெண் பிரதமராக, தற்போது பதவி வகித்து வருகிறார் சாரா கூகொங்கெல்வா. இந்நாட்டின் நான்காவது பிரதமர் இவர். பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், அந்நாட்டின் திட்ட கமிஷன் துறையின் டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்திருக்கிறார். 2003-ல் நிதியமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். இவர் ஸ்வபோ பார்ட்டி என்று அழைக்கப்படும் தென்மேற்கு ஆப்ரிக்க மக்களின் கூட்டமைப்புக் கட்சியின் சார்பில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

எர்னா சோல்பெர்க், (Erno Solberg), பிரதமர், நார்வே

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயின் பிரதமராக இருக்கிறார் எர்னா சோல்பெர்க். இந்நாட்டின் 28-வது பிரதமர் மற்றும் இந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் இவர். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் இருந்து வரும் இவர், புள்ளியியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்கிறார். உள்ளாட்சி அதிகாரம் மற்றும் மண்டல வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார் எர்னா. 

(படம் உதவி: புதிய தலைமுறை கல்வி வார இதழ்)

திருப்பத்தூரில் நடைபெறும் 'ஆசிரியர் வைபவம்'நிகழ்ச்சி

$
0
0
வணக்கம் அன்பு நெஞ்சங்களே...

பத்திரிகை உலகில் அடி எடுத்து வைத்து 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சச்சின் தெண்டுல்கர் முதல் சாமன்யன் வரையிலும், திரை உலக பிரபலங்கள் முதல் திடலில் திரியும் சிறுவன் வரையிலும், அரசு அதிகாரிகள் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரை பேட்டி எடுத்திருக்கிறேன். பலவித கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகு... சென்ற ஆண்டின் இறுதியில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிற்றிதழ் குறித்த பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக, பயிற்சியாளராக கலந்து கொண்டேன். மேடை ஏறி, நான் கற்றதை மற்றவருக்கும் கற்பிக்கும் வாய்ப்பு அது... கற்பித்து மகிழ்ந்தேன். என் கல்வியின் கற்பினைக் கண்டு மகிழ்ந்தேன்...

நாளை மறுதினம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கலை அறிவியல் கல்லூரியில் 'ஆசிரியர் வைபவம்'என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 40 அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பலநூறு பார்வையாளர்கள் முன்பு தங்களது தனித்திறமைகளை மேடையேற்ற இருக்கிறார்கள்.  அத்தகைய நிகழ்வில் நானும் ஒரு கௌரவ அழைப்பாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். இதற்கு முழுமுதற் காரணமாய் இருக்கும் ஆசிரியை சுமித்ரா அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கிறேன். எனை இந்த அளவிற்கு வளர்த்து விட்ட எமது ஆசிரியப் பெருமக்கள், எனது பெற்றோர், எனது குடும்பத்தினர், எனது நண்பர்களாகிய நீங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பங்கிருக்கிறது.

திருப்பத்தூருக்கு உங்களனைவரையும் என் சார்பில் அழைக்கிறேன்..!




'ஆசிரியர் வைபவம்'நிகழ்ச்சியில் அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

$
0
0

இரு தினங்களுக்கு முன்பு, அதாவது சென்ற ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் ‘ஆசிரியர் வைபவம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. முழுக்க முழுக்க அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது திறனை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினனாக எனை அழைத்திருந்தனர். அக்கல்லூரியின் கரேஞா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கியது.

காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை 5.40க்கு நிறைவடைந்தது. 20 அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தனித்திறமைகள் முதன்முறையாக அரங்கேற்றம் கண்டன. புகை நமைக்கு பகை என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் உரை நிகழ்த்தினார். அது உரை என்பதை விட ‘தனி நடிப்பு’ மூலம் செய்து அசத்தினார்.
                                                                      தனிநடிப்பு ஆசிரியருக்கு பாராட்டு

அடுத்து வந்த ஆசிரியை ‘ராதை மனதில்… ராதை மனதில் என்ன ரகசியமோ…’’ என்ற பாடலுக்கு மனதை ஈர்க்கும் வகையில் நடமாடி கைத்தட்டல்கள் பெற்றார். அடுத்து வந்த ஆசிரியை ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். ஒரு ஆசிரியை நளவெண்பா பாடலை தானே பாடி, இசையமைத்து குறுந்தகடாக அங்கு வெளியிட்டார்.


அரசுப்பள்ளி மாணவர்கள் குழு ஒன்று அனாசயமாக ஆங்கிலத்தில் நல்ல பழக்கவழக்கங்களை நாடகமாய் நடித்துக் காட்டி கைத்தட்டல்களை அள்ளியது. அசந்து போனேன். மற்றொரு அரசுப்பள்ளி மாணவிகள் குழு, தாய்லாந்து மங்கைகளைப் போல் ஆடை, அலங்காரம் செய்தபடி, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு நடமாடி உள்ளத்தை கொள்ளை கொண்டனர்.

அவரை அடுத்து வந்த ஆசிரியர் மிமிக்ரி மூலம் தேசபக்தி கதையை செப்புவித்தார். அடுத்து அரங்கேறிய ஆசிரியை தமிழக நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கரகாட்டத்தை ஆடினார். அவர் ஆடியது மட்டுமின்றி அரங்கத்தில் உள்ளோரையும் ஆட்டம் போட வைத்தார் என்றே சொல்ல வேண்டும்.

                                         மிமிக்ரி மூலம் தேசபக்தி கதை சொன்ன ஆசிரியருக்கு பாராட்டு

அடுத்த வந்த ஆசிரியர் தான் இயக்கிய திகில் குறும்படத்தை திரையிட்டார். ஒலிக்கலவையும், கேமராவும் மிக நேர்த்தியாக இருந்தது. பின்னணி இசை பயமுறுத்திற்று. அட்டகாசமான திகில் குறும்படம் அது.


52 வயது நிரம்பிய அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா…’ பாடலை தாள லயத்தோடு, ஸ்ருதி பிசகாமல் பாடினார். பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவரை… அவ்வளவு நேர்த்தி…

நான் ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்கள் திறனைக் காட்டியபோது, அவர்களை உற்சாகப்படுத்தி பேசியதைக் கேட்டு, அங்கு பார்வையாளராக வந்திருந்த ஆசிரியை, மேடையேறி மூன்று பாடல்களைப் பாடிக் காட்டி பரவசம் கொள்ளச் செய்தார்.

அடுத்து வந்த ஆசிரியர் பியானோ வாசித்தார். அப்துல் கலாம் குறித்து  எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு செய்த வீடியோவை திரையிடச் செய்தார். அடுத்த அந்த பாடலுக்கு மேடையில் நடனமாட, கீழிருந்த ஒரு மாணவி அவரோடு சேர்ந்து துள்ளாட்டம் போட்டது பார்வையாளர்களான எங்களை பரவசப்படுத்தியது. மாணவர்களே எழுதிய கதைப்புத்தகம் ஒன்று, அரசுப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் அங்கு வெளியிட்டப்பட்டது.

அரசுப்பள்ளி ஆசிரியைகள் குழு ஒன்று, வில்லுப்பாட்டினை அரங்கேற்றியது. அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவத்தை சினிமா பாடல்களின் மெட்டுகளில் வடிவமைத்து பாடி அசத்தினர்.

                                                             குறுந்தகடு வெளியீடு
எனது கையால் ‘பலூன்’ என்ற குறும்படம் வெளியிட வைத்தனர். ரைம்ஸ் பாடல் குறித்த சிடி ஒன்றையும் எனது கையால் வெளியிட வைத்தார்கள். மகிழ்வாக இருந்தது.

ஒரு ஆசிரியர் சோப்பு, சாக்பீஸ் ஆகியவற்றில் பல்வேறு சிற்பங்களும் முட்டை ஒடுகளால் ஓவியங்களும் வரைந்து காட்டி அசத்தினார். ஒரு ஆசிரியர் பறவைகளின் குரல்களை எழுப்பிக்காட்டினார்.
இன்னும் மறக்கவியலா நிகழ்வினை அந்த நிகழ்ச்சி உள்ளடக்கியிருந்தது. விழாவின் முடிவில் பங்குபெற்ற அத்தனை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கேடயம், சான்றிதழ் வழங்கி கௌரவித்தேன். அவர்களது மகிழ்ச்சியில் நானும் மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன்!

                                                            நளவெண்பா பாடிய ஆசிரியைக்கு பாராட்டு

வில்லுப்பாட்டு பாடிய ஆசிரியை குழுவினர் என்னோடு குழுவாக படம் எடுத்துக் கொண்டது மட்டுமின்றி, தங்களது பள்ளி மாணவர்களைப் பற்றி பேசினர், அவர்கள் பள்ளிக்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர்.


அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் இவ்வளவு திறமைகள் புதைந்து கிடக்கின்றனவா என்று உண்மையிலேயே அதிசயித்துப் போனேன். வாழ்த்துகள் அரசுப்பள்ளி ஆசிரியர்களே... உங்கள் அபரிமிதமான திறன்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! இதை மாநில அளவில் ஏன் நாம் நடத்தக்கூடாது என்ற எண்ணத்தினை இந்த நிகழ்ச்சி என்னுள் ஏற்படுத்தியது. விழாவின் இறுதியில் குழுப்படம் எடுத்தனர்.



இந்த நிகழ்ச்சியை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்காக திருப்பத்தூர் ஜேஸிஸ் சங்கம் நடத்தியது. அரசுப்பள்ளி ஆசிரியர்களான சுமித்ரா, பாண்டியன் உள்ளிட்டோர் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திக்காட்டினர். அவர்களுக்கு இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி கிரண், ஜோலார்பேட்டை ரயில்நிலைய மாஸ்டர் வெங்கடாசலம், இந்நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்த அன்புத் தோழர் சிகரம் சதீஷ் ஆகியோரை மறக்கவே இயலாது.

போய் வருகிறேன் திருப்பதூரே… என்றபடி அங்கிருந்து கிளம்ப மனமின்றி கிளம்பி வந்தேன். இனிமையான அனுபவம் அது..!

சிலம்பாட்டம் விளையாடலாமா?

$
0
0

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டத்தை கடந்த ஒரு மாத காலமாக கற்றுக்கொண்டு வருகிறேன். பால பாடத்தில் இருக்கும்போதே பெரிய வித்தையை மக்கள் முன் காட்டவேண்டிய கட்டாயம் நேற்றுமுன்தினம் எங்கள் குழுவுக்கு ஏற்பட்டது. தாம்பரம் சானடோரியம் அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12:30 வரை திருவீதி உலா நடந்தது. அதில் எங்கள் சிலம்பாட்டக் குழுவின் விளையாட்டும் இடம்பெற்றது.

அதில் நான் ஆடிய தீப்பந்த விளையாட்டு இது... இந்த நிகழ்வு நடந்த அன்று காலைதான் முதன் முதலாக இதற்கு பயிற்சி எடுத்தேன்... அன்று இரவே இதை மக்கள் முன்பு அரங்கேற்றினேன்... எல்லாப் புகழும் எனது சிலம்பாட்ட வாத்தியாருக்கே...

டெஸ்ட் கிரிக்கெட் 2016 – இந்தியா ஒரு பார்வை!

$
0
0

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணிக்கு இந்த ஆண்டு வெற்றி ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அத்தனை உலக நாடுகளும் தோல்விகளைத் தழுவியிருக்கின்றன. ஆனால், இந்த ஆண்டில் தொடர்ந்து வெற்றிகளையே பதிவு செய்து வந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

மொத்தம் 12 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 9 போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளை டிராவிலும் முடித்திருக்கிறது. ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவவில்லை இந்திய அணி. இதே போன்ற சாதனைகளை இந்திய அணி இதற்கு முன் 1955, 1961, 1971, 1986, 1993, 2009 ஆகிய ஆண்டுகளில் படைத்திருக்கிறது.

2014-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு தோனி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவரையடுத்து, விராட் கோஹ்லி டெஸ்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தோனி கூல் கேப்டன் என்றால் கோஹ்லி ஆக்ரோஷமான கேப்டன் என பெயர் எடுத்தவர்.

அவரது தலைமையில் 2015-இல் சில போட்டிகளில் தவறினாலும், தவறுகளை சரிசெய்துகொண்டு, 2016-இல் விஸ்வரூபம் எடுத்தது இந்திய கிரிக்கெட் அணி. அதற்கு அணியின் பயிற்சியாளராக 2016-ஜூனில் அனில் கும்ப்ளே பொறுப்பேற்றுக்கொண்டதும் முக்கிய காரணம். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி விளையாடிய மூன்று டெஸ்ட் தொடரையும் வென்று காட்டியிருக்கிறது.
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கெதிராக 2-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்து அணிக்கெதிராக 3-0 என்ற கணகிலும் வெற்றியை பதிவு செய்தது இந்திய கிரிக்கெட் அணி.

இதனையடுத்து, அலைஸ்டர் குக் தலமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியை 4-0 என்ற கணக்கில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ‘ஒயிட் வாஷ்’ செய்து சாதனை படைத்ததுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள். இந்த கிரிக்கெட் தொடரில் பல்வேறு சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியாக பார்த்ததற்கு காரணம் இருக்கிறது.

சின்ன பிளாஷ் பேக் போவோமோ…

கடந்த 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்ற தோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 0-4 என்ற கணக்கில் தோற்றுப்போய் இந்தியா திரும்பியது. இந்த அணியில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் திராவிட், வீரேந்தர் ஷேவாக் உள்ளிட்ட ஜாம்பவான்களும் விளையாடி இருந்தனர். அப்படி இருந்தும் இந்தியாவால் சோபிக்க முடியவில்லை. ஒரு போட்டியைக் கூட டிரா செய்யமுடியவில்லை. படுதோல்வி அடைந்து இந்தியா அணி தாயகம் திரும்பியது.

அப்போது பெற்ற தோல்விக்கு, தற்போது விராட் கோஹ்லியின் தலைமையிலான இளம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பதிலடி கொடுத்து, பழி தீர்த்துக் கொண்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, இந்திய அணியும் 488 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 260 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய 176 ரன்களுடன் களத்தில் நின்றதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தெம்புடன் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி டாஸிலேயே தோற்றுப்போனது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி, சித்தேஸ்வர் புஜாரா, கோஹ்லியின் சதங்களால் 455 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியை சுழலில் ரவி அஸ்வின் சாய்க்க, 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் இன்னிங்ஸிலும் விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 204 ரன்கள் எடுத்த இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு 405 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில்  கடின இலக்கை விரட்ட நினைக்காமல் டிரா செய்ய நினைத்த இங்கிலாந்து அணியின் கனவை ரவி அஸ்வின், ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரின் சுழல் கூட்டணி தகர்த்தது. 158 ரன்களுக்குள் சுருண்ட இங்கிலாந்து 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் மண்ணைக் கவ்வியது.

சண்டீகரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சிற்கு தாக்குப்பிடிக்கமுடியாத இங்கிலாந்து 283 ரன்களுக்குள் சுருண்டது. இரண்டாவது டெஸ்டில் காயமடைந்த இந்திய விக்கெட் கீப்பர் விரித்திமன் சஹாவிற்கு பதிலாக மூன்றாவது போட்டியில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தீவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இம்முறை அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட டெயிலெண்டர்களின் (கடைசி வரிசை ஆட்டக்காரர்கள்) அட்டகாசமான ஆட்டத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 417 ரன்கள் குவித்தது. இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து இந்தியாவின் சுழலில் 236 ரன்களுக்குள் சுருண்டது. 104 ரன்களை எளிதில் விரட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அறிமுகப்போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் சதமடித்து அசத்தினார். 400 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை இழந்தது இங்கிலாந்து அணி. இந்த இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை ரவி அஸ்வினும், 4 விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜாவும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்திய அணியில் முரளி விஜய் 136 ரன்களும், கேப்டன் விராட் கோஹ்லி இரட்டைச் சதத்துடன் 235 ரன்களும், ஒன்பதாவது விக்கெட்டாக களமிறங்கிய ஜெயந்த் யாதவ் 104 ரன்களும் அடித்து சாதனை படைத்தனர். 631 ரன்கள் குவித்த இந்திய அணி, இங்கிலாந்தை விட தனது முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி மீண்டும் அஸ்வின் சுழலில் சிக்கிக்கொண்டது. 6 விக்கெட்டுகளை அஸ்வினும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்த இங்கிலாந்து 195 ரன்களுக்குள் ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கோஹ்லியை விமர்சித்திருந்தார். அதற்கு இந்தப்போட்டியில் இரட்டைச் சதம் மூலம் பதிலைத் தந்திருந்தார் விராட் கோஹ்லி.

இந்த தொடரின் கடைசி போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற இருப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் வார்தா புயல் சென்னையை வாரிச் சுருட்டி வீசி இருந்தது. அடை மழையில் சேப்பாக்கம் மைதானம் ஈரமுகத்தோடு அழுது கொண்டிருக்க, கேலரியில் உள்ள சேர்கள் எல்லாம் சிதைந்து கிடக்க, திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் இருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதாக இருந்தது தள்ளிப்போய்விடுமோ என்ற அச்சமும் சென்னை கிரிக்கெட் ரசிகர்களிடையே இருந்தது.

வார்தா புயலுக்குப்பின் அமைதி ஏற்படவே, திட்டமிட்டபடி 5-வது டெஸ்ட் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அனைத்து வீரர்களும் கறுப்பு ரிப்பனோடு களத்தில் இறங்கினர்.

ஆறுதல் வெற்றியேனும் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் டாஸ் வென்ற  இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. மொயீன் அலி 146 ரன்கள் குவிக்க, டெயிலெண்டர்களான டாவ்ஸனும் ரஷீத்தும் அரை சதம் அடிக்க 477 ரன்கள் என்ற வலுவான நிலையில் தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கௌஷல் ராகுல் 199 ரன்கள் குவித்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பார்த்தீவ் படேல் 77 ரன்கள் குவித்தார். தனது மூன்றாவது போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் கருண் நாயர், இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்து 303 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றார். இவரது சிறந்த ஆட்டத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த அணிகளின் பட்டியலில் 7-ஆம் இடத்தைப் பிடித்தது சாதனை படைத்தது.

கடைசி நாள் ஆட்டம் மீதம் இருக்க இங்கிலாந்து அணி வசம் பத்து விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் தடுப்பாட்டத்தைக் கடைபிடித்தால் போட்டி டிராவில் முடிந்துவிடும் என்ற கணக்கில் இங்கிலாந்து வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் கூட விழவில்லை. சென்னை மைதானம் என்பதாலும், ரவி அஸ்வினின் சுழல் தாக்குதல் இருக்கும் என்பதாலும் அஸ்வினின் சுழல் வீச்சிற்கு தயாரானது போல் விக்கெட் கொடுக்காமல் ஆடினர். இதனால், இந்த போட்டி டிராவில்தான் முடியப்போகிறது என ரசிகர்களும் நினைக்க ஆரம்பித்த வேளையில் ரவீந்திர ஜடேஜாவின் சுழல் ஜாலம் அங்கிருப்பவர்களை அசர அடித்தது. 48 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை சடசடவென்று சரித்துக்காட்டினார் ஜடேஜா. டெஸ்ட் அரங்கில் ஜடேஜாவின் சிறந்த பந்துவீச்சாகவும் இது அமைந்தது. 207 ரன்களுக்குள் ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது.

முச்சதத்தைக் குவித்து ஆட்டநாயகன் விருதுபெற்ற கருண் நாயர் ‘’முச்சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஆடியது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.
கருண் நாயரின் முச்சதத்தைப் பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முச்சதம் அடித்த இந்திய வீரர்கள் கிளப்பிற்கு வரவேற்கிறேன். இந்த கிளப்பில் 12 ஆண்டுகள் 8 மாதங்களாக தனிமையில் தனிமையில் இருந்துவிட்டேன். வருக கருண் நாயர்’ என்று பதிவிட்டிருந்தார். இரண்டு முறை முச்சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக். மற்றொரு டிவிட்டர் செய்தியில் ‘கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்தை, இந்திய அணி வென்றிருக்கிறது. வாழ்த்துகள்’’ என்றும் ஷேவாக் குறிப்பிட்டது வைரலானது.
இந்திய அணியின் வெற்றிக்குப்பிறகு, இங்கிலாந்து அணியை சுழலில் வாரிச்சுருட்டிய ஜடேஜாவைப் பாராட்டும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘யெஸ்..யெஸ்… யெஸ்… ஜட்டு… பார்சல் சம் லட்டு டூ இங்கிலாந்து’ என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியவர்களை வீழ்த்தியிருக்கிறீர்கள். இதே ஆட்டம் இங்கிலாந்திலும் தொடரட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தோல்விக்குப்பிறகு பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் “இந்த வெற்றிக்கு இந்திய அணி தகுதியானது. நாங்கள் ரன்கள் குவிக்க தவறிவிட்டோம். கிடைத்த கேட்சுகளை கோட்டை விட்டதால், அதற்கான பலனை அனுபவித்தோம். விராட் கோஹ்லி தலைமையிலான அணி சிறப்பாக ஆடியது.” என்றார்.

தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோஹ்லி “இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனமாக இருந்தோம். ஒவ்வொரு வீரரும் தனக்காக ஆடாமல், அணிக்காக ஆடினர். வெற்றியைப் பரிசாக பெற்றிருக்கிறோம்” என்றார்.
அனில் கும்ப்ளேவின் வழிகாட்டுதலில் 2016-ஆம் ஆண்டை சிறப்பாக முடித்திருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, மூன்று முக்கிய இளம் வீரர்களை அடையாளம் கண்டிருக்கிறது. கௌஷல் ராகுல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர் ஆகிய இந்த மும்மூர்த்திகளும் இந்திய டெஸ்ட் அணிக்கு கிடைத்த பலம் என்றே சொல்ல வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாத் “இந்த மூன்று பேரும் இந்திய ஏ அணியின் தரமான தயாரிப்புகள். அப்போதிலிருந்தே இவர்களை அடையாளம் கண்டு, அணிக்குள் சேர்த்தோம்’’ என்றார்.

ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தரவரிசையில் இந்திய அணி முதலிடம். 2016- ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற இரட்டை விருதைப் பெற்ற மகிழ்ச்சியில் தமிழக வீரர் ரவி அஸ்வினும் இருக்கிறார்.

தனி மனிதர் ஒருவரால் வெற்றி காணப்படுவதல்ல கிரிக்கெட். சரியான வீரர்களை தேர்வு செய்யும் நேர்மையான தேர்வாளர், வீரர்களின் குறைகளைக் கண்டறிந்து அதை நிறையாக மாற்றச்செய்யும் பயிற்சியாளர், களத்தில் அணி வீரர்களின் தோளோடு தோள் இணைந்து, அரவணைத்து வழிநடத்திச் செல்லும் கேப்டன் என இந்த மூன்றும் வெகுநாட்களுக்குப்பிறகு இந்திய அணிக்கு வாய்த்திருக்கிறது.

இதே நிலை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர வேண்டும். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அசைக்க முடியாத அணியாக வலம் வர வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவல்.
இங்கிலாந்திற்கு எதிரான தொடரை வென்றபோது, வீரேந்திர ஷேவாக் ‘உலகிற்கே கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியவர்களை, வீழ்த்தியிருக்கிறது நமது இந்திய அணி. பெருமையாக இருக்கிறது’ என்று ட்விட்டியிருந்தார். இதுபோன்ற உத்வேகங்களும், ஊக்குவிப்புகளும் அணிக்கு நிலையானதாக இருக்கட்டும்.

வரும் புத்தாண்டு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மற்றுமொரு வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்.

2016-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்!

$
0
0



ஜனவரி 1:
கூரைமேல்சூரியஓளிமூலம்மின்சாரஉற்பத்திசெய்யும்திட்டத்திற்குமத்தியஅரசுரூ. 5000 கோடிஒதுக்கீடு.
இந்தியாவில்முதன்முதலாகஆற்றுக்குஅடியில்பாலம்கட்டும்திட்டத்தினைஆந்திரப்பிரதேசஅரசு கிருஷ்ணா நதியில்துவக்கியது.
பாகிஸ்தானியபாடகர்அத்னான்சமிக்குகுடியுரிமைவழங்கியதுஇந்தியஅரசு.
டெஸ்ட்கிரிக்கெட்பந்துவீச்சாளர்கள்மற்றும்ஆல்ரவுண்டர்தரவரிசைபட்டியில்ரவிஅஸ்வின்முதலிடம்.
தில்லியில்வாகனமாசுக்கட்டுப்பாட்டைக்குறைக்க, வாகனகட்டுப்பாடுஅமல்.
ஆந்திரபிரதேசத்தில்அரசுமருத்துவமனைகளில்பிறக்கும்தாய் மற்றும் சேயை அவர்களுதுவீட்டிற்கேஅழைத்துச்செல்லும்இலவசவாகனவசதிதிட்டம்தொடக்கம்.
இசைஞானிஇளையராஜாவிற்கு, 2016-ஆம்ஆண்டுக்கானநிஷாகந்திபுரஸ்காரம்விருதுவழங்கப்படும்என்றுகேரளஅரசுஅறிவிப்பு.
தமிழகம் முழுவதும் உள்ள இந்துக் கோயில்களில் நுழைய ஆடைக்கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.

ஜனவரி 2:
கம்யூனிஸ்ட்மூத்ததலைவர்ஏபிபரதன் (அர்த்தேந்துபூஷண்பரதன்) தில்லியில்உடல்நலக்குறைவால்காலமானார்.
நாடுமுழுவதும்உள்ளரயில்நிலையங்களில்ரூ.20-க்கும்குறைவானவிலையில்உணவுவழங்கும்ஜன்ஆஹார்திட்டம்தொடக்கம்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல். 4 நாட்கள் நீடித்த இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 ராணுவ வீரர்கள் மரணம்.

ஜனவரி 3:
ஹரித்துவாரில்திருவள்ளுவர்சிலைதிறக்கப்படும்என்றுநாடாளுமன்றஉறுப்பினர்தருண்விஜய்அறிவிப்பு
கர்நாடகத்தில் 4 ஆயிரம்கோடிரூபாய்செலவில்ஹெலிகாப்டர்தயாரிக்கும்மையத்திற்குநரேந்திரமோடிஅடிக்கல்நாட்டினார்.
தெற்காசியகால்பந்துபோட்டியில்போட்டியில்ஆப்கானிஸ்தானைவீழ்த்திஇந்தியஅணி 7-வதுமுறையாகசாம்பியன்பட்டத்தைகைப்பற்றியது

ஜனவரி 4:
மணிப்பூரில் 6.8 ரிக்டர்அளவில்பயங்கரநிலநடுக்கம். 9 பேர்பலி.
ஒருலட்சம்கோடிகிரானைட்முறைகேட்டைமத்தியஊழல்கண்காணிப்புஆணையம்விசாரிக்கவேண்டும்என்றுஐஏஎஸ்அதிகாரிசகாயம்தரப்புஉயர்நீதிமன்றத்தில்கோரிக்கை
இந்தியகிரிக்கெட்வாரியநிர்வாகிகளுக்கானபுதியதகுதிமற்றும்கட்டுப்பாடுகளைஆர்.எம்.லோதாகுழுகமிட்டிபரிந்துரைசெய்தது. அத்துடன்சூதாட்டத்தைசட்டபூர்வமாக்கவேண்டும்என்றும்பரிந்துரைசெய்தது.

ஜனவரி 5:
மும்பையில்பள்ளிகிரிக்கெட்போட்டிஒன்றில்ஒரேஇன்னிங்ஸில் 1009 ரன்கள்எடுத்துசாதனைபடைத்தார்ஆட்டோடிரைவரின்மகனானபிரணவ்தனவாடே.

ஜனவரி 6:
ஹைட்ரஜன்குண்டைவெடித்துசோதனைசெய்தவடகொரியாவுக்குஉலகநாடுகள்கண்டனம்.
ஜனவரி 7:
காஷ்மீர்முதல்வர்முப்திமுகமதுசையீதுதில்லியில்மரணம்.
சர்வதேசபொருளாதாரசக்தியாஇந்தியாநீடிக்கும்: உலகவங்கிகணிப்பு
நிதிஆயோக்கின்தலைமைச்செயல்அதிகாரியாகஅமிதாப்காந்த்நியமனம்.
மக்கள்தொகைகணக்கெடுப்புதலைமைப்பதிவாளராகசைலேஷ்நியமனம்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார இலாகாவை வெளியுறவுத்துறையுடன் இணைக்க பிரதமர் மோடி ஒப்புதல்.

ஜனவரி 8:
தமிழ்நாட்டில்ஜல்லிக்கட்டுநடத்தமத்தியஅரசுஅனுமதி
நாட்டின்பொருளாதாரம்உயரவெளிநாடுகளுக்குதனியார்விமானங்களைஇயக்கலாம்: மத்தியவிமானப்போக்குவரத்துத்துறைஅமைச்சர்

ஜனவரி 9:
காஷ்மீரில்புதியஅரசு, பதவிஏற்பதில்தாமதம்ஏற்பட்டதால்அங்குகுடியரசுத்தலைவர்ஆட்சிஅமல்படுத்தப்பட்டது.
பிரிஸ்பேன்சர்வதேசடென்னிஸ்போட்டியில்சாய்னா-ஹிங்கிஸ்இணைபட்டம்வென்றது.

ஜனவரி 10:
சென்னைஓபன்டென்னிஸ் 2016-க்கானசாம்பியன்பட்டத்தைசுவிஸ்வீரர்ஸ்டானிஸ்லாஸ்வாவ்ரிங்கா, மூன்றாவதுமுறையாகவென்றுசாதனை.
அரசுத்துறைகள்தொடர்பாக, இணையதளம்மூலம்அளிக்கப்படும்புகாரில்ஆதார்எண்ணைக்குறிப்பிடவேண்டும்: மத்தியஅரசு

ஜனவரி 11:
ஜல்லிக்கட்டுபோட்டிநடத்தஉச்சநீதிமன்றம்இடைக்காலத்தடைவிதித்தது.
கர்ப்பிணிகளுக்கு ‘மகப்பேறு சஞ்சீவி’ திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
கேரளத்தின் முதல் திரைப்படக்கல்லூரியை துணை குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரி தொடங்கி வைத்தார்.

ஜனவரி 12:
சிஎல்எம்வி நாடுகளுடன் வர்த்தகம் பெருகும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (சிஎல்எம்வி நாடுகள்: கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம்)

ஜனவரி 13:
பதன்கோட்விமானநிலையதாக்குதலுக்குகாரணமானதீவிரவாதிமசூத்அன்சாரைபாகிஸ்தான்அரசுகைதுசெய்த்து.
அனைவருக்கும் முழுமையான தொடக்கக் கல்வியை அளிக்கும் முதல் மாநிலம் கேரளம்: துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி

ஜனவரி 14:
ஆதார் அட்டை திட்டத்தால் ரூ. 6,700 கோடி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது: உலக வங்கி பாராட்டு
இலங்கைசிறைகளில்அடைக்கப்பட்டதமிழகமீனவர்கள் 104 பேர்விடுதலை.

ஜனவரி 15:
இந்திய – ஜப்பான் கடலோரக் காவல் படை சென்னை அருகே கடற்பகுதியில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன.


ஜனவரி 16:
‘ஸ்டார்ட்அப்இந்தியா’எனும்புதியதிட்டத்தைநரேந்திரமோடிதொடங்கிவைத்தார்.
கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய சிறுவர்களை தண்டிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்.

ஜனவரி 17:
சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ தேசிய அளவில் முதலிடம்.
மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டால் ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் கேட்கக் கூடாது: மத்திய தகவல் ஆணையம்
எல்லையில் ஊடுருவலைத் தடுக்க லேசர் தொழில்நுட்ப சுவர்கள் அமைக்க மத்திய அரசு முடிவு

ஜனவரி 18:
அதானி-ஹசீரா துறைமுகத்துக்கு ரூ.25 கோடி அபராதம்: தேசிய பசுமை ஆணையம் உத்தரவு

ஜனவரி 19:
தமிழ்நாட்டில் 1100 என்ற இலவச அழைப்பு மையத்தை ஜெயல்லிதா தொடங்கி வைத்தார்.
சென்னை மற்றும் தில்லியில் தேசிய முதியோர் நல மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

ஜனவரி 20:
ஐ.ஆர்.என்.எ     ஸ்.எஸ்-1இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பாகிஸ்தான் பல்கலைகழகத்தில் தீவிரவாத தாக்குதலில் 21 பேர் படுகொலை
தமிழகத்தில் வாக்களர்களின் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சமாக உயர்வு

ஜனவரி 21:
மத்தியசுற்றுலாத்துறையின்வியத்தகுஇந்தியாதிட்டத்தின்தூதவர்களாகஅமிதாப்பச்சன், பிரியங்காசோப்ராநியமனம்.
பிரபலநாட்டியக்கலைஞர்மிருளினிசாராபாய்ஆமதாபாத்தில்காலமானார்.
தமிழகத்தில்ஆற்றல்சார்விளையாட்டுமையம்அமைக்கப்படும்: யுஜிசிதுணைத்தலைவர்

ஜனவரி 22:
இந்தியாவின்பொருளாதாரம்வேகமாகவளரும்: .நா. அறிக்கை

ஜனவரி 23:
நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ்தொடர்பாகமத்தியஅரசிடம்உள்ள 100 ஆவணங்களைநரேந்திரமோடிவெளியிட்டார்.
அரசுத்துறைகளுக்குஇடையேநடைபெறும்கடிதத்தொடர்புகளைஇந்தியிலேயேமேற்கொள்ளவேண்டும்: மத்தியஉள்துறைஅமைச்சகம்
சர்வதேசகிரிக்கெட்போட்டிகளிலிருந்துமேற்கிந்தியத்தீவுகள்அணிவீரர்சிவ்நாரயண்சந்தர்பால்ஓய்வு

ஜனவரி 24:
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க 3 நாள் பயணமாக இந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலண்டே
குஜராத்தில்டைனோசர்படிமங்கள்கண்டுபிடிக்கப்பட்டது.
மலேசியாவில்நடைபெற்றபாட்மிண்டன்போட்டியில்இந்தியாவின்பி.வி. சிந்துசாம்பியன்பட்டம்வென்றார்.

ஜனவரி 25:
ரஜினிகாந்த், ஸ்ரீஸ்ரீரவிசங்கர், திருபாய்அம்பானி, டாக்டர்சாந்தாஆகியோருக்குபத்மவிபூஷண்விருதுகள்அறிவிப்பு
ரஃபேல்போர்விமானங்கள்வாங்குவதுதொடர்பாகஇந்தியாபிரான்ஸ்இடையேஒப்பந்தம்கையெழுத்தானது.
தாழ்த்தப்பட்டோர்மற்றும்பழங்குடியினருக்குஎதிராகவன்கொடுமைசெய்பவர்களைகடுமையாகதண்டிக்கும்வகையிலானபுதியவன்கொடுமைதடுப்புச்சட்டம்இன்றுமுதல்அமல்
வரலாற்றில்மிகவும்வெப்பமானஆண்டு 2015: .நா. வானிலைஅமைப்பு



ஜனவரி 26:
இந்தியாவின் 67-வதுகுடியரசுதினகொண்டாட்டத்தில்சிறப்புவிருந்தினராகபிரான்ஸ்அதிபர்பிரான்சுவாஹொலாண்டேகலந்துகொண்டார். முதல்முறையாகபிரெஞ்சுராணுவவீரர்களின்அணிவகுப்பும்நடைபெற்றது
சூரியஒளிமூலம்மின்சாரத்தகடுகளைபயன்படுத்திக்கட்டப்படும்தமிழகஅரசின்பசுமைவீடுகள்திட்டத்திற்குமத்தியஅரசுஒப்புதல்

ஜனவரி 27:
ஊழல்குறைவானநாடுகளின்பட்டியலில்இந்தியாவிற்கு 76-வதுஇடம்: ஜெர்மனியின்டிரான்ஸ்பரன்ஸிஇண்டர்நேஷனல்அமைப்புதகவல்
இந்தியாஅமெரிக்காவுக்குஇடையே 2004-ம்ஆண்டுபோடப்பட்டஇரட்டைவரிவிதிப்புதவிர்ப்புஒப்பந்தத்தில்திருத்தம்.
சிங்கப்பூருக்குவருவோரின்விரல்ரேகைகளைபதிவுசெய்யஅந்நாட்டுஅரசுமுடிவு
கடலில்மிதக்கும்அணுமின்நிலையம்அமைக்கசீனாதிட்டம்

ஜனவரி 28:
ஸ்மார்ட்சிட்டிதிட்டத்தின்படிமுதல்கட்டமாகசென்னை, கோவைஉள்ளிட்ட 20 நகரங்களின்பட்டியல்வெளியீடு. இவற்றுக்காகஅடுத்த 5 ஆண்டுகெளில் 50,802 கோடிசெலவிடப்படும்.
2015- ஆம்ஆண்டுஇந்தியாஅரிசிஏற்றுமதியில்உலகஅளவில்முதலிடம்வகித்துள்ளது
உலகபணக்காரர்கள்பட்டியலில்முதலிடத்தில்பில்கேட்ஸ், 27ஆவதுஇடத்தில்முகேஷ்அம்பானி, அஸிம்பிரேம்ஜி 47-வதுஇடத்திலும்உள்ளனர்.
இணையம்வழியாகரயில்டிக்கெட்முன்பதிவுக்குபுதியகட்டுப்பாடுகள்அமல். அதன்படிஒருவர்ஒருமாதத்தில்அதிகபட்சமாக 6 முறைமட்டுமேடிக்கெட்டைபதிவுசெய்யமுடியும்.

ஜனவரி 29:
அனைத்துஉயர்கல்விநிறுவனங்களிலும்சமவாய்ப்பு மையம்அமைக்கயுஜிசிவலியுறுத்தல்
பள்ளிகளின்பாடத்திட்டத்தில்தொழிற்பயிற்சிகள்சேர்ப்பதுகுறித்துமத்தியஅரசுபரிசீலனை
ஆஸ்திரேலியஒபன்டென்னிஸ்போட்டியின்மகளிர்இரட்டையர்பிரிவில்சானியாமிர்சாமார்டினாஹிங்கிஸ்இணைசாம்பியன்பட்டம்வென்றது

ஜனவரி 30
சட்டவிரோதமாகப்பணத்தைபரிமாற்றம்செய்ததாகஇலங்கைமுன்னாள்அதிபர்மகிந்தராஜபட்சேவின்மகன்யோஷிதராஜபட்சகைது
ஆஸ்திரேலியஓபன்டென்னிஸ்மகளிர்ஒற்றையர்பிரிவில்ஜெர்மனியின்ஏஞ்ஜெலிக்கெர்பர்சாம்பியன்பட்டம்வென்றார்.
174 சதுரகிலோமீட்டர்பரப்பளவைக்கொண்டிருந்தசென்னைமாநகராட்சி, 426 சதுரகிலோமீட்டருக்குவிரிவாக்கம். பெருநகரமாநாகராட்சிஆனது.
இலங்கைமனிதஉரிமைமீறல்தொடர்பானவிசாரணையில்சர்வதேசபங்களிப்புகட்டாயம்இருக்கவேண்டும்: .நா. பொதுச்செயலர்பான்கீமூன்.

ஜனவரி 31:

நாடு முழுவதும் கீழ் நீதிமன்றங்களில் 2.64 கோடி வழக்குகள் தேக்கம்: மத்திய சட்டத்துறை அமைச்சகம் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று இருபது ஓவர் போட்டிகள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று சாதனை. இதனையடுத்து டி 20 தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்திய அணி.

பிப்ரவரி 1
மியான்மரில் ஆங் சான் சூகி கூட்டணி பதவி ஏற்றது
20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் விராட் கோலி முதலிடம்
இந்திய நேபாள எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப்படை தலைவராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்.

பிப்ரவரி 2
கோவை, சிங்கா நல்லூரில், பிரதமர் நரேந்திர மோடி இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை தொடக்கி வைத்தார்.
உலகளாவிய ஜிகா வைரஸ் நெருக்கடி நிலை: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் கெயில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்.

பிப்ரவரி 3:
ஜிகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு கர்ப்பிணி பெண்கள் செல்ல வேண்டாம் - மத்திய சுகாதார துறை அமைச்சகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ககன்தீப்சிங்பேடி ,அமுதா, கஜலட்சுமி, நடிகர் சித்தார்த்க்கு சென்னையில் மழை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக ‘இந்தியன் ஆஃப்தி இயர் 2015 விருது.
நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் மரணம்

பிப்ரவரி 4
ஊராட்சிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு
25 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் சுதந்திர தின விழாவின்போது,  தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.
இந்தியாவில் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 3.5 லட்சம் பேர் பலி: ஆய்வில் தகவல்

பிப்ரவரி 5:
எட்டு நாடுகள் பங்கேற்கும் 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி ஷில்லாங் மற்றும் மேகாலயாவில் தொடங்கியது.
100 நாள் வேலைதிட்டத்தில் சிறந்த செய்பாட்டுக்கான தேசிய விருது தமிழகத்திற்கு கிடைத்தது.

பிப்ரவரி 6:
ஐபிஎல் டி20 வீரர்கள் ஏலம்: ஆஸி. வீரர் ஷேன் வாட்சன் ரூ.9.5 கோடிக்கு வாங்கியது பெங்களூர். இந்திய வீரர்கள் பவன் நேகி ரூ.8.5 கோடி, யுவராஜ் சிங் ரூ.8 கோடிக்கு ஏலம்.

பிப்ரவரி 7:
பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் மரணமடைந்த விவகாரம் -  சியாச்சின் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது: ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர்

பிப்ரவரி 8:
இந்தியாவிலேயேமுதன்முறையாகபெண்களுக்காக, 31 மோட்டார்சைக்கிள்ஆம்புலன்ஸ்மற்றும் 10 ஸ்கூட்டர்ஆம்புலன்ஸ்களைதொடக்கிவைத்தர் ஜெயலலிதா.  
இணையதளசேவைக்கு மாறுபட்ட கட்டணங்களை வசூலிக்கக்கூடாது: டிராய்
பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்புதலுடன் மும்பை தாக்குதல் நடத்தப்பட்டது: டேவிட் ஹெட்லி வாக்கு மூலம்
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக தங்கசாமி நியமனம்
நேபாள முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா காலமானார்.
நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு


பிப்ரவரி 9:
உயர் கல்வி தொடர்பான விவரங்கள் 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்: ஸ்மிருதி இரானி

பிப்ரவரி 11
ரூ.2 லட்சத்திற்கும் மேல் நகை வாங்குவோர் பான் கார்டு கட்டாயம்: இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் நகை கடைகள் அடைப்பு.
உலக அளவில் முதலீடு செய்ய சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு முதலிடம்,  சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழகத்தில் புதிதாக 7 ஐடிஐ நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
இலவச இணையச் செயலி சேவையை இந்தியாவில் ரத்து செய்தது பேஸ்புக்
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது ஐஎஸ்ஐதான்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்
பூஞ்சைகள் குறித்த பிரபல ஆராய்ச்சியாளர் சி.வி.சுப்ரமணியன் காலமானார்


பிப்ரவரி 12
இந்தியாவிலேயே முதல்முறையாக முற்றிலும் சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் விசாகப்பட்டினம் துறைமுகம்

பிப்ரவரி 13
சென்னையில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அறிவிப்பு
இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்
சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் காலமானார்.

பிப்ரவரி 14

சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி வந்தபோதிலும் இந்திய பொருளாதாரம் பாதிப்படையவில்லை: நரேந்திர மோடி
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

பிப்ரவரி 15    
தமிழ் வெள்ள நிவாரணத்துக்கு 1,774 கோடி ரூபாயினை மத்திய அரசு ஒதுக்கியது
இந்தியாவின் சுத்தமான நகரங்களில் முதலிடத்தைப் பிடித்தது மைசூரு, அசுத்தமான நகராக வாரணாசி இடம்பிடித்துள்ளது.

பிப்ரவரி 16
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது: ரூ 60,610 கோடி ஒதுக்கீடு
பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
12-வது தெற்காசிய விளையாட்டுப்போட்டி நிறைவு: 308 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

பிப்ரவரி 17
ரிங்கிங் பெல்ஸ் எனும் இந்திய நிறுவனம் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் (ரூ.251) ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் பிரிட்டன் எம்.பி. ராபர்ட் ஜான் பிளாக்மேன் வலியுறுத்தல்
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு இஸ்ரோவின் பங்களிப்பு தேவை: நாசா அழைப்பு

பிப்ரவரி 18
மத்திய பல்கலைக்கழகங்களில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
சென்னை மாநகரா பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு பிப்ரவரி 24 முதல் கட்டணமில்லா பயணம்: முதல்வர் ஜெயலலிதா

பிப்ரவரி 19
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்
2035-ல் செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப நாசா அமைப்பு திட்டம்

பிப்ரவரி 20
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதம் ஆக உயர்வு: தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 54 பந்துகளில் சதம் அடித்து, உலக சாதனை படைத்தார் நியூசிலாந்து வீரர் பிரெண்டென் மெக்கல்லம். இதுதான் இவரது கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.

பிப்ரவரி 21
வரும் 2022-க்குள் 5 கோடி வீடுகள் ஏழைகளுக்காக கட்டித்தரப்படும்: நரேந்திர மோடி
தேமுதிக எம்எல்ஏக்கள் 8 பேர் உள்பட 10 எம்எல்ஏக்கள் ராஜினாமா
சட்டப்பேரவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்

பிப்ரவரி 22

பருவநிலை மாற்றம், எரிசக்தி பிரச்னைக்கு மாணவர்கள் தீர்வு கண்டு பிடிக்க வேண்டும்: நரேந்திர மோடி
சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ், ‘சூப்பர் பிராண்ட்’ ஆக பிரிட்டனில் தேர்வு


பிப்ரவரி 23
ஆற்றுக்கால் பகவதி கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து கின்னஸ் சாதனை

பிப்ரவரி 24                                                                                                                                                
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பணபரிவர்த்தனையில் சேவைக்கட்டணம் ரத்து: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் இழந்தது. இந்த போட்டியோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நியூசிலாந்து அணி வீரர் பிரென்டன் மெக்கல்லம்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது ஆஸ்திரேலியா. இரண்டாம் இடமிடத்தில் இந்தியா.

பிப்ரவரி 25
நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ரயில்வே துறை அமைச்சர் ரமேஷ் பிரபு
ரயில்வே பட்ஜெட்: தமிழ்நாட்டிற்கு என்று ரூ.2064 கோடி ஒதுக்கீடு
புதுக்கோட்டை அருக்கே நரிமேடு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரம் கண்டுபிடிப்பு
தொழில்செய்வதற்குபணம்கேட்பதைவரதட்சணையாகக்கருதமுடியாது: உயர்நீதிமன்றம்


பிப்ரவரி 26
கட்டாய வாக்களிப்பு சட்டம் சாத்தியம் இல்லை: மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக இன்பான்டினோ தேர்வு

பிப்ரவரி 27

சென்னை சேத்துப்பட்டு ஏரி, பசுமைப் பூங்காவினை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைபேசி திட்டத்தினை ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
கேரளம்தான் நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

பிப்ரவரி 28
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தினமும் தேசியக் கொடி ஏற்ற உத்தரவு
தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 போலி வாக்காளர்கள் நீக்கம்: ராஜேஷ் லக்கானி
வங்கிகள் வாரியத்தின் முதல் தலைவராக வினோத் ராய் நியமனம்
ராமேஸ்வரத்தில் ‘அப்துல் கலாம் விஷன் இந்தியா பார்ட்டி’ என்ற புதியதொரு கட்சியைத் தொடங்கினார் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ்

பிப்ரவரி 29
மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
88-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. சிறந்த திரைப்படம்: ஸ்பாட்லைட்
நகைச்சுவை நடிகர் குமரிமுத்து உடல்நலக்குறைவால் காலமானார்

மார்ச் 1
பத்து கோடி ரூபாய் செலவில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்’: ஜெயலலிதா தொடக்கி வைத்தார்
அரசு கேபிள் டிவி மூலம் வீடு தோறும் இணைய வசதி திட்டம்: ஜெயலலிதா தொடக்க இவைத்தார்
தமிழகத்தில் பிச்சாவரம், முத்துப்பேட்டை, ராமநாதபுரம், கழுவேலி, புலிக்காடு ஆகிய 5 இடங்களில் சதுப்புநிலக்காடுகள் உள்ளன: மத்திய அரசு
முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகளில் பார்கோடிங் முறை, புதுதில்லியில் அமல்

மார்ச் 2
தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பதவியிலிருந்து டி.கே.எம்.சின்னையா நீக்கம்: கூடுதல் பொறுப்பு ப.வளர்மதியிடம் ஒப்படைப்பு
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு
ஒராண்டு காலம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி பூமிக்கு வந்து சேர்ந்தார்.

மார்ச் 3
திருவண்ணாமலைஅருகே, சத்துணவுஅமைப்பாளராக, தமிழகத்திலேயேமுதல்முறையாக, திருநங்கை ஜெயாதேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
ஒரே நாளில் 6 ஏவுகணை சோதனையைச் செய்தது வடகொரியா
நியூசிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ் காலமானார்

மார்ச் 4
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு: மே 16-ஆம் தேதி தேர்தல், 19-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை குறிப்பிடும் நேட்டாவிற்கு இந்த சட்டசபைத் தேர்தலில் சின்னம் அறிமுகம்
முன்னாள்சபாநாயகரும்மேகாலயாமுன்னாள்முதல்வருமானபி..சங்மாமாரடைப்பால்காலமானார்.
தாதா சாகேப் பால்கே விருது பெற ஹிந்தி நடிகர் மனோஜ்குமார் தேர்வு

மார்ச் 5
எல்லா தனியார் பள்ளிகளிலும் இறைவணக்கத்தின் போது தேசியகீதம் பாட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு

மார்ச் 6
சர்வதேசமகளிர்தினத்தைகொண்டாடும்வகையில்டெல்லியில்இருந்துஅமெரிக்காவின்சான்பிரான்சிஸ்கோநகருக்குவிமானிஉட்படமுற்றிலும்பெண்ஊழியர்களைகொண்டஏர்இந்தியாவிமானம்புறப்பட்டது.
நடிகர் கலாபவன் மணி உடல்நலம் சரியில்லாததால் காலமானார்
ஆசியக்கோப்பை 20 ஓவர் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

மார்ச் 7
14 ஆயிரம் கோடி மதிப்பில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி
சென்னையில் மாநகரப் பேருந்துகளுக்கு தனிப் பாதை அமைக்கத் திட்டம்
மின்னஞ்சலின் முன்னோடி ரேமண்ட் டாம் லின்ஸன் வாஷிங்டனில் காலமானார்.


மார்ச் 8
மகளிர் தினத்தை முன்னிட்டு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து பெண்களே இயக்கிய ஏர் இந்தியா விமானம் தில்லி வந்தடைந்தது
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வரிவிதிக்கும் முடிவு வாபஸ்: நிதி அமைச்சர் அறிவிப்பு

மார்ச் 9
நாடுமுழுவதும் உள்ள 111 நதிகளை இணைத்து, நீர்வழிப்போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
வங்கதேசத்துக்கு ரூ. 13,441 கோடி கடன் வழங்குகிறது இந்தியா: அயல்நாடு ஒன்றிற்கு இந்தியா வழங்கும் அதிகபட்ச கடன்தொகை இது
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை விதிக்கப்படும்: பீகார் முதல்வர் நிதீஷ் குமார்

மார்ச் 10
பிஎஸ்எல்வி சி – 32 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ரூ. 8000 கோடி செலவில், கிராமப்புற ஏழைப்பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

மார்ச் 11
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் அதிமுகவினர் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஆதார் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
கனநீர் கசிவால் குஜராத்திலுள்ள கக்ரபார் அணு உலை மூடப்பட்டது.

மார்ச் 13
பொதுமக்களின் கேள்விகளுக்கு மத்திய, மாநில அமைச்சர்கள் பதில் தரவேண்டும்: மத்திய தகவல் ஆணையம்
வாழ்வதற்கு ஏற்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 22-வது இடம்: உ உலக பொருளாதார மாநாட்டில் தகவல்

மார்ச் 14
சாதிப்படுகொலைகள் தமிழகத்தில் அதிகம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்
இங்கிலாந்தில் இருந்து வழங்கப்படும் சர்வதே சுற்றுச்சூழல் மேலாண்மை விருது பெற சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தேர்வு
நேபாளத்தில் உள்ள பொகாராவில் சார்க் அமைப்பின் கூட்டம் தொடங்கியது

மார்ச் 15
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: ரோமில் செப்டம்பர் 4-ஆம் தேதி வழங்கப்படுகிறது
விவசாய வருமானம் என்ற பெயரில் 2 ஆயிரம் லட்சம் கோடி வரி ஏய்ப்பு: மத்திய நிதி அமைச்சர்
மியான்மர் அதிபர் தேர்தலில் ஆங் சங் சூகியின் ஆதரவாளர்  யூ கதின் கியாவ் வெற்றி பெற்றார்

மார்ச் 16
மக்களவையில் ஆதார் அட்டை மசோதா, பண மசோதா வடிவத்தில் நிறைவேறியது
கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது பெற, லென்ஸ் பட இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதா தேர்வு
பள்ளிக்கு வராமல் போகும் ஆசிரியர்களால் ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி இழப்பு: ஆய்வில் தகவல்
பிரதமர் மோடிக்கு லண்டனில் உள்ள மேடம் தூசாட்ஸ் மியூசியத்தில் மெழுகுச் சிலை அமைக்க முடிவு
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரட்டைச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையை மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் பெற்றார்.

மார்ச் 17
அரசு விளம்பரங்களில் முதல் அமைச்சர், ஆளுநர் படம் இடம்பெறலாம்: உச்ச நீதிமன்றம்
ரூ.10 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனையை கண்காணிக்க தனிக் குழுக்கள் அமைப்பு: வருமான வரித்துறை அறிவிப்பு
2015-ஆம் ஆண்டுக்கான ஏபல் பரிசு பெற, இங்கிலாந்தைச் சேர்ந்த கணிதப் பேராசியர் ஆண்ட்ரூ வில்ஸ் தேர்வு

மார்ச் 18
தோட்டங்களில் தேனீக்களை வளர்த்தால் 30 சதவீத கூடுதல் மகசூல்: மதுரை வேளாண் கல்லூரி ஆய்வு
ஐஐடி ஆண்டுக் கல்விக்கட்டணம் ரூ.3 லட்சமாக உயர்வு: அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது
குஜராத்தின் கிர் சரணாலம் போன்று இங்கிலாந்தில் சரணாலயம்: மகாராணி எலிசபெத் திறந்து வைத்தார்

மார்ச் 19
விவசாய உற்பத்தியில் சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விவசாயி பூங்கோதைக்க விருது வழங்கி, அவரிடம் ஆசி பெற்றார் நரேந்திர மோடி.
துபாய் விமானம் ரஷ்யாவில் வெடித்துச் சிதறியது: 62 பேர் மரணம்

மார்ச் 20
அணுவிபத்துகளின் போது வெளிப்படும் கதிர்வீச்சை அளவிடும் ‘டெரால்ட் நியூக்ளியர்’ கருவியை டிஆர்டிஓ விஞ்ஞானிகள் உருவாக்கினர்
ஓட்டு போட்டால் ஒரு லட்ச ரூபாய் அதிர்ஷ்ட பரிசு: கேரளத்தின் பந்தனம் திட்டா தொகுதியில் அறிமுகம்
உலகின் சிறந்த 100 விமான நிலையங்களில் சிங்கப்பூர் விமான நிலையம் முதலிடம்

மார்ச் 21
88 ஆண்டுகளுக்கு பிறகு கியூபாவில் அமெரிக்க அதிபர் பயணம்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ரவுல் காஸ்ட்ரோவை சந்தித்தார்
யுனெஸ்கோ உயிர்க்கோள காப்பகப் பட்டியலில் இந்தியவின் அகஸ்தியர் மலை சேர்ப்பு
பிலிம் நியூஸ் ஆனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம்

மார்ச் 22
மழைவருவதை தெரிவிக்கும் ஸ்மார்ட் குடை பிரான்சில் வடிவமைப்பு

மார்ச் 23
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கிராமங்களில் 2.95 கோடி வீடுகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வங்கதேசத்துக்கு 100 மெகாவாட் மின்சாரம் வழங்கியது இந்தியா
நேட்டோ நாடுகளுக்கு இணையாக இந்தியா: அமெரிக்க காங்கிரஸில் தீர்மானம்

மார்ச் 24
புகை பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவு: உலக சுகாதார நிறுவனம்
சுத்தமான நீர் கிடைக்காத மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா முதலிடம்: வாட்டர் எய்டு ஆய்வறிக்கை
இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம்: பிஎம்ஐ ஆய்வறிக்கை

மார்ச் 25
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் தருண் விஜய்

மார்ச் 26
திருப்பதியில் இனி இலவச திருமணம்: தேவஸ்தானம் அறிவிப்பு
விமான விபத்தில் இறந்தால் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு: குடியரசுத்தலைவர் ஒப்புதல்
5 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்குவதே இலக்கு: நரேந்திர மோடி
2030-க்குள் 100 சதவீதம் மின்வாகனங்கள் இந்தியாவில் கொண்டு வந்துவிடவேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மார்ச் 27
நிலத்தடி நீரைப் பாதுகாக்க நாடு முழுவதும் 5 லட்சம் பண்ணைக் குட்டைகள் அமைப்பு
நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பு: ஆய்வில் தகவல்
சர்வதேச 20 ஓவர் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு

மார்ச் 28
63-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு:
சிறந்த படம்: பாகுபலி, சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன், சிறந்த நடிகை: கங்கணா ரணாவத், சிறந்த தமிழ்ப்படம்: விசாரணை, சிறந்த துணை நடிகர்: சமுத்திரக்கனி, சிறந்த படத்தொகுப்பு: கிஷோர்
நீர், நிலம் இரண்டையும் காப்பாற்றினால்தான் தேசம் வளர்ச்சி அடையும்: அன்னா ஹசாரே

மார்ச் 29:
நேதாஜி தொடர்பான மேலும் 50 ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட்டது
இணையவழி வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு அனுமதி
17,695 பாடல்கள் தனியாகப் பாடிய, பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா கின்னஸில் இடம்பிடித்தார்
பிஇ கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம்: அண்ணா பல்கலை

மார்ச் 30:
மியான்மரில் 56 ஆண்டுகால ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது: யூ கதின் கியாவ் மியான்மர் அதிபராக பதவி ஏற்பு

மார்ச் 31:
கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விபத்து: 64 பேர் மரணம்
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘ஹென்றி லாங்லாயிஸ் விருது’ நடிகர் கமலஹாசனுக்கு வழங்கப்பட்டது

ஏப்ரல் 1

முறைகேடு வழக்கில் கிரானைட் அதிபருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக மேலூர் மாஜிஸ்திரேட்டை இடைநீக்கம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்வது பெண்களின் அடிப்படை உரிமை: மும்பை உயர்நீதிமன்றம்
மூத்த குடிமக்களுக்கு உதவ நலநிதியம்: மத்திய அரசு நடவடிக்கை
இலங்கைக்கு 150 படகுகளை இந்தியா வழங்குகிறது

ஏப்ரல் 2
சென்னை கோட்டையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு.
சீனாவின் முட்டுக்கட்டையால் தீவிரவாதி மசூத் அசார் மீது தடைவிதிக்கும் முடிவை நிறுத்தியது ஐ.நா.
வியட்நாம் அதிபராக டிரான் டை குவாங் தேர்வு

ஏப்ரல் 3

இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி கோப்பையை மேற்கிந்தியத்தீவுகள் அணி வென்றது
இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை போட்டியிலும் மேற்கிந்தியத்தீவுகள் மகளிர் அணி கோப்பையை வென்றது


ஏப்ரல் 4
காஷ்மீர் மாநில முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்றார்
போலி என்கவுன்ட்டரில் 10  சுட்டுக் கொன்ற விவகாரம்: 47 போலீசாருக்கு ஆயுள் தண்டனை
பனாமா பேப்பர்ஸ் லீக்: பல்வேறு நாட்டின் 140 அரசியல் தலைவர்கள் பனாமா நாட்டில் பணம் சொத்து பதுக்கல்
வாடகை தாய்களுக்கும் 6 மாத பிரசவ விடுமுறை: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சட்டம்
ஸ்மார்ட்போன்களில் இலவச டெலிவிஷன் சேவை: தூர்தர்ஷன்
தேசிய அளவில் தலைசிறந்த  10 கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம்

ஏப்ரல் 5
தொழில் முனைவோரை உருவாக்கும் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தை தொடக்கி வைத்தார் மோடி
நாட்டின் முதல் அதிவேக ரயில் ‘கதிமான் எக்ஸ்பிரஸ்’: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்கி வைத்தார் (தில்லி – ஆக்ரா)
பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்: நிதிஷ் குமார்

ஏப்ரல் 6
இலங்கை சிறையிலிருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: 3 பேருக்கு ஆயுள் சிறை
இந்திய மாணவர்களுக்கு கருத்து சுதந்திரம் அதிகம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்
8 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு விரைவில் இலவச மருத்துவக் காப்பீடு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
மீண்டும் பூமிக்கு திரும்பக்கூடிய விண்கலத்தை சீனா அனுப்பியது

ஏப்ரல் 7
மகாராஷ்டிராவில் வறட்சிப் பகுதிகளுக்கு ரயில் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு
வாட்ஸ் அப்பின் புதிய தொழில் நுட்பம் குற்றங்களுக்கு ஊக்கமளிக்கக் கூடாது: அமெரிக்கா

ஏப்ரல் 8
தேர்தல் தொடர்பான புகார்களை ஐபோனில் தெரிவிக்கும் வசதி நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்
சீட்டு நிதிமோசடிகள் நிகழாமல் தடுக்கவே ஜன்தன் திட்டம்: பிரதமர் மோடி

ஏப்ரல் 9
பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா
அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருதான ‘ஃபவுண்டர்ஸ் அவர்ட்ஸ்’ அறிவிப்பு

ஏப்ரல் 10
கேரளம் புட்டிங்கால் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடிவிபத்து: 110 பேர் மரணம்
ஜிப்மர் ஆராய்ச்சிகளுக்கு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் காப்புரிமை
பிரிட்டன் இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியினர் ஒரு வார பயணமாக இந்தியா வந்தனர்

ஏப்ரல் 11
எல்லையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு: மத்திய அரசு திட்டம்
அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத் தேர்வு நடத்த இருந்த தடையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
லிபியா விவகாரத்தில் தோல்வியடைந்தேன்: அமெரிக்க அதிபர் ஒபாமா


ஏப்ரல் 12
கும்பகோணம் பள்ளி தீவிபத்து: தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனிநபர் ஆணையம் அறிக்கை
ராணுவத் தொழில் நுட்பத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
ஹரியாணா மாநிலத்தின் இரண்டாம் தலைநகரான குர்கான், குரு கிராமம் என பெயர் மாற்றம்
 

ஏப்ரல் 13
கௌரவ கொலைகளை ஒழிக்க, காவல்துறையில் சிறப்புப் பிரிவு ஒன்றை 3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
டிரான், சனாஃபிர் ஆகிய இரு தீவுகளை சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்கிறது எகிப்து

ஏப்ரல் 14
இணையவழி வேளாண் சந்தையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்
உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி ஜூன் 15-க்குள் மதுவின் தீமை குறித்து ஆராய குழு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஏப்ரல் 15
வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு தர இந்தியா – அமெரிக்கா ஒப்புதல்
நேபாள நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சுசீலா கார்க்கி நியமனம்

ஏப்ரல் 17
தரமில்லாமல் போடப்படும் சாலைகளால் ஆண்டுக்கு 5 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் சேதம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் ஓய்வு
ஈக்வாடர் நாட்டில் கடும் நிலநடுக்கம்: 233 பேர் மரணம்

ஏப்ரல் 18
கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து திருடிச் செல்லவில்லை, அதை இந்தியா திரும்ப கேட்காது: மத்திய அரசு

ஏப்ரல் 19
21-ஆம் நூற்றாண்டை இந்தியா ஆளும்: பிரதமர் மோடி
புதிய பி.எப். திட்டத்தினை வாபஸ் பெற்றது மத்திய அரசு
மக்களை ஏமாற்றும் வகையில் அமையும் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்க நுகர்வோர் துறை அமைச்சகம் முடிவு
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள கோஹினூர் வைரம் சுமுகமான முறையில் மீட்டெடுக்க நடவடிக்கை: மத்திய அரசு
2016-ஆம் ஆண்டுக்கான, உலகின் சிறந்த விளையாட்டு வீரர் நோவக் ஜோகோவிச், விளையாட்டு வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ் தேர்வு

ஏப்ரல் 20
குடியரசுத் தலைவரின் முடிவும் மறு ஆய்வுக்கு உட்பட்டதே: உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
இந்தியாவில் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஏப்ரல் 21
தேர்தல் பணியில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கட்டாயம் ஈடுபடவேண்டும்: தேர்தல் ஆணையம்
அரசு அதிகாரிகள் சீர்திருத்தங்கள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்: நரேந்திர மோடி
பெங்களூரில் திருக்குறள் மன்ற தமிழ் நூலகம் சூறையாடப்பட்டது
31-வது ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது.


ஏப்ரல் 22
வாக்குப்பதிவு தினமான மே 16 அன்று பொது விடுமுறை: தமிழக அரசு
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல்

ஏப்ரல் 23
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட 175 நாடுகள் கையெழுத்திட்டன

ஏப்ரல் 24
விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்தது

ஏப்ரல் 25
சீனாவில் இருந்து பால், செல்லிடப்பேசிகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை
ஐஐடியில் சம்ஸ்கிருத மொழிப்பாடம்: மக்களவையில் மத்திய அரசு தகவல்


ஏப்ரல் 26
வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் திருக்குறள் பாடத்திட்டம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்திய-ஆப்ரிக்க நட்புறவுக் குழுத்தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தேர்வு
கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவர் மூலம் ஆட்டமிழந்த முதல் வீரர் நான்தான்: சச்சின் தெண்டுல்கர்

ஏப்ரல் 27
இந்தியாவின் பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி வெற்றிகரமாக பிஎஸ்எல்வி சி 33 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது
அந்நிய நேரடி முதலீடு 37% அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்
தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு: இந்திய விஞ்ஞானி சோகினி சக்ரவர்த்தி கண்டுபிடிப்பு
பஞ்சாப் எல்லையில் லேசர் சுவர் செயல்பாட்டுக்கு வந்தது
மின்சாரத்தட்டுப்பாடு காரணமாக வெனிசூலாவில் வாரம் 5 நாள் அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை

ஏப்ரல் 28
நடப்பாண்டிலேயே மருத்துவ பொதுநுழைவுத் தேர்வு: மே 1, ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
பப்புவா நியூ கினியா நாட்டுக்கு இந்தியா 660 கோடி கடனுதவி
நாடுமுழுவதும் 2012 முதல் 2014 வரை 1.30 லட்சம் சிறுவர்கள் குற்ற வழக்குகளில் கைது: மத்திய அரசு தகவல்

ஏப்ரல் 29
தொழிலாளர் வைப்பு நிதி வட்டி 8.7 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாக உயர்வு
ரயில் பயணச்சீட்டை ரத்து செய்ய 139-க்கு டயல் செய்யலாம்: ரயில்வே அமைச்சகம்
ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
பனாமா லீக்ஸில் இடம்பெற்ற அனைத்து இந்தியர்களுக்கும் வரிமானவரித்துறை நோட்டீஸ்
இந்தியா- பப்புவா நியூகினியா இடையே விவசாய ஆராய்ச்சி, சுகாதாரத் துறைகளில் ஒப்பந்தம்

ஏப்ரல் 30
இந்தியாவில்தயாரிப்போம் திட்டத்தில் முதலீடு செய்ய வாருங்கள்: நியூஸிலாந்து தொழிலதிபர்களுக்கு பிரணாப் அழைப்பு

மே 1
5 கோடி குடும்பங்களுக்கு ரூ,.8 ஆயிரம் கோடி செலவில் ‘இலவச கேஸ் வழங்கும் திட்டத்தை உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
ரியல்எஸ்டேட்சட்டதிருத்தமசோதா 2016 – இன்று முதல் அமல்

மே 2
இந்தியா நியூசிலாந்து இடையே விமான சேவைகளில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து

மே 4
உலகின் மிகச்சிறிய என்ஜினை வடிவமைத்து இங்கிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை

மே 9
மருத்துவப்படிப்புக்கு மாணவர்களைச் சேர்க்க மாநில அரசுகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தமுடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

மே 10
இந்தியாவில் உள்ள அலகாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்களில் இலவச வை-பை இணைய இணைப்பு சேவையை கூகுள் நிறுவனம் வழங்கியது
பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ வெற்றி

மே 12
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஷசாங் மனோகர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்

மே 14
பண விநியோகம் தொடர்பாக அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு

மே 15
பண விநியோகம் தொடர்பாக தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு

மே 16
தமிழ்நாட்டில் அமைதியாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. 74 சதவீதம் வாக்குப்பதிவு ஆனது.

மே 19
தமிழ்நாட்டில் 134 தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா தொடர்ந்து 2-வது முறையாக முதல்வரானார். திமுக 98 இடங்களைக் கைப்பற்றியது
புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது
கேரளத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சியைப் பிடித்தது
அசாமில் பாஜக ஆட்சியைப் பிடித்தது
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்தார்.

மே 21
புதுச்சேரி துணை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார்.

மே 22
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.

மே 23
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். 100 யூனிட் இலவச மின்சாரம், ஏழைப் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களில் கையெழுத்திட்டார்.
மீண்டும் பயன்படுத்தும் வகையிலான விண்ணுக்குச் சென்றுவிட்டு பத்திரமாக பூமிக்குத் திரும்பும் ராக்கெட் இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.

மே 24
மருத்துவ நுழைவுத்தேர்வை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.

மே 28
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.


மே 30
சென்னை தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி மதிப்பிலான சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரெயிலான டால்கோ ரெயில், உத்தரப்பிரதேசத்தில் பரெய்லி – மொராதாபாத் இடையே சோதனை முறையில் இயக்கப்பட்டது.

ஜூன் 1
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜூன் 3
தமிழக சட்டசபை சபாநாயகராக பி.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டனர்

ஜூன் 4
தமிழக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பிரபல குத்துச்சண்டை வீரரான முகமது அலி மரணம்

ஜூன் 5
நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்ததால், 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.

ஜூன் 6
புதுச்சேரி முதலவராக நாராயணசாமி பதவி ஏற்றார்.

ஜூன் 7
அமெரிக்காவிற்கு சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.

ஜூன் 10
இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இரண்டு பேர் மரணம்

ஜூன் 11
விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப்பிரிவு முடக்கியது
நடிகர் கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சிபிஐ விசாரணை நடத்த கேரள அரசு முடிவு

ஜூன் 14
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா

ஜூன் 15
பழம்பெரும் இயக்குநர் ஏ.சி.திரிலோகசந்தர் மரணம்

ஜூன் 16
அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவரது வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார் தலாய்லாமா.

ஜூன் 19
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி தமிழ்நாடு முழுக்க 500 மதுக்கடைகள் மூடப்பட்டன

ஜூன் 22
20 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
மாநகராட்சி மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஜூன் 23
தாஷ்கண்ட் மாநாட்டின் இடையே சீன அதிபரை சந்தித்து, அணு சக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்த்துக் கொள்வதற்கு ஆதரவு தருமாறு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
மேயர் தேர்தல் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

ஜூன் 24
அணு சக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இணைவதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டதால், அந்த வாய்ப்பு கைநழுவிப்போனது
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறலாமா என்ற கருத்துக்கணிப்பில், வெளியேறலாம் என இங்கிலாந்து மக்களின் பொதுவாக்கெடுப்பின் மூலம் தெரிவித்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகக்கூடாது என்று பிரச்சாரம் செய்த, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக முடிவு.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார்.

ஜூன் 25
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி புனேவில் தொடக்கிவைத்தார்
சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி விலகினார்

ஜூன் 29
ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்
வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஜூன் 30
இந்தியாவில் சூரிய மின்சக்தி விரிவாக்கத் திட்டங்களுக்கு உலக வங்கி ரூ 6700 கோடி நிதி உதவி, உலக வங்கி தர இருப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு


ஜூலை 1
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்ப்பு
மருத்துவ உயர்படிப்புகளில் தமிழகத்தில் பின்பற்றப்பட்டுவந்த மாநில இட ஒதுக்கீட்டு முறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

ஜூலை 5
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 19 அமைச்சர்கள் பதவி ஏற்றதால் அமைச்சர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்த்து.
மெட்ராஸ், பாம்பே ஹைகோர்ட்டுகள் சென்னை, மும்பை ஹைகோர்ட்டுகள் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜூலை 10
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது

ஜூலை 12
தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

ஜூலை 16
துருக்கி நாட்டில் மக்கள் துணையுடன் ராணுவப்புரட்சி முறியடிப்பு.

ஜூலை 18
பாலாறு தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க ஆந்திர அரசை அனுமதிக்கக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மனு தாக்கல்

ஜூலை 20
தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் வங்கிக்கணக்குகளை முடக்கவும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு.

ஜூலை 22
சென்னையில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்குச் சென்ற ராணுவ விமானம் மாயமானது

ஜூலை 27
ராமேஸ்வரம், பேய்க்கரும்பு என்ற இடத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிலை திறந்து வைக்கப்பட்டது

ஜூலை 30
இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்பதற்கு உரிய நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கும் என்று மத்திய அரசு அறிவிப்பு


ஆகஸ்டு 1
குஜராத் முதல்வராக இருந்த ஆனந்தி பென் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்
தில்லி மேல்சபையில் மருத்துவ நுழைவுத்தேர்வு மசோதா நிறைவேறியது

ஆகஸ்டு 3
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் தில்லி மேல்சபையில் நிறைவேறியது.

ஆகஸ்டு 4
தில்லி மாநில அரசில் கவர்னருக்கே முழு அதிகாரம் உண்டு. அவரது ஒப்புதல் இன்றி கேஜ்ரிவால் பிறப்பித்த உத்தரவு செல்லாது: தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஆகஸ்டு 5
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்டது.

ஆகஸ்டு 6
வியட்நாம் வீடு பட இயக்குநரும் நடிகருமான சுந்தரம், தயாரிப்பாளர், பாடலாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் மரணமடைந்தனர்.

ஆகஸ்டு 7
குஜராத் முதல்வராக விஜய் ரூபானிக் பதவியேற்றார்

ஆகஸ்டு 9
சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கி பணம் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
மணிப்பூரில் 16 ஆண்டுகாலமாக உண்ணாவிரதம் இருந்த இரோம் சர்மிளா உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிகோபுல் தற்கொலை செய்து கொண்டனர்
பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி மரணம்

ஆகஸ்டு 10
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1-ஆவது அலகை தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய மூவரும் தொடங்கி வைத்தனர்.

ஆகஸ்டு 14
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணமடைந்தார்

ஆகஸ்டு 18
ஒலிம்பிக்கில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்றார்.

ஆகஸ்டு 19
ஒலிம்பிக்கில் நடைபெற்ற பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

ஆகஸ்டு 20
பிரதமர் மோடி அணிந்த கோட் சூட், ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனதால், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக உர்ஜித் படேல் நியமனம்

ஆகஸ்டு 24
தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக்கொணர டிஎன்பில் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது.
இத்தாலியில் கடும் நிலநடுக்கம். 250 பேர் பலியாகினர்

ஆகஸ்டு 30
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 444 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.

ஆகஸ்டு 31.
தமிழக கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக பொறுப்பு வகிப்பார் என குடியரசுத்தலைவர் அறிவிப்பு

செப்டம்பர் 1
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளாவை அனுமதிக்கக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

செப்டம்பர் 2
தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக வித்யாசாகர் ராவ் பொறுப்பேற்றுக் கொண்டார்

செப்டம்பர் 3
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் செய்தது அமலாக்கப் பிரிவு.

செப்டம்பர் 4
அன்னை தெரசாவிற்கு வாடிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டத்தை வழங்கினார்

செப்டம்பர் 4
தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம், 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது

செப்டம்பர் 7
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

செப்டம்பர் 8
இன்சாட் 3டி ஆர் வானிலை செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எப் 5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
சரக்கு மற்றும் சேவை வரிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்

செப்டம்பர் 10
பிரேசிலின்ரியோடிஜெனிரோவில்நடைபெற்ற பாராஒலிம்பிக்கில்தமிழகத்தைச்சேர்ந்தமாரியப்பன்தங்கவேல்உயரம்தாண்டுதலில்தங்கப்பதக்கம்வென்றார்.

செப்டம்பர் 12
தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதை எதிர்த்து கர்நாடகாவில் தமிழகத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பஸ்கள், 50-க்கும் மேற்பட்ட லாரிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன

செப்டம்பர் 14
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்

செப்டம்பர் 16
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடாகத்தைக் கண்டித்து தமிழ்நாட்டில் பந்த் நடத்தப்பட்டது

செப்டம்பர் 18
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவமுகாமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலியாயினர். 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் 20
தமிழகத்திற்கு செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர், கர்நாடகம் திறந்துவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு. காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது

செப்டம்பர் 21
சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்

செப்டம்பர் 22
உடல்நலக்குறைவு காரணமா அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்

செப்டம்பர் 25
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவிப்பு

செப்டம்பர் 26
ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட எட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி விசி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

செப்டம்பர் 28
பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு, இந்தியா, பூடான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் புறக்கணிப்பால் ஒத்திவைக்கப்பட்டது

செப்டம்பர் 29
இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் அதிரடியாக நுழைந்து 7 தீவிரவாத முகாம்களை அழித்தனர். இந்த தாக்குதலில் 38 தீவிரவாதிகளும் 2 பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர்

செப்டம்பர் 30
தமிழகத்திற்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர், கர்நாடகம் திறந்துவிடவேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது
மத்திய அரசின் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் தமிழக அரசிடம் ஒப்படைப்பு. இ-சேவை மையங்களில் ஆதார் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தை உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

அக்டோபர் 3
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக உத்தரவிடும் அதிகாரம்.

அக்டோபர் 4
தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது
டேவிட் டவ்லஸ்,  டங்கன் ஹால்டன் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு

அக்டோபர் 5
நாட்டின் முதலாவது மருத்துவப்பூங்காவை செங்கல்பட்டில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

அக்டோபர் 6
பிரெஞ்ச் கயானாவில் இருந்து இஸ்ரோ வடிவமைத்த ஜிசாட் – 18 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

அக்டோபர் 7
கொலம்பிய அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது
மூன்றாவது உலகக்கோப்பை கபடிப்போட்டி அகமதாபாத்தில் துவங்கியது

அக்டோபர் 11
முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது

அக்டோபர் 13
அமெரிக்க பாப் இசைக் கலைஞர் பாப் திலானுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் ஓய்வு பெற்றார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆஸ்டோனியா குட்டரஸ் ஐ.நாவின் புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்டோபர் 14
பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அக்டோபர் 15
கோவாவில் பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது.
கூடங்குளத்தில் 3,4-வது அணு உலை கட்டுமான பணிகளை பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் தொடக்கிவைத்தனர். 16 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது.

அக்டோபர் 17
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நவம்பர் 19-இல் நடைபெறும் என அறிவிப்பு

அக்டோபர் 18
காவிரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று மீண்டும் உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

அக்டோபர் 22
3-வது உலகக்கோப்பை கபடிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

அக்டோபர் 19
சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கிய இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்கபீரூக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அக்டோபர் 24
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் 5 ஆண்டு பதவி காலம் முடிவுக்கு வந்தது. அவற்றுக்கு தனி அதிகாரிகள் நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டது.

அக்டோபர் 26
தனியார் சட்டக்கல்லூரி தொடங்க தமிழக அரசு கொண்டுவந்த தடை சட்டத்தை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

அக்டோபர் 30
பாகிஸ்தானின் 4 ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது

நவம்பர் 1
தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் குறித்த உலகவங்கி வெளியிட்ட தரவரிசைப்பட்டியலில் ஆந்திராவும் தெலங்கானாவும் முதலிடம். தமிழ்நாட்டிற்கு 18-ஆம் இடம்.

நவம்பர் 2
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதத்தது

நவம்பர் 4
தில்லியில் காற்றுமாசு அதிகரிப்பால் 17 ஆண்டுகளுக்குப்பிறகு மோசமான பனிமூட்டம் ஏற்பட்டது.

நவம்பர் 5
கடலில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர்கள் அறிவிப்பு

நவம்பர் 7
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

நவம்பர் 8
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு. 2000 ரூபாய் புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படுவதாகவும் டிசம்பர் 30-க்குள் பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் அவகாசம் வழங்கப்பட்டது

நவம்பர் 9
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகள் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி

நவம்பர் 10
விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

நவம்பர் 11
ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமருடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டார்.

நவம்பர் 12
சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவராக இந்தியாவின் நரீந்தர் பாத்ரா தேர்வு செய்யப்பட்டார்.

நவம்பர் 13
மக்களின் வேண்டுதல்களாலும் பிரார்த்தனைகளாலும் தான் மறுபிறவி எடுத்துள்ளதாக, ஜெயலலிதாவின் கையெழுத்திட்ட கடிதம் வெளியானது
உலகப் புகழ்பெற்ற ஆசிய நடிகர் ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

நவம்பர் 15
வங்கிகளில் பணம் மாற்ற வருபவர்களுக்கு விரலில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

நவம்பர் 16
பெங்களூருவில் ரூ.650 கோடி செலவில் சுரங்கத் தொழில் அதிபர் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் நடைபெற்றது


நவம்பர் 19
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
அப்போலோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண தனி அறைக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு

நவம்பர் 22
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி
கர்நாடக இசைமேதை பால முரளி கிருஷ்ணா மரணம்.

நவம்பர் 26
கியூபாவின் விடுதலைக்கு பாடுபட்டவரும், முன்னாள் அதிபருமான பிதெல் காஸ்திரோ மரணம்

நவம்பர் 28
சேலம் இரும்பாலைகளின் பங்குகளை விற்பனை செய்ய மத்தியஅரசு ஒப்புதல்

நவம்பர் 29
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியாக இருந்தவரும், இலங்கையின் முன்னாள் அமைச்சருமான கருணா, பணமோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டார்

நவம்பர் 30
திரையரங்குகளில் சினிமா படங்களைத் திரையிடும் முன்பு தேசியகீதம் இசைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு


டிசம்பர் 1
கவிஞர் இன்குலாப் உடல்நலக்குறைவால் மரணம்

டிசம்பர் 4
பெண்கள் ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தொடர்ந்து 6-ஆவது முறையாக சாம்பியன்.

டிசம்பர் 5
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிப்பு
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார்

டிசம்பர் 6
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு
எம்.ஜி.ஆர் சமாதியின் பின்புறம் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டது

டிசம்பர் 7
நடிகரும், எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியருமான சோ.ராமசாமி மரணமடைந்தார்

டிசம்பர் 8
முத்தலாக் முறை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
தொழில் அதிபர்களான சீனிவாச ரெட்டி, சேகர் ரெட்டி வீடுகளில் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு. ரூ.131 கோடி பணம், 171 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது

டிசம்பர் 9
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது
ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்ததாக விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி கைது

டிசம்பர் 10
முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி மரணம்.
அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற, ரஷியா உதவியது என்று அமெரிக்காவின் உளவுத்துறை அறிவித்தது. 

டிசம்பர் 12
சென்னையை வார்தா புயல் தாக்கியது. சென்னையில் பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

டிசம்பர் 15
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

டிசம்பர் 17
சட்டவிரோதமாக பணத்தை மாற்ற உதவி செய்ததாக பெங்களூருவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள்  கைது

டிசம்பர் 18

நதிநீர் பங்கீடு பிரச்சினையை தீர்க்க புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்கு மத்தியஅரசு முடிவு
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டிசம்பர் 19

இங்கிலாந்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்

டிசம்பர் 21
இங்கிலாந்து எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 759 ரன்கள் குவித்தது. டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணியின் அதிகபட்ச ரன் இதுவே.
தமிழகத்தின் தலைமைச் செயலாளரான ராம மோகனராவ் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.
எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு

டிசம்பர் 22

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் நீக்கப்பட்டார். தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
2016-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ரவி அஸ்வின் தேர்வு

டிசம்பர் 23
பாரா லிம்பிக்கில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பனுக்கு தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசாக அளித்தது.

டிசம்பர் 24
அரபிக்கடலில் வீரசிவாஜியின் சிலை அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

டிசம்பர் 25
ரொக்கமில்லா பணபரிமாற்றத்தை ஊக்குவிக்க 2 பரிசுத்திட்டங்கள்: நரேந்திர மோடி அறிவிப்பு

டிசம்பர் 26
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

(போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தொகுத்துத் தந்திருக்கிறேன்.

-மோகனன்)

நீட் தேர்வு – நம்பிக்கை துரோகிகள் யார்?

$
0
0

நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பை இழந்த அனிதாவின் மரணத்திற்குப் பிறகு, இதுகுறித்து பல்வேறு விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன.
என் சிந்தனையில் உதித்த கேள்விகளையும், விமர்சனத்தையும் இங்கே முன்வைக்கிறேன்… பதில்கள் அரசிடமிருந்து கிடைக்காது… மக்களிடமிருந்து கிடைக்கவேண்டும். இதற்கு சில பிளாஷ்பேக்குகள் அவசியமாக இருக்கின்றன.
ஜெயலலிதாவின் ஆளுமையும் வீழ்ச்சியும்
ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றவாளி என்பதை மறுப்பதற்கில்லை. அவர் குற்றவாளிதான். ஆனால் அவர் ஆட்சியில் இருந்தவரை, நீட் தேர்வையும் சரி, மீத்தேன் திட்டம் என எதையும் இங்கே அனுமதிக்கவில்லை. காரணம் நாடாளுமன்றத்தில் இவருடைய கட்சிக்கு இருந்த வாக்குத்தலைகளின் எண்ணிக்கை. (அமைச்சர்கள் என்றெல்லாம் சொல்லி அந்த வார்த்தையை அசிங்கப்படுத்த முடியவில்லை) அவரின் ஆளுமையின் காரணமாகவே அனைத்தையும் தடுத்துவந்தார்.
வளரும் நாடுகளில் தனது அதிகாரத்தை ஏற்காத தலைவர் யாரேனும் இருந்தால், அமெரிக்காவின் சிஏ அமைப்பின் மூலம் படுகொலைகளை நிகழ்த்தும் அல்லது கலகத்தை ஏற்படுத்தி பொம்மை ஆட்சியை நிறுவும்.
அதுபோல, மத்திய அரசின் திட்டங்களை ஆரம்பம் முதல் எதிர்த்துவந்த ஜெயலலிதாவினை சாய்க்க, அவரின் உடல்நலக்குறைவை பயன்படுத்தி, இங்குள்ளோரின் பதவி ஆசைகளை தூண்டிவிட்டு, ஜெ.யினை மண்ணுக்கு அனுப்பினர் என்று எண்ணத்தோன்றுகிறது. யார் நம்பிக்கையாக இருப்பார்கள் என்று ஜெயலலிதா நினைத்தாரோ, அவரே அவரது ஜீவனை அழிப்பார்கள் என்று நினைத்திருக்க மாட்டார். அவரது ஆன்மா இவற்றை எல்லாம் பார்த்து கண்ணீர் உகுத்திருக்கும்.
பின்னணியில் யார்..?
பா.ஜ.க. இதன் பின்னணியில் இருந்தது என்று நான் சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஜெ.வின் இறுதிச் சடங்கின்போது, காலை முதல் இறுதிவரை பா.ஜ.க.வின் வெங்கையா நாயுடு கூடவே இருந்தார். அப்படி இருந்ததற்கான காரணத்தை பாமரன் யோசித்தாலும் புரிந்துவிடும்.
ஜெ.வின் மரணம் குறித்து, சிபிஐ விசாரணை வைத்தாலும் கூட, மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அது சொல்படி ஆடும் பம்பரங்களாகத்தான் சிபிஐ இருக்கும் என்றும் கடந்தகால வரலாறுகள் சொல்லும் பாடம். அதனால், இவற்றால் எல்லாம் உண்மைகள் வெளிவராது.
ஆட்சியில் இருக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, நாற்காலி ஆட்டம் காணுகிற நிலை வந்ததும், ஜெ.வின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடியார் அறிவித்திருப்பது, அவரின் பதவிமீதுள்ள ஆசையைத்தான் காட்டுகிறது. இதுவும் வெறும் கண் துடைப்புதான்.
சசிகலாவின் ஆசையும் நிராசையும்
ஜெயலலிதா இருந்தவரை, அம்மாவின் உண்மையான விசுவாசி என்று நெஞ்சைக் கிழித்துக்கொள்ளாத குறையாக இருந்த அத்தனை துதிபாடிகளும், அவர் மறைவிற்குப் பின், சசிகலாவிற்கு துதிபாடியதை யாரும் மறந்திருக்க முடியாது. பா.வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் செய்த சாகஸங்களை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
இடைக்கால முதல்வராக ஓபிஎஸ் வந்தார். அவர் தங்களின் அதிகாரத்திற்கு கட்டுப்படவில்லை என்பதால், அவரை தூக்கினார்கள். சசிகலா தரப்பினர் கூவத்தூரில் எம்எல்ஏக்களை கூண்டோடு அழைத்துச்சென்று, புட்டி, பெட்டி என்று சகலவசதிகளுடன் குஷிப்படுத்தினார்கள். தொகுதிக்கு நல்லது செய்வார் என்று எம்எல்ஏக்களை தேர்வு செய்தால், எம்எல்ஏக்களோ… சசிகலாவின் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய அங்கே கூடியிருந்தார்கள். கேட்டால், ஆட்சியைக் காப்பாற்றவே கூடினோம் என்று பசப்பினார்கள்.
ஜெ.வின் ஆட்சி காலத்தில் பின்வரிசையில் இருந்து எடப்பாடியார் முதல்வராக்கப்பட்டார். சசிகலா சொத்துசேர்த்த வழக்கில், நீதிபதிகளுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றது, இரட்டை இலையை கைப்பற்ற லஞ்சம் கொடுக்க முயன்றது என பல்வேறு தகிடுதத்தங்கள் நடைபெற முயன்றன.
அதிகார மையமாக மாறிடலாம் என ஆசைப்பட்ட சசிகலா, சிறைக்கம்பிக்குள் சென்றார். ஆனால் சசிகலாவின் ஆசை நிராசையாகிப்போனது. அங்கும் அவரின் ஆட்டம் அடங்கவில்லை. சிறைக்குள் இருந்தபடி, இங்கே பலரை ஆட்டிவைக்க முயற்சித்தார். சிறையிலும் பல ஆட்டம் ஆடினார் என்பதை சிறைத்துறை டிஐஜி ரூபா நிரூபித்தார். இவை எல்லாம் நமக்கு தெரிந்திருந்தும் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், நீதித்துறை நாயகமாய் இருக்கிறதே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. இதனிடையே ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் இடையூறு வேறு தமிழக மக்களை குழப்பியது.
மத்திய அரசின் பொம்மலாட்டம்
எடப்பாடியார் ஒருபுறம், ஓபிஎஸ் ஒருபுறம் என அதிமுக பிளவுபட, தினகரன் கோஷ்டி ஒரு புறம் இழுத்துக்கொண்டு ஓட, எம்ஜிஆர் எனும் சக்தி உருவாக்கிய இரட்டை இலையான அதிமுக, இலைகள் இரண்டு, காம்போடு மூன்று என்பதுபோல், மூன்றாய் சிதறியது. நிலையற்ற ஆட்சியை மிரட்டி, தங்களுக்கு வேண்டிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றிக் கொண்டது.
நீட் பிரச்சினை தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடிக்கத் துவங்க, கண்துடைப்பிற்காக அவசரச்சட்டத்தை இயற்றியது தமிழக அரசு. மத்திய அரசும் பரிசீலிக்கிறோம் என்று பம்மாத்துகாட்டியது.
நளினி சிதம்பரம் எனும் சீமாட்டி
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இருந்த நளினி சிதம்பரம், இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாக வாதிட்டார் இந்த சீமாட்டி.
தமிழகத்தின் நலனே எனது குறிக்கோள் என்று கூறிவந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி இவர். சிபிஎஸ்இ மாணவர்கள் இந்திய அளவில் உள்ள இடங்களில் போட்டியிடலாம் என்று தெரிந்தும் ஊமையாகவே இருந்தார் ப.சிதம்பரம். இவரும் தமிழர்தான்.
இந்திய அளவில் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்கள் படித்திருந்தார்கள் எனில், நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்த்திருக்க மாட்டார்கள். தாய்மொழிக் கல்வியில் பயின்ற மாணவர்களை, இந்திய அளவிலான போட்டிக்கு அழைத்து வீழ்த்தும் கோழைத்தனமான செயலில் மத்திய அரசு இறங்கியது. உச்சநீதிமன்றத்தில் தமிழக மாணவர்களுக்கு எதிராக கையை விரித்தது. தீர்ப்பால் ஏழை தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவில் இடி விழுந்தது.
மத்திய அமைச்சராக இருந்த காரணத்தால் சிதம்பரத்தின் மகன்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்திருப்பார்கள். பணக்காரர்களின் பிள்ளைகள் ஆண்டிற்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு செய்து சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைப்பார்கள். ஏழை மக்களால் இது முடியுமா? அவர்களுக்கு அடைக்கலம் தருவதே அரசுப்பள்ளிகள்தான்.
நூதனத் தீண்டாமை
ஆக, அதிக பணம் வைத்திருப்பவன் பிள்ளைகள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும். மற்றவர் அனைவரும் அதன் கீழுள்ளவற்றை மட்டுமே படிக்கவேண்டும் என்ற நூதனத் தீண்டாமை முறைக்கு, மத்திய அரசு நம்மை ஆளாக்கியது. இதன் விளைவு, அனிதா எனும் மலர் தூக்கிட்டுக்கொண்டது.
அவாளும் இவாளும்
இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் மலைவாசி மக்கள்தான். நீட்டிற்கு ஆதரவு தருகிறேன் பேர்வழி என்ற பெயரில் பிராமணியத்தை உயர்த்திப் பிடிக்கும் எஸ்.வி.சேகர் போன்றோர் பிராமணர்கள் அனைவரும் இந்நாட்டிற்கு வந்தேறிகள் என்பதை மறந்துவிடுகின்றனர். நீட் தேர்வு எழுத விருப்பமெனில் அகில இந்திய அளவில் போய் எழுதுங்களேன். யார் வேண்டாமென்றது. தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைக்க என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது.
ஏன் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டில் பிராமணர்கள் மருத்துவர்கள் ஆனதே இல்லையா. அந்த ஒதுக்கீட்டுக்கான இடங்களை வேறு யார் ஆக்ரமிக்கிறார்கள். ஆக, உங்கள் இனம் மட்டும் மருத்துவர் ஆக வேண்டும். தமிழினம் வீழ்ந்து மாயவேண்டும்.
இதை சாதியம் கொண்டு பார்க்கவேண்டாம் அவாள்களே… இவாள்களே இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். தமிழ்நாட்டில் பிறந்து, தமிழன் என்று சொல்லிக்கொண்டு, தமிழனையே ஏசும் உங்களையும் இங்கே வைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன் தெரியுமா? வந்தாரை வாழ வைத்துத்தான் தமிழகத்திற்கு வழக்கம்.
யாருக்கு ஆதாயம்?
நீட் முறையால் தமிழ்நாட்டில் வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பேர் இடம்பிடித்திருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக மருத்துவம் படித்துவிட்டு, படிப்புக்காலம் முடிந்ததும் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள். தமிழ்நாட்டில் தமிழர்கள் மருத்துவர்களாக அன்றி நோயாளிகளாகத்தான் இருப்பார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
நீட் வேண்டாம் நமக்கு. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியிலுக்கு மாற்றுங்கள். இதன்மூலம் அவரவர் மாநிலத்திற்கு தேவையான படிப்பாளிகளை அவர்களது தாய்மொழியிலேயே உருவாக்கிக்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள இடங்களை தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள்தான் படிக்க வேண்டும். அப்படி ஒரு தேர்வை வைக்க விரும்பினால், இங்குள்ள பாடத்திட்டத்தின்படி, என் தாய்மொழியில் தேர்வை நடத்துங்கள். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு என்று அனைத்து படிப்பிலும் 50 இடங்களை ஒதுக்கீடு செய்யுங்கள். அப்போதுதான் நாமக்கல் பிராய்லர் தனியார் பள்ளிகளின் ஆதிக்கமும், சிபிஎஸ்இ பள்ளிகளின் ஆதிக்கமும் மறையும்.
தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களை உங்கள் இஷ்டம் போல் தேர்வு வைத்துக்கொண்டு, யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள். எங்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுக்கல்லூரிகளை, நயவஞ்சகமாய் அபகரிக்க வேண்டாம்.
நம்பிக்கை துரோகிகள் யார்?
நமக்கு நல்லது செய்வார்கள் என்று நாம் தேர்வு செய்த எம்.எல்.ஏ., எம்பிக்கள் நம்பிக்கை துரோகிகள். பதவிக்கும், பணத்திற்கும் ஆமாம் சாமி போடும் அரசு அதிகாரிகள் நம்பிக்கை துரோகிகள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராகவே காய் நகர்த்தும் அத்துனை அரசியல் நாய்களும் நம்பிக்கை துரோகிகள். காசுக்கு ஓட்டு போட்டு, அத்தனை நம்பிக்கை துரோகிகளையும் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்பிவைத்த நாமும், நமது வருங்கால சந்ததிக்கு நம்பிக்கை துரோகிகள்தான்.
எனது வாதம்… பிடிவாதம்
@ போதும்… கட்சிகளுக்கு வாக்களித்தது…
@ நாமே இனி களத்தில் இறங்குவோம். அரசியலில் இறங்குவோம். தலைமை கொள்வோம்.
@ வாக்களித்து தேர்வு செய்தவர்களை, ஆட்சிமுறையில் திருப்தி இல்லையெனில் எம்எல்ஏக்களை திரும்பப்பெறும் முறையை சட்டமாக்குவோம்.
@ நேர்மையாளர் சகாயத்தை தலைமை முதன்மை செயலராக நியமனம் செய்வோம்.
@ உதயச்சந்திரன் போன்ற நல்லோரை, தேர்வு செய்து எல்லா துறையிலும் நியமிப்போம்.
@ தமிழக நதிகளை மக்களின் உழைப்பு கொண்டு இணைப்போம். விவசாயம் பெருக்குவோம்.
@ தமிழகத்திற்கு தேவையான பொருட்களை தமிழர்களைக் கொண்டே உற்பத்தி செய்து, விநியோகிப்போம்.
@ தமிழர்களை தலைநிமிர வைப்போம்.
-மோ.கணேசன். இதழியலாளன், தமிழ்நாட்டின் வாக்காளன், வரி செலுத்தும் இந்தியன்.

அறம் செய்ய விரும்புவோம்! - நாடக வடிவில் ஆத்திசூடி கதைகள்!

$
0
0
வணக்கம் வலையுலக நண்பர்களே...


ஆத்திசூடியை நாடக வடிவில் கதையாக எழுதி இருக்கிறேன். இதை புத்தகமாக வெளியிடுகிறது பாரதி புத்தகாலயம். விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது இப்புத்தகம்... உங்களின் அன்பும் ஆதரவும் இப்புத்தகத்திற்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

பள்ளி செல்லும் சிறுவர்களுக்காகவும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் குடும்பங்களின் குழந்தைகளுக்காகவும் இந்த நாடக நூல் பயன்படும்....


விடமாட்டேன் உன்னை தொடர்கதை இப்போது புத்தகமாக வெளிவருகிறது!

$
0
0
அன்பு வலைப்பூ நண்பர்களே...

இந்த வலைப்பூவில்... விடமாட்டேன் உன்னை என்ற தொடர்கதையைப் படித்திருப்பீர்கள். அதற்கு நீங்கள் தந்த ஆதரவைக் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.

பலரின் வேண்டுகோளுக்கிணங்க... இதை புத்தகமாக வெளியிடுகிறேன். இந்த புத்தகத்திற்கு, கிரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் அணிந்துரை எழுதித் தந்திருக்கிறார்.

பாரதி புத்தகாலயம் இந்த புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுகிறது. 96 பக்கங்கள். விலை 80 ரூபாய்.

புத்தக வடிவிலான படைப்பிற்கும் உங்களின் ஆதரவு தேவை...


என்றென்றும் அன்புடன்

மோ.கணேசன்

செம - திரைப்பட விமர்சனம்

$
0
0

இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வள்ளி காந்த் இயக்கத்தில் நேற்றைய தினம், உலகமெங்கும் வெளியாகி இருக்கும் படம் ‘செம’.
திருச்சியில் வசிக்கும் ஆரவள்ளியின் (சுஜாதா சிவக்குமாரின்) ஒரே மகன் குழந்தைவேலு (ஜி.வி.பிரகாஷ்). குழந்தைவேலின் நண்பனாக கோதண்டம் (யோகிபாபு).
தெருத்தெருவாக குட்டியானையில் சென்று காய்கறி, பழம், மீன், கருவாடு என்று சீஸனுக்கு ஏற்றாற் போல் வியாபாரம் செய்துவரும் குழந்தைவேலுக்கு, மூன்று மாதத்திற்குள் கல்யாணம் செய்யணும். இல்லையெனில் 6 ஆண்டுகளுக்கு கல்யாணமே நடக்காது என்று ஜோஸியர் சொல்ல, ஆரவள்ளி உள்ளூரில் பெண் தேடுகிறார். மூன்று ஆண்டுகளாக ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் குழந்தைவேலை அசிங்கப்படுத்த, பெண் பார்க்க செல்லும் இடங்களிலும் நிறைய பெண்கள் குழந்தைவேலை வேண்டாமென்று சொல்ல, விரக்திக்கு செல்லும் ஆரவள்ளி தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார்.
உள்ளூரில்தான் பொண்ணு கிடைக்கவில்லையே என்று, அருகிலிருக்கும் தஞ்சாவூருக்கு சென்று பெண் தேட, சமையல் காண்ட்ராக்ட் வேலைசெய்யும் அட்டாக் பாலு (மன்சூர் அலிகான்), மந்தாரை (கோவை சரளா) தம்பதியினரின் மகளான மகிழினியை (அர்த்தனா பானு) பெண்பார்க்கிறார்கள். இரு குடும்பத்தாருக்கும் பிடித்துப்போக நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்கிறார்கள்.
அட்டாக் பாலு ஊரைச்சுற்றி கடன் வாங்கி வைத்திருக்கும் ஊதாரி அப்பன். பெரிய சமையல் ஆர்டராக பிடித்து கடன் அடைக்கலாம் எனும் கனவில் இருப்பவரை, கடன்காரர்கள் தொல்லை செய்ய, மகிழினியை ஒருதலையாக விரும்பும் எம்எல்ஏ மகன் ஜனா (புதுமுகவில்லன்), கடனை அடைக்க உதவுவதாச் சொல்லி பாலுவின் மனதை மாற்றுகிறார். நிச்சயதார்தத்திற்கு வரும் குழந்தைவேலு குடும்பத்தை பாதி வழியிலேயே திரும்பிப் போகச் சொல்ல, விரக்தியின் விளிம்பிற்கு செல்லும் ஆரவள்ளி, கிணற்றில் குதித்துவிடுகிறார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அட்டாக் பாலுவிற்கு குழந்தைவேலு, உன் பொண்ணையே கல்யாணம் செய்து, உன்னையே அதை பாராட்ட வைக்கிறேன் என்பது போல் சவால் விடுகிறார். அங்கு வருகிறது இடைவேளை.
எம்எல்ஏ மகனின் ஆசை வென்றதா? அட்டாக் பாலு சவாலில் ஜெயித்தாரா? குழந்தை வேலு சவாலில் ஜெயித்தாரா? என்றெல்லாம் சொல்ல விரும்பல. குழந்தைவேலுதான் சவாலில் வெல்கிறார். ஆனால் அது எப்படி என்பதை, தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் கலகலப்பாக கொண்டு சென்று, எதிர்பாராத குட்டி குட்டி சுவாரஸ்ய முடிச்சுகளைப் போட்டு சுபத்தில் முடித்திருக்கிறார் இயக்குநர் வள்ளிகாந்த்.
குடும்பத்தோடு சென்று படம் பார்த்து எத்தன வருஷமாச்சு என்று ஏங்குவோருக்கு நிச்சயம் இந்த படம் ஒரு கலர்புல், காமெடி கலந்த பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் ட்ரீட் என்றே சொல்லலாம்.
இதுவரை சிட்டி பாய் கேரக்டராக இருந்த ஜி.வி.பிரகாஷ், இந்தப்படத்தில் கிராமத்து பையனாக, சிறுநகரத்துப் பையனாக நடித்திருக்கிறார். அவரின் குழந்தை முகத்திற்கு, குழந்தை வேல் கேரக்டர் மிகவும் பொருந்திப்போயிருக்கிறது. அம்மா… அடிக்கடி இந்த மாதிரி தூக்கு போட்டுக்க போகாதம்மா… இதோட 93-ஆவது தடவை என்று சொல்லும்போது, தியேட்டரில் சிரிப்பு சத்தத்தில் காது கலகலக்கிறது. மன்சூர் அலிகானிடம் சவால் விடும்போதும், அவரிடம் போனில் பேச நடுங்கும் போதும் மனிதர் நன்றாகவே நடித்திருக்கிறார்.
கோதண்டமாக வரும் யோகி பாபு, படத்தின் காமெடி ரோலை சிறப்பாக செய்திருக்கிறார். டேய் பன்னி மூஞ்சி வாயா… என்று ஜி.வி.பிரகாஷ் வேறொருவரைச் சொல்ல, யப்பா… என்னை வச்சிகிட்டு இப்படி எல்லாம் சொல்லாதப்பா… என்று அப்பாவியாய் கேட்கையில், தியேட்டரில் சிரிப்பு வெடி.
ஆரவள்ளியாக வரும் சுஜாதா, அம்மாவின் கேரக்டரில் பொருந்திப்போகிறார். மகனுக்கு இப்படி ஆகிருச்சே… ஊர் முகத்துல எப்படி முழிப்பேன் எனும்போதும், உங்க ரெண்டு பேருக்கும் பிரைவஸி வேணுமில்ல… அதாம்மா சண்டை போடறமாதிரி போட்டு, ஊருக்கு போயிட்டேன் அம்மா இடத்தில் ஸ்கோர் பண்ணுகிறார்.
மகிழினியாக வரும் அர்த்தனா பானு தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அழகுப் பதுமை. குறும்புப் பார்வை, குழந்தை முகம் என பாத்திரத்திற்கு ஏற்ற பதமான தேர்வு. வில்லனிடம் சீறும்போதும், அப்பாவிற்காக ஏங்குகிற போதும், கணவனிடம் கொஞ்சுகிற போதும்… அட நம்மவீட்டு பொண்ணு போலவே இருக்கிறாளேப்பா… என்று சொல்ல வைக்கிறார்.
அட்டாக் பாலுவாக வரும் மன்சூர் அலிகானை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடன்காரன்களைக் கண்டால் பம்முவதும், போனைக் கண்டால் ஒளிவதும், மனைவியிடம் மாட்டிக்கொண்டு திணறுவதும், மகளை தவறாகப் பேசியவனின் கையை வெட்டுவதும் என அசல் சமையல்கார்ராக மனிதர் அசத்தி இருக்கிறார். மனைவி, மகளை நம்பும் வெகுளித்தனமான தந்தையின் முகபாவத்தை மனிதர் கொண்டுவந்து நிறுத்தியதற்காக நிச்சயம் அவருக்கு சபாஷ் போடலாம்.
மந்தாரையாக வரும் கோவை சரளா. நீண்ட நாட்களுக்குப்பிறகு திரையில் மனுஷி வெளுத்துக் கட்டி இருக்கிறார். கணவருக்கு பயப்படுவதும், பெண்ணுக்காக மனுஷி பாடாய்ப்படுவதும்… சென்னையை மன்சூரலிகானுக்கு நாள் முழுக்க ஆட்டோவை சுற்றிக்காட்டுவதாகட்டும்… கலகல ரகம்.
புதுமுக வில்லன் ஜனா எம்எல்ஏ மகனாக பைக்கில் பந்தாவாக வருகிறார். இரண்டு மூன்று காட்சிகளில் வசனம் பேசகிறார். இறுதியில் மிரட்ட வருகிறார்.
சண்டாளி பாடல் இதுவரை யூ டியூபில் 8 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். யுகபாரதியின் வரிகளால், ஜி.வி.பிரகாஷின் மெல்லிசையும் சேர்ந்துகொள்ள, பாடல் மெலடியில் மெட்டு கட்டி, செவிகளை வருடிவிட்டு, மனதிற்குள் தங்கிவிடுகிறது. இப்பாடலில் ஒளிப்பதிவு மிக அற்புதம். நீர்த்துளிகளை வைரத்துளிகளாய் பிரித்துக் கோர்த்திருக்கிறது. இரவு நேரத்து கோரைப்புற்கள் முன்பு இருந்த காட்சிகள்... விவேக் ஆனந்தின் ஒளி ஓவியத்தில் கண்களுக்கு விருந்து படைக்கிறது. உருட்டு கண்ணால பாடல் துள்ளலிசை ரகம். குத்தாட்டமும் போட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
வசனம் தனது குருநாதர் பாண்டிராஜை எழுத வைத்திருக்கிறார் வள்ளி காந்த்.
’உங்கை பையனுக்கு கிருஷ்ணர் ஜாதகம்… பொண்ணுங்க இருக்கிற இடத்துலதான் அவன் இருப்பான்…’
‘அட போங்க சாமி… அவன் இருக்கிற இடத்துலதான் பொண்ணுங்க இருக்குது.’
’ட்வென்டி ட்வென்டி மீட்டிங் வச்சுக்கலாம். உனக்காக நான் 20 கி.மீ. வரேன். எனக்காக நீ 20 கி.மீ. வா… ’
’ஓரமா நிக்கறவங்க… ஒளிஞ்சிகிட்டிருக்கவங்க… வேடிக்கை பாக்கறவங்க எல்லாம் சீக்கிரம் வந்து அட்சதையப் போடுங்கோ…’
இப்படி படம் முழுக்க… காட்சிக்கோர்ப்பிற்கு வசனங்கள் கரம் கோர்த்து கலகலக்க வைக்கின்றன.
பாண்டிராஜின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் வள்ளிகாந்த், இந்த படத்தில் தனது தனித்தன்மையை காட்டி இருக்கிறார்.
பாண்டிராஜின் தாக்கம் இல்லை. பிரச்சினையை முன்னே சொல்லி, தீர்வை பின்னே சொல்லும் பாணி செம. தனக்கு ஒரு தேவதை மனைவியாக வரப்போகிறாள். அதற்காக தன்னை வேண்டாம் என்று சொன்ன பெண்களின் வீட்டிற்கு சென்று நன்றி சொல்லும் வித்தியாச ரகம் செம.
திருமணத்திற்கு ஆட்களை வரச்சொல்லி, போகிற போக்கில் கூட்டத்தைக் கூட்டுவது செம செம.
படம் 2 மணி நேரத்தில் முடிந்துவிட்டதே என்ற சிறுகுறையைத் தவிர, ஆபாச காட்கள் இன்றி, அடிதடி சண்டைகள் இன்றி, குடும்பத்தோடு அமர்ந்து படத்தைப் பார்க்க வைத்தது மட்டுமின்றி, வாய்விட்டு சிரிக்க வைத்த இயக்குநர் வள்ளிகாந்திற்கு செம செம செமையான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
2018-ஆம் ஆண்டின் சிறந்த குடும்பத்திரைப்படம் என்ற விருது நிச்சயம் இந்தப்படத்திற்கு உண்டு.
Viewing all 465 articles
Browse latest View live